Thursday, July 29, 2010

உன்னை தற்கொலை செய்யவா?! - பகுதி 8

கெய்ரோ.

எகிப்தின் தலைநகர். ஆப்ரிக்கா கண்டத்துலேயே மிகப்பெரிய நகரம். பழங்கால எகிப்தியர்கள் கட்டிய பிரமிடுகள் அவர்கள் வாழ்க்கை முறைக்கு சான்று. கணிதத்தில் சிறந்து விளங்கியவர்கள். மிகவும் பழமைவாய்ந்த நைல் நதி பாலைவனமாயிருந்த அந்தப்பகுதியையே செழிப்பாக்கியது. எப்போதும் பரபரப்பை தன்னகத்தே கொண்ட அங்கே ஏகப்பட்ட சுற்றுலா பயணிகள் வருவதால் கொஞ்சம் கொஞ்சம் ஆங்கிலம் கற்றுக் கொண்டு பேசும் கைடுகள். மிக முக்கியமாக சொல்லப்போனால் கிரேக்க மன்னன் ஜூலியஸ் சீயரை மயக்கிய பேரழகி கிளியோபாத்ரா வாழ்ந்த நகரம். ஏனோ அன்று நடக்கப்போகும் அந்த சம்பவத்தை தெரிந்து கொண்ட மாதிரி அதிசயமாய் வானம் தூறல் போட்டுக் கொண்டிருந்தது. மங்கிய நிலவொளியில் வீட்டுக்கு விரைவாக செல்லும் உத்வேகத்தில் பலரும் ரோட்டை ஆக்ரமிக்க ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல்.

எதிர்பாராமல் வந்த மழையை நொந்துக் கொண்டே தன் அந்த நூலகத்தை விட்டு வெளியே வந்தாள் நோரா. அழகான பெயர் அவளைப்போலவே. இருபத்திரண்டு முடிந்து இருபத்து மூன்றை நெருங்கும் வயது. நீண்ட கால்கள். கூர்மையான நாசி. கிளியோபாத்ராவை ஒத்த கரிய ஆனால் களையான நிறம். பார்ப்பவர் எவரையும் சுண்டி இழுக்கும் பெரிய கண்கள், மெல்லிய உதடுகள். அந்த பல்கலைக்கழக வளாகத்திலேயே அவளைத் தெரியாதவர் யாரும் இருக்க முடியாது.

அன்று ஏனோ ஆராய்ச்சியில் நீண்ட நேரம் மூழ்கி இருந்ததால் ரொம்பவே நேரமாகிவிட்டது. மிகப்பழமையான கெய்ரோ பல்கலைகழகத்தில் அகழ்வாராய்ச்சித் துறையில் முதுகலை படிக்கிறாள். சிறுவயதிலிருந்தே பிரமிடுகளைப்பார்த்து வாழ்ந்ததால் ஏனோ வரலாறு மேல் அளவு கடந்த ஆர்வம். அடம் பிடித்து இந்தப் படிப்பை தேர்ந்தெடுத்திருந்தாள். பெற்றோர் சொந்த ஊரில் இருக்க கெய்ரோவில் சின்னதாய் ஒரு வீடை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தாள். வெளியே வந்தவள் கைக்கடிகாரத்தைப் பார்க்க மணி ஒன்பதை தொட்டுக் கொண்டிருந்தது.

தூரத்தில் விளக்கொளியில் பல்கலைக்கழகத்தின் பிரதான கட்டிடத்தின் கோபுரம் விளக்கொளியில் மின்னிக் கொண்டிருந்தது. சுற்றிலும் இடமே வெறிச்சோடியிருந்தது.

கைப்பையை தலைக்குப் பிடித்துக் கொண்டு ஓரமாக ஓடினாள். சற்று தூரத்திலேயே மெட்ரோ ரயில் நிலையம். ஐந்து நிமிட ஓட்டமும் நடையுமாக ரயில் நிலையத்தை அடைந்தாள். ஆளரவமின்றி இருந்தது. ஆங்காங்கே இரண்டு மூன்று பேர் நின்றுக் கொண்டிருந்தனர். சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த போது ரயில் வந்து நிற்க ஏறினாள். பல்கலைக்கழகத்திலிருந்து அவள் தங்கி இருக்கும் இடமான எல்மௌனிப் செல்ல பதினைந்து நிமிடத்திற்கு மேலாகும்.

சொற்ப ஆட்களே அமர்ந்திருக்க தன் ஸ்கர்ட்டை சரி செய்து கொண்டு கண்மூடி அமர்ந்தாள். கொஞ்ச நாளாகவே அவளுக்கு பைத்தியம் பிடித்ததைப் போலிருந்தது. ரயில் முன்னோக்கி செல்ல அவள் நினைவுகள் பின்னோக்கி சென்றது. அவனையும் இப்படித் தான் ஒரு வருடம் முன்பு இதே ரயில் நிலையத்தில் சந்தித்தாள். அழகானவன். பார்த்த மாத்திரத்திலேயே பிடித்திருந்தது. முதலில் பேசத் தயங்கினான். பின் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். பெயர் பொம்மானி. ஷோப்ராவில் ஏதோ சாப்ஃட்வேர் கம்பெனியில் வேலை.

சில விஷயங்கள் நம்மை மீறி நடக்கும். அது போல தான் அவர்கள் காதலும். அதுவாய் நடந்தது. அவளையும் மீறி நடந்தது. தன் படிப்பில் கவனம் செலுத்த முயன்ற அவளை அவன் கொஞ்சம் கொஞ்சமாய் ஈர்த்தான். அவனது வசீகரப் புன்னகையும் வெடுக்கென்ற பேச்சும் யாரையும் கவரும். அவள் காதல் வயப்பட்டதில் தவறொன்றும் இல்லை.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் காதல் பறவைகள் சிறகடித்துப் பறந்தனர். வேலை நேரம் போக மீதி நேரத்தில் பேசுவதே முழுமுக்கிய வேலை. மாலை நேரங்களில் மஞ்சள் வண்ண வானத்தின் பிண்ணனியில் நைல் நதியோரமாய் நடப்பது இருவருக்கும் மிகவும் பிடித்த விஷயம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ஒரு நாள் அவளிடம் அரேபிய மொழியில்,

“ஹே நோரா. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..?!”

புரியாமல் குழப்பமாய் அவனைப் பார்த்தாள்.

“எங்க கம்பெனியில என்னை ரெண்டு மாசம் வெளிநாடு போக சொல்றாங்க. ஐரோப்பாவுக்கு. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல”

சட்டென்று கலவரப்பட்டாள் நோரா. பிரிதல் என்ற வார்த்தையே வலி கொடுத்தது. பெற்றோரைப் பிரிந்த போது கூட இவ்வளவு விசனமில்லை. ஏனோ பொம்மானியுடன் அவ்வளவு ஐக்கியமாயிருந்தாள்.

“என்ன முடிவு பண்ணிருக்க?”

“தெரியல. இவ்ளோ நாளா இந்த மாதிரி சூழ்நிலையை நெனச்சு கூட பார்க்கல. ஆனா எனக்கு வேற வழி தெரியல…”

முடிவெடுத்த பிறகு தான் தன்னிடம் சொல்கிறான் என்பது புரிந்தது. இரண்டு மாதம் தானே. சட்டென ஓடிப்போய்விடும். சம்மதமாய் தலையாட்டினாள். அவன் பயணப்பட இன்னும் இரு வாரங்களே இருந்தன. அந்த இருவாரமும் விடுப்பு எடுத்துக் கொண்டு அவன் கூடவே தங்கி இருந்தாள்.

கிளம்பும் நேரம் வரும் போது துக்கம் தொண்டையை அடைக்க வழிஅனுப்பினாள். ஆயிற்று. அவன் போய் சேர்ந்தவுடன் தினமும் தொலைப்பேசியில் அழைப்பான். அன்று நடந்த கதை முழுதும் ஒப்பிப்பான். நாளாக ஆக பேசும் நேரம் குறைந்தது. வேலைப்பளுவாய் இருக்கும் என்று விட்டுவிட்டாள்.

இதோ இரண்டு மாதம் என்று சொன்னவன், இன்னும் இரண்டு மாதம் இருக்க வேண்டியதாய் போயிற்று. இன்று நள்ளிரவு வந்திறங்கப் போகிறான். நினைவுகளிலிருந்து மீண்டாள். நினைக்க நினைக்க சந்தோஷமாய் இருந்தது. ஸ்டேஷனில் இறங்குவதற்கும் அவள் செல்பேசி சிணுங்குவதற்கும் சரியாய் இருந்தது. அவன் எண் தான்.

“ஹே.. எப்படி இருக்க..?”

“என்னப்பா கிளம்பியாச்சா? பெட்டியெல்லாம் எடுத்து வச்சாச்சா?”

“ஓ அதெல்லாம் எப்போவோ ரெடி ஆயாச்சு. இரண்டு மாசம்னு சொல்லி நாலு மாசமாச்சு. ஒரு வழியா தப்பிச்சு வர்றேன்.”

“தப்பிச்சு வர்றியா? நீ அனுப்பின மெயில்ல எல்லாம் ஐரோப்பிய அழகிய பத்தி தான் வர்ணிப்பே. இப்போ எனக்காக பேச்ச மாத்தறியா?”

“சீச்சீ.. அவங்கல்லாம் சும்மா பாக்குறதுக்கு தான். ஒவ்வொருத்தியும் எவ்ளோ உசரமா இருக்காங்க. என்னிக்கு இருந்தாலும் நீ தான் என் தேவதை.”

அந்த நேரத்திலும் முகம் சிவந்தாள். “சரி. எத்தனை மணிக்கு ப்ளைட் வரும்?”

“பாத்தியா அத சொல்லத் தான் கூப்பிட்டேன். நான் வந்து இறங்க எப்படியும் லேட்டாயிடும். தூக்கம் கெட்டு ஏர்போர்ட்டுக்கு வர வேண்டாம். நான் சொல்வேனே என் சின்ன வயசு ஸ்நேகிதன் அவன் ஊரிலிருந்து வந்திருக்கிறான். அவன் வருவான். ஸோ.. நான் இறங்கியதும் உன்னைக் கூப்பிடுறேன். நாளைக்கு மீட் பண்ணலாம்”

“என்னப்பா இப்படி சொல்ற.. உன்னைப்பார்த்து நாளாச்சு” நோரா இழுக்க..

“அதான் நாளைக்குப் பார்க்கலாம்னு சொல்றேன்ல. சரி.. நேரமாச்சு.. வந்தவுடன் கால் பண்றேன்.உனக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் காத்திருக்கு” போனை வைத்து விட்டான்.

முகத்தில் வெட்கம் கலந்த புன்னகையுடன் பிரபலமான அந்த அரேபியப்பாடலை முணுமுணுத்துக் கொண்டே வீட்டை யடைந்தாள்.

சாப்பிட்டுவிட்டு தூக்கம் வராமல் நேரத்தை ஓட்டிக் கொண்டிருக்க பின்னிரவில் அவன் கூப்பிட்டான்.

“ஹே.. ஒரு வழியா வந்து சேர்ந்தாச்சு. நிம்மதியா தூங்கு. நாளைக்கு சந்திப்போம். நானே கூப்பிடுறேன்”

மறுநாள் காலை. வகுப்பிற்கு விடுப்பு சொல்லி இருந்தாள். காலையிலேயே அவன் வீட்டுக்குப் போகலாமா? அவன் நண்பனும் இருப்பதாய் சொன்னானே. சரி. அவனே கால் பண்ணட்டும். காதலுடன் பதைபதைப்பையும் துணைக்கு சேர்த்துக் கொண்டு காத்திருக்கலானாள். மணி பத்தாகியது. பதினொன்று ஆயிற்று. அழைப்பு வரவே இல்லை. பொறுத்துப் பார்த்த அவள் அவன் எண்ணை அழைக்க செல்பேசி அணைக்கப்பட்டிருந்தது. அழுகை அழுகையாய் வந்தது. இதற்காகவா காலையிலிருந்து சாப்பிடாமலேயே காத்திருந்தாள்.

சரியாய் பதினொன்னரை மணிக்கு புதிதாய் ஒரு நம்பரிலிருந்து போன். எடுத்து,

“ஹலோ..”

“ஹே.. நான் தான். பொம்மானி. பப்ளிக் பூத்திலிருந்து பேசறேன். ஒரு முக்கியமான விஷயமா போலிஸ் ஸ்டேஷன் போய்கிட்டு இருக்கேன். இன்னும் இரண்டு மணிநேரத்தில் கூப்பிடுறேன்.”

குரலில் அவசரமும் பதைபதைப்பும் தெரிந்தது. பயந்து போனவளாய்..

“என்னாச்சு.. என்னாச்சுனு சொல்லு? நான் வரவா”

“எல்லா விவரத்தையும் சொல்றேன். நீ வர வேண்டாம். சீக்கிரமே கூப்பிடுறேன்..” வைத்துவிட்டான்.

தலைகால் புரியாமல் என்ன செய்வதென்று யோசித்த அவள் போலிஸ் ஸ்டேஷன் கிளம்பிவிட்டாள்.

உள்ளே நுழைகையில் பொம்மானியின் கலவர முகம் தெரிந்தது. அங்கிருந்தவர்கள் பரபரப்பாக பேசிக் கொண்டார்கள்.

“ரொம்ப நாள் கழிச்சு நடந்திருக்கு இது. அந்த ரயில் போட்டப்பவே சொன்னாங்க. ஆபத்துன்னு. யாரும் கேக்கல. இன்னும் எத்தனை பேரோ?”

இந்தக் கதையை இதுவரை படிக்கறவங்க மாதிரி தான் அவளுக்கு என்ன தான் நடந்தது, நடக்கிறதுன்னு சுத்தமா புரியல. காவல் அதிகாரி முன் உட்கார்ந்திருந்த பொம்மானி கைகுலுக்கி எழுந்து திரும்பும் போது இவளைப் பார்த்தான். அவன் முகம் ஏக களைப்புடன் இருந்தது.

அவளை பத்திரமாய் வெளியே கூட்டிக்கிட்டு வந்தான்.

“ஹே.. என்னாச்சு.. சொல்லுப்பா? எதுக்கு இங்க வந்தே..”

ஆயாசமாய் அவளைப் பார்த்தான். “காலையிலேர்ந்து சாப்பிடல. வா. எங்கியாவது சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்”

அந்த கடைக்குள் நுழைந்து ஆளுக்கொரு ஜூஸ் ஆர்டர் செய்துவிட்டு பேச ஆரம்பித்தான்.

“நான் இறங்கினதுலேர்ந்தே நேரம் சரியில்ல. என் நண்பன் வரான்னு சொன்னேன்ல. அவன் வந்து பிக்கப் செஞ்சான். ஊரில கொஞ்சம் பழக்கம். இங்க வேலை விஷயமாய் வந்திருக்கிறான். ரொம்ப நாளா பணக்கஷ்டம். காலையில நான் தூங்கிட்டு இருக்கறப்போ எழுப்பி அவசரமா யாரையோ பார்க்க போகணும். உன் மொபைல எடுத்துட்டு போறேனு சொன்னான். சரின்னு தூங்கினேன். ஒரு மணிநேரம் கழிச்சு வீட்டுக்கு போலிஸ் வந்தாங்க.”

“என்னாச்சு…?” தவிப்பாய் அவள் கேட்க மயக்கத்திலிருந்த அவன் ஜூஸைப் பருகிக் கொண்டே,

“யாரோ தெரியாம ரயில் தண்டவாளத்துல விழுந்துட்டாங்க. அது உங்க நண்பன் தானானு அடையாளம் காட்ட முடியுமானு சொன்னாங்க. ஒன்னுமே புரியல. போனா அவன் கருகி கரியா இருந்தான்.”

“உன் நண்பன் தானா அது… என்னாச்சு?” பயமும் அழுகையும் வர அவள் கைகளைப் பற்றி ஆசுவாசப்படுத்தி,

“ஆமா. நடக்கும் போது தவறி விழுந்திருக்கலாம்னு சொல்றாங்க. அவன் பக்கத்திலேயே கொண்டு போன என் செல்போனும் கருகி இருந்துச்சு. பேசிக்கிட்டே கவனிக்காம விழுந்திருக்கலாம்னு சொன்னாங்க. தண்டாவாளத்துக்கு நடுவுல கரண்ட் போறதால யாரும் விழுந்திடக்கூடாது தடுப்பு போட்டிருந்தாங்களாம். ஏதோ பராமரிப்புப் பணின்னு அந்த இடத்துல மட்டும் தடுப்பை எடுத்திருந்தாங்களாம். அதுல போய் விழுந்துட்டான்.”

“இப்போ என்ன செய்யப் போறீங்க?”

“ஏற்கனவே அவன் ரொம்ப கஷ்டத்திலிருந்தான். அவன் அப்பா அம்மாகு சொல்லிட்டாங்க. தற்கொலையா இருக்கலாம்னு யோசிக்கறாங்க. எதுவா இருந்தாலும் கொஞ்ச நாள் கழிச்சு தான் தெரியும்..ச்சே.. வந்து இறங்கினதுமே இப்படியா?” அங்கலாயித்தான் பொம்மானி.

அப்போது போலிஸ் ஸ்டேஷனில் கருகிய நிலையில் இருந்த இறந்தவனின் உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த அதிகாரி அந்த செல்போனிலிருந்து வெளியே துருத்திக் கொண்டிருந்த ஆண்டெனா போலிருந்த சின்னக் கம்பியை அதிசயமாய் பார்த்தார்.

பெங்களூர்.

எத்தனை நாளாய் அடைப்பட்டிருக்கிறோம் என்று தெரியாமல் தவித்தான் வைபவ். அது ஒரு சவுண்ட் ப்ரூஃப் அறை. கத்துவது வெளியே கேட்காது. கடத்தி வரப்பட்ட நாளில் மயக்கமானவன் முழிக்கும் போது இங்கே இருந்தான். வசதிகளுக்கு ஏதும் குறைவில்லை. ஆனால் எதற்காக கடத்தப்பட்டோம் என்பது மட்டும் தெரியவில்லை. பகலும் இரவும் எப்போது வருகிறதென்பதே தெரியவில்லை. அங்கிருந்த ப்ரிஜ்ஜில் வேண்டிய பழங்களும் ரொட்டியும் தண்ணீரும் இருந்தது. ஒருவாரத்திற்கு தாங்கும். கதவு எந்நேரமும் பூட்டப்பட்டிருந்தது. அறையை ஓட்டியே அட்டாச்ட் பாத்ரூம். மாற்றிக் கொள்ள துணிமணி. ஆனால் வெளியுலகத் தொடர்பு மட்டும் துண்டிக்கப் பட்டிருந்தது. அவன் கையிலிருந்த வாட்சையும் செல்போனையும் எடுத்துவிட்டுருந்தனர்.

எதுவானாலும் சரி ஒருவாரத்திற்கு மேல் இருக்கப் போவதில்லை என்று புரிந்தது. யாராய் இருக்கும் என்று யோசித்ததிலேயே தலையை வலித்தது. அவன் பொழுது போக்க புத்தங்கள். அதுவும் அவனுக்கு விருப்பமான நாவலாசிரியர்கள். நேரம் கழிக்க அவன் அந்த புத்தகத்தை எடுத்த போது ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருந்த அந்த வீட்டின் காம்பௌண்டுக்குள் அந்த மாருதிவேன் நுழைந்தது.

Tuesday, July 20, 2010

Inception

படம் வந்தவுடனே பார்த்துவிட வேண்டும் என்று முடிவு பண்ணியாயிற்று. மெமண்டோ, டார்க் நைட் எடுத்த கிரிஸ்டோபர் நோலன் இயக்கம். டி காப்ரியோ நடிப்பு. கேட்கவும் வேண்டுமா?




கதையைப் பற்றி இங்கே அலசமுடியாது. கண்டிப்பாக அனைவரும் படத்தை ஒருமுறையாவது பார்க்கவேண்டும். மீண்டும் ஒரு முறை பார்க்கத் தோன்றும். ஆரம்பத்திலிருந்து கடைசிவரை நம்மை சீட்டுடன் கட்டிப் போடுவது இயக்குநரின் சாமர்த்தியம்.

ஆரம்பத்திலேயே க்ளோஸப் காட்சியில் கடலலைகள் நம்மை ஈர்க்கின்றன. அப்படி என்ன தான் சொல்ல வர்றாங்கனு ஆர்வம் மேலிடுகிறது. கடற்கரையோரமாக விழுந்துகிடக்கும் காப் (டி காப்ரியோ)வை ஒரு துப்பாக்கி தொடுகிறது. அங்க ஆரம்பிக்கும் படம் சடசடவென விரிந்து நம்மை ஒரு பிரம்மாண்ட அனுபவத்திற்கு தயார் செய்கிறது. மற்றபடி படத்தை திரையில் காண்க.

கிரிஸ்டோபர் நோலனை ஒரு விஷயத்துக்காக பாராட்டியே தீர வேண்டும். கஷ்டமான திரைக்கதையை அழகாக விவரிக்கிறார். இரண்டு மணிநேரத்துக்கும் மேல் ஓடும் இப்படம் ஆரம்பத்திலிருந்து கனவு பற்றிய விவரணைகளுடன் எல்லோருக்கும் புரியும் படி தெளிவாக விரிகிறது. ஒவ்வொரு கட்டத்தையும் நமக்கு புரிய வைத்த பிறகே அடுத்த கட்டத்திற்கு போகின்றார். அதுவே அவரின் சிறந்த யுக்தி எனவும் கூறலாம். எல்லாம் எனக்குத் தெரியும் என்ற மனப்பான்மையை நமக்குள் ஏற்படுத்தி வரும் திரைக்கதையில் இறுதிக்காட்சி சம்மட்டியால் அடிப்பது போல மாயையை ஏற்படுத்துகிறார். எல்லாம் முடிந்தது என்று நினைத்திருக்க இல்லை என்று சொல்லாமல் சொல்கிறார். படம் முடிகையில் நிறைய பேர் ஆச்சர்யத்தாலும் குழப்பத்தாலும் ஆர்வத்தாலும் கத்திய காட்சியை பார்க்க முடிந்தது. இதற்கே அவருக்கு ஒரு சபாஷ். “புரிந்த மாதிரி இருந்துச்சு… கடைசியா புரியல..” போன்ற சம்பாஷணைகளை நிறைய திரையரங்கில் கேட்கலாம்.

மற்றபடி படத்தில் நடித்த அனைவரும் படத்தின் தன்மையை உணர்ந்து மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். டிகாப்ரியோ வழக்கம் போல குழம்பிய கதாபாத்திரத்தை திறமையாக கையாண்டுள்ளார். அவருக்கு இன்னுமோர் மகுடம் இந்த படம். அப்புறம் அவரின் குழுவில் வரும் அட்ரையனாகட்டும், யூசுப்பாகட்டும், சைட்டோவாகட்டும்..எல்லோரும் நன்றாக நடித்திருக்கின்றனர். மேலும் படத்தில் வரும் புவிஈர்ப்பை மிஞ்சிய சண்டைக்காட்சியில் சுழலும் அறையில் நடக்கும் சண்டைக்காட்சி காண அவ்வளவு அழகு. அதிகமாக கிராஃபிக்ஸ் உபயோகிக்காமல் நடிகர்களே அதை செய்திருப்பதும் சிறப்பு.

குறிப்பாக சொல்ல வேண்டியது ஒளிப்பதிவு மற்றும் கலை. கனவுகளை வடிவமைப்பது மிக கடினம். ஆனாலும் நம்பும் படி திறமையாக செய்கிறார்கள். அதிலும் பாரிஸ் நகரம் மடித்து வைக்கப்பட்டது போன்றதொரு காட்சி.. நம் கண்கள் விரிகிறது. இப்படி பார்த்து பார்த்து பூரிக்க நிறைய காட்சிகள்.

கண்டிப்பாக சயின்ஸ் பிக்ஷன் கதைகளை விரும்பி பார்ப்பவர்களுக்கு இந்தப்படம் மிகவும் பிடிக்கும். படம் பார்த்தபின் ஏறக்குறைய ஒரு மணிநேரம் படத்தின் காட்சிகள் நம் கண்முன்னே வருவது தவிர்க்க முடியாதது. அந்தளவுக்கு நம்மை படத்துள் ஒன்ற செய்து முடிந்தபின்னும் பல கேள்விகளை மனதில் ஏற்படுத்துவதில் ஜொலிக்கிறார் நோலன்.

முடிவுக்கு இரண்டு மூன்று காரணங்கள் எனக்குத் தோன்றுகின்றன. ஆங்காங்கே அதை கதையினூடே அவர் காண்பித்துள்ளார். ஆனாலும் இன்னமும் முடிவைப் பற்றிய விவாதங்கள் பல தளங்களிலும் நடந்து கொண்டிருக்கின்றன.

இன்செப்ஷன் – கண்டிப்பாக அனுபவிக்க வேண்டிய படம்.

Saturday, July 17, 2010

மதராஸப்பட்டினம்

மதராஸப்பட்டினம்.. கொஞ்ச நாளாகவே இந்தப்படத்தை தொடர்ந்துக்கிட்டு இருக்கேன். படத்தில் வெள்ளைக்கார அம்மிணி நடிக்குதுன்னு கேள்விப்பட்டு இணையத்துல தேடி கண்டுபுடிச்சு, ப்ளாகெல்லாம் படிச்சு, ரொம்பவே புடிச்சுப் போச்சு. அழகுப் பதுமையா தான் இருக்குனு படம் வெளியானப்புறம் பாக்கலாம்னு முடிவுபண்ணியாச்சு. இன்னிக்கு போயாச்சு. நிற்க.

படத்தின் கதையென்று பார்த்தால் டைட்டானிக் கொஞ்சம், லகான் கொஞ்சம், வெள்ளைக்கார பெண்-இந்திய பையன் காதல் கொஞ்சம் - எல்லாம் சேர்ந்த கலவையே படம். பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படி வேறெதுவும் இல்லாததால் அடுத்த விஷயத்திற்குப் போவோம்.

திரைக்கதை.. படம் 1945-ல் நடப்பதாய் வருகிறது. அதற்கேற்றாற் போல் திரைக்கதை. அந்த கால கட்டத்தில் நடந்த சுதந்திரப்போராட்டத்தை மேலோட்டமாக காண்பித்தது ஆறுதல். ஆயினும் ஆர்யாவிற்கும் ஏமிக்கும் வந்த காதல் அப்படியே போகுது பெரிதாய் ஏதும் சம்பவங்களில்லாமல். அதனால் ஆங்காங்கே தொய்வு ஏற்படுவது போல் தோன்றுகிறது. ஆனாலும் நம்மை முழுமையாக படத்தோட ஒன்றவைக்குது அந்த காதல். அவ்வளவு ரசனையோடு எடுக்கப்பட்டிருக்கிறது. சரளமாக காமெடி தூவப்பட்டிருக்கிறது...நம்மை படத்தோடு ஒன்ற வைக்க.

இசை.. ஜி.வி.ப்ரகாஷ். பாடல்களில்..எம்ம துரையம்மா மற்றும் ததநாதீன டூயட் நல்லாருக்கு. பிண்ணனி இசைசேர்ப்பு நல்லா இருக்கு.

படத்தின் முக்கிய பலமே கலை மற்றும் ஒளிப்பதிவு. ஒளிப்பதிவு தெளிவாய் இருந்தது, நீரவ் ஷா, இந்த காலத்தையும் அந்த காலத்தையும் மாறுபட்ட கலரில் உறுத்தாமல் காண்பித்தது சிறப்பு. அதிலும் அந்த கால மதராஸப்பட்டினத்தின் காட்சிகள் அழகு. கலை மிக அற்புதம். அப்படியே அந்த கால சென்னை நம் கண்முன் தெரிகிறது. ஆங்காங்கே கோர்க்கப்பட்ட க்ராஃபிக்ஸ் எதுவும் உறுத்தலாய் தெரியவில்லை.ஒவ்வொரு விஷயத்துக்கும் நிறையாஅராய்ச்சி செய்திருக்கிறார்கள். அந்த கால கட்டிட அமைப்பு, சென்னையின் தேம்ஸ் நதி, வண்ணான் பேட்டை - இப்படி பல இடங்களும் அழகாக இருக்கிறது. கதாநாயகி வந்திறங்கும் போது அந்தப் பெட்டியில் டாடா ஏர் சர்வீஸ் என்ற அட்டை தொங்குவதும், தியேட்டரில் கண்ணம்மா திரைப்படம் ஓடுவதும் என.. கவனித்து செய்திருக்கிறார்கள்.

ஆர்யா - உடல் ஏற்றி லகான் அமீர்கானை நினைவுபடுத்துகிறார். உடையும் அதே மாதிரி இருந்தது சற்றே அலுப்பு தட்டியது. தன் வேலை அழகாக செய்திருக்கிறார் ஹீரோத்தனங்கள் இல்லாமல். ஹனீபா, நாசர், அவரவர் வேலைகளை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். ஹனீஃபா வரும் காட்சிகளில் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் இவ்வளவையும் தூக்கி சாப்பிட்டது ஏமி ஜாக்ஸனும், இன்றைய கால ஏமியாய் வரும் அந்த பாட்டியும். படம் முழுக்க இவர்களே வியாபித்திருக்கிறார்கள். ஏமி இன்னும் டீன் ஏஜ் தாண்டவில்லை. ஆயினும் அபார நடிப்பு. முழு திரைக்கதையையும் தன் தோளில் ஏற்றி பயணித்திருக்கிறார். அந்தப்பேசும் கண்களாகட்டும், சிரிப்பாகட்டும்..உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறார். என் ஓட்டு இந்த அம்மிணிக்குங்கோ.. அழகு மட்டுமில்லை.. தமிழில் பாடவும் லிப் சிங்க் செய்தது அருமை. ஹிஹி.. ஜொள்ளு தானுங்கோ.. ஆனாலும் ஒர்த் இட். இதையெல்லாம் பார்க்கும் போது ஏன் நம்மூர் நடிகைகளுக்கெல்லாம் நடிக்க வரலேன்னு தோணுது. முதல்படத்திலேயே ஏகப்பட்ட க்ளோஸப் காட்சிகளில் அநாயசமாக வெளுத்து வாங்கியிருக்கிறார். ஒவ்வொரு உடையிலும் தேவதை வலம் வருவது மாதிரி... சோகக் காட்சியிலேயும் அருமை. அதே மாதிரி அந்த பாட்டி, நிலைக்குத்திய கண்கள், பரிதவிக்கும் கண்கள் என கண்களிலேயே நடித்திருக்கிறார். இவர்களிடம் கதை சொல்லி இத்தனை தேர்ந்த நடிப்பை வாங்கிய விஜயை எத்தனைப் பாராட்டினாலும் தகும்.

படத்தின் திரைக்கதையில் இருக்கும் சின்ன சின்ன குறைகளையும் இந்த இருவர் சரிகட்டி விடுகிறார்கள். மொத்தத்தில் ஏற்கனவே பழக்கப்பட்ட கதையை அந்தகால படமாக தந்திருக்கிறார்கள்.. ஏமிக்காக கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.

எல்லாவற்றையும் தன் திறம்பட கோர்த்த இயக்குநர் விஜய்க்கு ஒரு சபாஷ்.

(பெங்களூரில் ஏமிக்கு ரசிகர் மன்ற அமைக்கலாம் என்றிருக்கிறேன். நான் தான் தலைவர். செயலாளர் பொறுப்பாளர் பதவி காலியாக இருக்கிறது. விண்ணப்பிப்போர் விண்ணப்பிக்கலாம்).

Tuesday, July 6, 2010

உன்னை தற்கொலை செய்யவா?! - பகுதி 7

கி.பி. 1895.



நியூயார்க் நகரம். இன்றைய கால நகரத்தைப் போல இல்லை. அது ஜூன் மாதத்தில் ஒரு நாள். தெருவில் குதிரை பூட்டிய சாரட் வண்டிகளும் ட்ராம் வண்டிகளுக்காக போடப்பட்டிருந்த இருப்புப் பாதைகளும் அமையப்பெற்ற அழகை பறைசாற்றின. கோட் சூட் அணிந்த கனவான்களும் அவர்களின் தரையைப் பெருக்கும் வகையில் நீளமான கவுன் அணிந்த இல்லத்தரசிகளும் குதிரைவண்டியில் ஏறி பயணிக்கும் காட்சி சர்வசாதாரணம். கப்பல் வணிகமும் இதர வணிகமும் அந்நகரை பேர் பெற்ற நகராக்கியிருந்தது. அவ்வப்போது கப்பலில் வந்திறங்கும் பொருட்களை வாங்க நாடெங்கிலும் இருந்து வரும் வியாபாரிகள் கூட்டம் அலைமோதும்.

(1895-ம் காலத்திய நியூயார்க்)

பிரபலமான ஹூஸ்டன் தெருவில் இருந்தது அந்த இரண்டு மாடி கட்டிடம். இரண்டாம் மாடியில் மங்கலான விளக்கு வெளிச்சத்தில் அந்த நபர் தீவிரமான வேலையிலிருந்தார். எவ்வளவு நேரம் அப்படி இருந்திருப்பாரென்று அவருக்குத் தெரியாது. சிறுவயதிலிருந்தே அப்படி தான். அவரது பயணம் நாடுகள் கடந்தது. 1856ல் செர்பியாவில் பிறந்து பின் ப்ரான்ஸ் சென்று படிப்படியாக முன்னேறி இப்போது அமெரிக்காவில். இதுவரையிலுமே அவர் செய்திருக்கும் சாதனைகள் ஏராளம். ஆயினும் அதைப்பற்றியெல்லாம் அக்கறைப்படாமல் அந்த கடின செய்முறையில் ஈடுபட்டிருந்தார். உண்மையிலேயே அவருக்கு அறிவியலில் இருந்த திறமை அதை பிரசுரிப்பதில் இல்லை. இதனாலேயே பல கண்டுபிடிப்புகளை அவர் விட்டுக் கொடுக்க வேண்டியதாயிருந்தது. அவர் நிக்கோலா டெஸ்லா. அவரின் எண்ணற்ற கண்டுபிடிப்புகளுள் குறிப்பிடத்தக்கது ரேடியோ. ஆம். அவர் தான் ரேடியோவிற்கான உரிமையை பெற்றவர்.

அவர் தான் அந்த நேரத்தில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். இரவு மணி எட்டை தாண்டியிருந்தது. சாப்பிட்டிருக்கவில்லை. இன்னும் சற்று நேரத்தில் தெரு முனையிலுள்ள பேக்கரியை மூடிவிடுவார்கள். அவரின் ஆராய்ச்சிக் கூடமே அவரின் தங்குமிடமும். எப்போதும் உடல்நலத்திலும் சுத்தத்திலும் மிகவும் அக்கறை கொண்டவர். ஆயினும் அன்று மிகமுக்கிய வேலையில் ஈடுபட்டிருந்ததால் சாப்பிடவும் தோணாமல் இருந்தார்.


(டெஸ்லாவின் சோதனைக்கூடம்)

சற்று நேரத்தில் அவர் அறைக்கதவு தட்டப்பட்டது. கவனம் கலைந்து கதவைத் திறந்தால் நீண்ட அங்கி அணிந்த அந்த நபர் புன்சிரிப்புடன் நின்றிருந்தார். அதுவரை இருந்த களைப்பெல்லாம் நீங்கி அவரை வரவேற்றார் டெஸ்லா.

உள்நுழைந்த அந்த நபர் சுற்றும் முற்றும் பார்த்தார். சோதனைக்கூடம் சுத்தமாய் இருந்தது. அழுக்கைக் கண்டால் டெஸ்லாவிற்கு அலர்ஜி என்பது அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. டெஸ்லாவை இதற்கு முன் ஒரு முறை தான் சந்தித்திருக்கிறார். இரு வாரங்களுக்கு முன் நடந்த சந்திப்பு அது.

சம்பிரதாயமாய் வரவேற்ற டெஸ்லா அவர் கையில் இருந்த ரொட்டி பாக்கெட்டைப் பார்த்து புன்னகைத்தார். அவர் வருவது கூட மறந்து போய் எதுவும் வாங்கி வைக்கவில்லை. செர்பிய வாடை அடிக்கும் ஆங்கிலத்தில் பேச்சைத் தொடங்கினார்.

“வாங்க. என் அழைப்பை ஏற்று வந்தமைக்கு மிக்க நன்றி.”

தலையில் இருந்த முண்டாசை சரி செய்து கொண்டே திட்சன்யமான பார்வையில் கனிவாய் அவரைப்பார்த்து புன்னகைத்தார் அவர்.

“நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அன்று உங்களுடன் நடத்திய உரையாடல் தான் என்னை இந்தளவுக்கு கொண்டு வந்துள்ளது.”

“உண்மையில் நாம் இருவரும் சாராவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும்”

மௌனமாய் தலையசைத்தார் அந்த நபர்.

அவர் நினைவில் கடந்த இரு வருடத்திய சம்பவங்கள் ஓடின. இருவருடங்களுக்கு முன் அமெரிக்கா நாடே விழாக் கோலம் பூண்டிருந்தது. உலகிலிருந்து பெரிய பெரிய தலைவர்கள் எல்லோரும் வந்திருந்தனர். எல்லோருடைய பேச்சும் மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அந்த நபரும் அழைக்கப்பட்டிருந்தார். இளையவராயிருந்த அவரைப்பார்த்து எல்லோரும் ஆச்சர்யப்பட்டனர். மாபெரும் கூட்டத்தைப்பார்த்து சிறிது கலக்கமிருந்தாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல் எழுந்த அவர், ‘அமெரிக்க சகோதரர்களே சகோதரிகளே’ என விளித்தது தான். அங்கு கூடியிருந்த மாபெரும் கூட்டமே எழுந்து நின்று கரகோஷம் எழுப்பியது. சத்தம் அடங்க இரண்டு நிமிடங்களுக்கும் மேலானது.

அவர் சுவாமி விவேகானந்தா.

இந்தியாவையும் இந்து பௌத்த மதங்களைப்பற்றியும் பேச வந்திருந்தார் அவர். அன்று அவர் ஆற்றிய உரையும் அதற்கு மேற்கோள் காட்டி அவர் பேசிய பகவத் கீதையும் பலரையும் ஈர்த்தது. அவரில் ஒருவர் சாரா பெர்ன்ஹார்ட். ப்ரெஞ்ச் நாடக நடிகை. சிறுவயதிலிருந்தே நாடகத்தில் பால் ஈர்ப்பு கொண்டவரான அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறந்த நாடக நடிகை என பெயர் பெற்றவர்.

இருமுறை விவாகரத்து பெற்றிருந்த நிலையில் தான் சுவாமி விவேகானந்தாவின் பேச்சினால் ஈர்க்கப்பட்டார் சாரா. அந்த பிரபலமான உரைக்குப் பின் பல இடங்களில் சொற்பொழிவாற்றினார் நரேந்திரநாத். 1895ம் வருடம் நியூயார்க் நகரில் இருமாதங்கள் வேதாந்தம் பற்றி வகுப்புகள் எடுத்த போது நரேந்திரநாத்திற்கு அறிமுகமானாள் சாரா. ஒரு நாள் சுவாமியிடம் சாரா,

“சுவாமிஜி, நாளை நான் நடிக்கும் நாடகம் நியூயார்க் செண்ட்ரல் திரையரங்கில் நடக்க இருக்கிறது. தாங்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.”

சற்று நேரம் யோசித்த அவர்,

“உறுதியாக சொல்ல இயலாது. கலந்து கொள்ள முயற்சிக்கிறேன். என்னை எதிர்பார்க்க வேண்டாம்.”

கேளிக்கைகளிலும் நாடகங்களிலும் சுவாமிக்கு ஈடுபாடு இருக்காது என்று தெரிந்திருந்ததால் பெரிதாய் ஏமாற்றம் கொள்ளவில்லை சாரா. வழக்கம் போல் நாடக ஒத்திகைக்கு சென்றாள்.

அடுத்த நாள் நாடகம் ஆரம்பமானது. ‘இஸிஎல்’ என்னும் ப்ரெஞ்ச் நாடகம் அது. இஸிஎல் என்ற கதாபாத்திரமாகவே நடித்தாள் சாரா. புத்தரின் வரலாறு சொல்லும் நாடகம். நாடகம் நடந்து கொண்டிருக்கையிலேயே பி வரிசையில் அமர்ந்திருந்த சுவாமிஜியை கண்டுகொண்டாள் சாரா. மனம் சொல்லாத களிப்புற்றது. சுவாமியின் மேலிருந்த மரியாதை இன்னும் அதிகமாகியது. இடைவேளையின் போது வேகவேகமாக ஓடி வந்த சாரா சுவாமியை வணங்கி,

“நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை”

வழக்கமான புன்முறுவலை பதிலாய் அளித்தபடி

“புத்தரின் வாழ்க்கை பற்றிய நாடகமென்று அறிந்தேன். பார்க்கலாமென்று வந்தேன்”

“மிக்க மகிழ்ச்சி. நாடகம் முடிந்ததும் விருந்து நடக்க இருக்கிறது. கண்டிப்பாய் கலந்து கொள்ள வேண்டும். முக்கியமான ஒரு நபரை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.”

மறுக்காமல் தலையாட்டினார் சுவாமிஜி.

இடைவேளைக்கு பின் நடந்த நாடகத்தில் சாராவின் நடிப்பு இன்னும் மெருகேறியிருந்தது. அவளின் குருநாதர் தன் நாடகத்தைப்பார்த்து கொண்டிருக்கிறார் என்ற பூரிப்பு அது.

நாடகம் முடிந்ததும் நடந்த கேளிக்கைகளில் ஈடுபடாமல் ஓரமாய் இருந்த மேஜையில் அந்த இருவரும் அமர்ந்திருந்தனர். சுவாமிஜி மற்றும் டெஸ்லா. டெஸ்லாவின் நீண்ட நாள் தோழி சாரா. அவரின் அறிவியல் அறிவை அறிவாள்.

நூறு வருடங்கள கழிந்து உலகையே உலுக்கப்போகும் சந்திப்பு அது என்பதை சாரா அறிந்திருக்கவில்லை. சுவாமி விவேகானந்தாவும் டெஸ்லாவும் அறிந்திருக்கவில்லை.

பார்த்தவுடனே சுவாமிஜி மேல் ஈர்ப்பு வந்தது டெஸ்லாவிற்கு. ‘என்ன பெரிதாய் பேசப்போகிறார்’ என்ற எண்ணம் மறைய ஆரம்பித்தது. சாராவின் வற்புறுத்தலுக்காக தான் இந்த சந்திப்புக்கு ஒத்துக் கொண்டிருந்தார் அவர். ஆனால் சுவாமிஜி பேசப்பேச அவர் மேல் மரியாதை கூடியது.

“உங்களை தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். நீங்கள் சொல்லும் வேதாந்தங்களும் பகவத் கீதையும் இல்லாத ஒன்றை தானே சொல்கின்றன.”

“அப்படி இல்லை. இந்த உலகம் இருவேறு உந்து சக்திகளால் இயங்குகிறது. ப்ராணம் ஆகாஷம். இவற்றில் ஆரம்பிப்பது தான் எந்த ஜீவனுமே. இதை தான் எங்கள் வேதாந்தங்கள் சொல்கின்றன.”

மேலும் அவர் பேச அவரின் பால் ஈர்க்கப்பட்டார் டெஸ்லா. அவர் செய்து கொண்டிருந்த பல சோதனை முயற்சிகளுக்கான விடை வேதாங்களிலும் வேதாந்தங்களிலும் இருப்பதாய் தெரிந்தது.

‘உலகம் உந்து சக்தியினால் இயங்குகிறது’ என்பதை கணித ரீதியாக நிரூபிக்கமுயன்ற அவருக்கு ஆகாசம், ப்ராணம் ஆகியவற்றிற்கான அர்த்தங்கள் புதிய பாதையை கொடுத்தது.

“சுவாமிஜி. உங்களுடன் நிறைய பேச வேண்டும். எனக்குத் தேவையான பல விஷயங்கள் உங்கள் வேதாந்தங்களில் இருக்கிறது. இன்னும் இருவாரங்களில் என் வீட்டிற்கு வர முடியுமா?”

அழைப்பை ஏற்றார் விவேகானந்தர். அதன்விளைவே அவரின் வருகை. வருவதற்குமுன் தன் நண்பனுக்கு எழுதிய கடிதத்தில் தான் சந்திக்கப்போவதைப்பற்றியும் தான் எவ்வளவு ஆர்வமாய் இருக்கிறேன் என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.

நினைவில் ஓடிய நிகழ்வுகளை அசைபோட்ட விவேகானந்தர் நேரத்தை சற்றும் வீணாக்காமல் டெஸ்லாவுடன் விவாதத்தில் பங்குகொண்டார். டெஸ்லா சக்தி என்பதற்காக தான் செய்த ஆராய்ச்சிகளை விளக்க விவேகானந்தருக்கு ஆச்சர்யம். வேதாந்தங்களில் எழுதிய வைத்தவைகளை நிரூபிக்க முடியும் என்கிற நம்பிக்கை அவருக்குப் பிறந்தது. அதற்கு ஏற்றாற் போல் அது வரை தான் செய்திருந்த சோதனைகளை திருப்பி செய்து காண்பித்தார் டெஸ்லா. இறுதியாகடெஸ்லாவின் வேண்டுகோளின் படி அவருக்கு வேதாந்தங்களைப் பற்றி சொல்லித் தர ஒத்துக் கொண்டார்.

பின் இருவரும் மீண்டும் சந்திப்பதாய் முடிவு கொண்டு பிரிந்தனர். அடுத்த இருமாதங்கள் இருவருக்கும் பரபரப்பாய் கழிந்தது. ஏற்கனவே ஒத்துக் கொண்ட கூட்டங்களில் பங்கு கொண்டு சொற்பொழிவாற்றிய நிலையில் நான்கைந்து முறை டெஸ்லாவை சந்தித்து வேத சூத்திரங்களை விளக்கினார். அண்ட வெளியில் உயிர் சக்தி இருப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் அலைகள் மூலம் செய்தி பரிமாறும் முறைகளைப் பற்றியும் அலசினர். முடிவில் டெஸ்லாவிற்குள் அந்த அறிவியல் அற்புதம் நிகழ்ந்தது. சுவாமிஜியிடமிருந்து கற்றுக் கொண்ட விஷயங்களை மேலும் ஆராய்ந்து மின்காந்த அலைகள் மூலமாக செய்திகள் பரிமாறும் அதிசயம் கண்டார். மேலும் மேலும் பல ஆராய்ச்சிகள் செய்த அவர் 1930-களில் செய்த ஆராய்ச்சி அவரை நிலைகுலையச் செய்தது.

தனது கண்டுபிடிப்பு எவருக்கும் தெரியக்கூடாது என்று நினைத்த அவர் தன் நண்பர் மூலமாக ஐரோப்பாவில் அதை பாதுகாப்பாக பதுக்கி வைக்க சொன்னார். கிட்டத்தட்ட பத்தாண்டுக்கும் மேலாக மிகுந்த ரகசியமாக அது இருந்தவரை பிரச்சனைகள் ஏதும் வராமலிருந்தது. சரியாக டெஸ்லா இறந்து 10 வருடம் கழித்து அந்த ரகசியங்கள் அடங்கிய ஆராய்ச்சிக் குறிப்புகள் ரஷ்யரிடம் சிக்கியது.

கி.பி. 2010

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க். அழகாக வர்ணனைகளால் எழுதப்பட்ட அந்தக் குறிப்புகளைப் படித்த அவர், நியான் விளக்கு வெளிச்சத்தில் சிந்தனையோடு எதிரில் அமர்ந்து நேவா நதியை வெறித்துக் கொண்டிருந்த மிகைல் ப்ராட்கோவை பார்த்தார். பின் தொண்டையை கனைத்து கொண்டு பேச ஆரம்பித்தார்.

Friday, June 25, 2010

உன்னை தற்கொலை செய்யவா??!! - பகுதி 6

அமெரிக்காவில் விர்ஜினியா மாகாணத்தில் லேங்க்லி. மிகவும் பேர் பெற்ற இடம். உலகையே ஆட்டிப் படைக்கும், படைப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்க ராஜ்யத்தின் முக்கிய உளவுப் பிரிவான சி.ஐ.ஏ.வின் தலைமையகம். அடர்ந்து வளர்ந்திருந்த காட்டு மரங்களுக்கிடையே அமைதியாக அமைந்திருந்தது அந்த வளாகம். மிகப்பெரிய வளாகம். ஏறக்குறைய ஐந்தடுக்கு பாதுகாப்பு வளையம் அமையப்பெற்றது. அனுமதிக்கப்பட்டவரைத் தவிர வேறு யாரும் அவ்வளவு எளிதில் உள்ளே நுழைந்துவிட முடியாது. பாதுகாப்பிற்காக அந்த ஏரியா முழுவதும் விமானம் பறக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. உலகில் நடக்கும் எண்ணற்ற சம்பவங்களுக்கு காரணகர்த்தாவான அந்த மையம் பற்பல ரகசியங்களைக் கொண்டிருந்தது.

பனிக்காலமாகையால் எங்கும் வெள்ளைநிற பனிக்கட்டிகள் பரவியிருக்க சில்லென்று பனிப்பொழிவும் இருந்ததது. வெள்ளை நிற பனித் துகள்கள் மேலிருக்க மின்சார வேலியின் பக்கமிருந்த காவலர் வாசலுக்கு சர்ரென்று வந்து நின்ற அந்த நிஸ்ஸான் அல்டிமா காரில் இருந்தவரை அடையாளம் கண்டு வழிவிட்டனர் செக்யூரிட்டி. காரை ஒரு ஓரமாய் பார்க் செய்த கோட் சூட்டிலிருந்த கனவான் மைக்கேல். சி.ஐ.ஏவின் அந்தப்பிரிவின் தலைமை செயலதிகாரி. அதிபரின் ஆலோசனைக்குழுத் தலைவர். இவரின் கட்டளைக்கு கீழ் பணிபுரிய உலகெங்கிலும் பல்லாயிரம் ஊழியர்கள் சாதாரண குடிமக்கள் வேடத்திலிருந்தனர். காரிலிருந்து இறங்கியவுடன் மேல் போர்த்தியிருந்த ஜெர்கினை இழுத்துக் கொண்டு கண்ணாடிகளைப் பதித்து கட்டப்பட்டிருந்த அந்த கட்டிடத்தை நோக்கி நடந்தார். வழியில் அவரை கண்டு கொண்டவர்கள் வைத்த வணக்கங்களை வாங்கிக் கொண்டு பரபரப்பாக நடந்தார். பரபரப்பு எப்பவுமே அவரிடம் தொற்றிக் கொண்ட ஒரு வியாதி.

முதல் வேலையாக உள்ளே நுழைந்ததும் அந்த பெரிய கான்ஃப்ரண்ஸ் அறைக்குள் நுழைந்தார். விஸ்தீரணமான அறை, குஷன் வைத்த நாற்காலிகள், மிகப்பெரிய ப்ரொஜக்டர், நீல நிற வெளிச்சம் அந்த அறையை பிரம்மாண்டமாய் காட்டியது. உள்ளே நுழைந்தவர் நாற்காலியில் தன் ஜெர்கினை மாட்டிவிட்டு அமர்ந்தவுடன் அங்கிருந்தவர்களைப் பார்த்தார். அவர் முகத்தைப் பார்த்ததும் அவர்களில் மூத்தவரான அந்த கண்ணாடி அணிந்த அதிகாரி ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார்.

“வணக்கம் மைக்கேல். இந்நேரம் உங்களுக்கு அந்த செய்தி கிடைச்சிருக்கும் என்று நம்புகிறோம்.”

மௌனமாக தலையாட்டினார் மைக்கேல். தொண்டையை கனைத்துக் கொண்டு மறுபடியும் பேச ஆரம்பித்தார் அந்த அதிகாரி. ப்ரொஜக்டர் திரையில் காண்பிக்கப்பட்ட அந்த படங்களை காண்பித்து,

“இது தான் நம்ம சாட்டிலைட் எடுத்து அனுப்பிய புகைப்படங்கள். இந்தியாவில் ஐதராபாத்திற்கு அருகில் இருக்கும் கிராமம்…”

“இங்க தெரிவது தான் அந்த செய்தியில் இருந்த ரைஸ்மில். கிராமத்திற்கு ஒதுக்குப்புறமாய் அமைந்திருக்கிறது.”

“அங்க தான் இந்திய அரசாங்கம் ஏதோ ரகசிய ஆராய்ச்சி நடத்திக்கிட்டு இருக்கிறது. நம்பத் தகுந்த தகவல் இது. இந்த புகைப்படங்கள் எடுத்து ஒரு மாதமாகிறது. இதற்கிடையில் தான் இந்திய அரசாங்கம் அவங்க நிலா பயணத்தை அறிவிச்சிருக்கிறது. அதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கு.”

திரையில் சாட்டிலைட்டிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மாற ஆரம்பிக்க மேலும் அந்த அதிகாரி தொடர்ந்தார்.

“இந்த கிராமமே சந்தேகத்திற்கிடமான கிராமம். இப்படி ஒரு கிராமம் அஞ்சு வருஷத்திற்கு முன் இருந்ததா அங்க பதிவுலேயே இல்ல. திடீர்னு முளைச்சிருக்கு. இதுவும் எங்க சந்தேகத்திற்கு காரணம். இதைப்பற்றி மேலும் விவரங்கள் சேகரிக்க சொல்லி இருக்கிறோம்.”
முடித்தார் அந்த அதிகாரி.

அதுவரை மௌனமாக தலையை மட்டும் ஆட்டிக்கொண்டிருந்த மைக்கேல் பேச ஆரம்பித்தார்.

“அங்க நமக்கு எதிரா இந்தியா ஏதும் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காங்கன்னு சொல்றீங்களா?”

“ஒரு அனுமானம் தான். தெளிவா சொல்ல முடியாது. ஆனா விண்வெளி சம்பந்தமா ஏதோ செய்யறாங்கன்னு மட்டும் நல்லா தெரியுது. அது இந்த மூன் மிஷனுக்கா கூட இருக்கலாம். மேற்தகவல்களுக்காக காத்திருக்கிறோம்.”

“ரைட்.. நல்ல காரியம். இந்த இடத்துல என்ன நடக்குதுனு கண்டுபிடிக்க இவ்வளவு நாளா?”

“அந்த ஏரியாவுல யாரும் வெளி ஆளுங்க உள்ளே நுழைய முடியறதில்லை. அப்படி போன நம்ம ஆளுங்க இரண்டு பேரை காணவில்லை. அந்த ஏரியா முழுக்க பாதுகாப்பா வைச்சிருக்காங்க.”

“ம்ம்.. சரி. ஒரு வேளை இது வழக்கமா நமக்கு தண்ணி காட்டுற வேலையா இருந்தா? பொக்ரான் ஞாபகம் இருக்குல்ல.”

“நல்லாவே ஞாபகம் இருக்கு. ஒரிசா பக்கம் வண்டிகளை அனுப்பிட்டு பொக்ரான்ல சோதனை செஞ்சாங்க. உண்மையிலேயே அந்த சம்பவம் நமக்கு சறுக்கல் தான். அதற்கப்புறம் அங்க நம்ம பலத்தை இன்னும் கூட்டிட்டோம். இப்போ சில பெரிய தலைகளுக்கு வலையை விரிக்க ஆரம்பிச்சிருக்கோம். கூடியவிரைவிலேயே எல்லா தகவல்களோடு வர்றேன்”

தலையாட்டிக் கொண்டே தன் அறைக்கு போக கிளம்பினார் மைக்கேல். காலை எழுந்ததும் முதல் வேலையாய் அமெரிக்க அதிபருடன் பதினைந்து நிமிடங்கள் பேசுவார் அவர்களுக்கென்றே இருக்கும் ப்ரத்யேக டெலிபோன் இணைப்பில். யாரும் ஒட்டு கேட்க முடியாது. முதல் நாள் நடந்த சம்பவக்கோர்வையை தெரிவித்தபின் தற்போதைய பிரச்சனையைப் பற்றி பேசுவர். சுருக்கமாய் தான் இருக்கும் அவர்கள் பேச்சு. அதற்கப்புறம் அலுவலகத்திற்கு வந்தவுடன் அதிபருக்கு அனுப்ப வேண்டிய ரிப்போர்ட்களை ஒரு முறை சரி பார்த்து அனுப்பி வைப்பார்.

மீட்டிங் முடிந்ததும் தன்னறைக்கு வந்தவர் கதவை மூடிவிட்டு இருக்கைக்கு வந்தார். அன்றைக்கு அதிபருக்கு அனுப்ப வேண்டிய தகவல்களை சரிபார்த்து அனுப்பி வைத்தார். கொஞ்ச நேரம் ஆனதும் அவருக்கென இருந்த தனிப்பட்ட டெலிபோன் லைனில் அந்த நம்பரை டயல் செய்தார்.

மறுமுனையில் எடுக்கப்பட்டதும் அடையாள எண்ணைக்கூறினார். அவரது அடையாளத்தை மறுமுனை அங்கீகரித்தது. அது சாட்டிலைட் போன் ஆகையால் எந்த நாட்டினரும் ஒட்டு கேட்க இயலாது. சுருக்கமாக சொன்னால் என்க்ரிப்டட் லைன்.

அமெரிக்க ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார் மைக்கேல்.

“என்னவாயிற்று?”

“நேற்று தான் சந்திப்பு முடிந்தது. இருக்குமிடம் தெரிந்துவிட்டது. பாதுகாப்பு பலமாக இருக்கும் போல. ஏதாச்சும் வழிவகை செய்யவேண்டும்.”

“ம்ம். ஏதேனும் தேவைப்பட்டால் நம் உதவி தகுந்த நேரத்தில் வரும்.”

போனை வைத்து விட்டு ஆல்பர்ட்டுக்கு போன் செய்தார்.

ஆல்பர்ட் அவருடன் உளவு வேலைகளில் பணியாற்றிய அதிகாரி. நீண்ட காலமாக ஒருவரை ஒருவர் அறிவர். ஆறுமாதத்திற்கு முன் தான் உளவுப்பிரிவிலிருந்து ப்ரமோஷனில் வந்திருந்தார் மைக்கேல். பொதுவில் அவர் நடவடிக்கைகள் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் ரகசிய உளவுப்பிரிவிலும் அவர் கை ஓங்கி இருந்தது.

“ஆல்பர்ட்..?”

“யெஸ்… ஸ்பீக்கிங்..”

“இன்னிக்கு மதியம் லஞ்ச் .. ஒகேவா?”

“ம்ம். ரைட்டோ”

“ஓக்கே.. டாக்கோ பெல்ஸ். வார்னர் ரோட்”

போன் துண்டிக்கப்பட்டது.

சரியாய் நண்பகல் பன்னிரண்டு மணிக்கு அவர் கார் கிளம்பியது. அருகிலிருந்த ஊருக்குள் சென்று வார்னர் ரோட்டில் இருந்த டாக்கோ பெல்ஸ் கடைக்குள் நுழைந்தார். அவருக்கு முன்னே ஆல்பர்ட் அங்கே காத்திருக்க ஆளுக்கொரு பரிட்டோ ஆர்டட் செய்து வாங்கிக் கொண்டு ஓரமாய் இருந்த இருக்கையில் அமர்ந்தனர்.

கடையில் கூட்டம் கம்மியாக இருந்தது. கண்ணாடி சுவர்கள் இருந்ததால் வெளியில் போகும் வாகனங்களைப்பார்த்துக் கொண்டே சாப்பிடலாம். சாதம் அடைக்கப்பட்ட நம்மூர் சப்பாத்தி போல் இருந்த அந்த் பரிட்டோவை கடித்துக் கொண்டே பேச ஆரம்பித்தார் மைக்கேல். அந்த கடை அவர்களுக்குப் பாதுகாப்பான கடை. ரகசிய பாதுகாப்பில் இருந்தது.

“தற்போதைய நிலவரம் என்ன?”

“நம்ம ஆள் சென்னை போய் சேர்ந்தாச்சு. தக்க பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்.”

“தெரியும். சற்று முன் தான் பேசினேன்”

“என்னென்ன தேவைப்படும்?”

“இப்போதைக்கு அந்த ரைஸ்மில்லுக்குள் நுழைய வேண்டும். கிடைத்த தகவல்படி அந்த இடம் நிறைய அடுக்கு பாதுகாப்பு கொண்டது. நம் ஆள் உள்ளே நுழைய அவகாசம் வேண்டும்”

“அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. இன்னும் இரு மாதங்கள் கூட இல்லை. அதற்குள் அந்த யந்திரத்தில் என்னென்ன இருக்கிறது என்று தெரிந்தாக வேண்டும்.”

“கண்டுபிடித்துவிடலாம்.”

“எப்படியோ. இன்று தான் அந்தப்பிரிவு ஆட்கள் அந்த கிராமத்தைப் பற்றியே கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒன்று அந்த ரைஸ்மில்லுக்குள் என்ன நடக்கிறது என்று தெரியவேண்டும். இல்லையேல் அந்த ரைஸ்மில்லையே அழிக்க வேண்டும். ஏதாச்சும் ஒன்று செய்தாக வேண்டும். நிலைமை ரொம்ப மோசம். புரிகிறதா?”

“புரிகிறது. “

“எனக்கு இன்னும் இரண்டு நாளில் அப்டேட் வேணும். என்ன ப்ளான் என்னவென்று”

“சரி.”

சாப்பிட்டு முடித்தக் கையோடு இருவரும் தத்தம் காரில் கிளம்பினார்கள். ஆல்பர்ட்டும் பின்னால் போய் கொண்டிருந்த மைக்கேல் ஓரமாக தன் வண்டியை நிறுத்தி விட்டு சாட்டிலைட் போனில் அந்த ந(ம்)பரை தொடர்பு கொண்டார்.

பேசி முடித்ததும் அலுவலகத்திற்கு கிளம்பினார் மைக்கேல்.

சென்னை புறநகர். நேரம் இரவு மணி பத்தை தாண்டியிருந்தது. ஆத்மானந்தா ஏற்பாடு செய்திருந்த ப்ளாட் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தது. நாராயண ரெட்டி கொடுத்திருந்த தகவல்கள் ப்ராங்கின் திட்டத்திற்கு போதுமானதாய் இருந்தது. மேஜை மேல் ஹைதராபாத்தை சுற்றியுள்ள பகுதிகளின் வரைபடமும், இதர மின்னணு சாதனங்களும் இருந்தன. நீண்ட நேரமாக அவன் வேலையில் முழுகியிருந்ததை ஆஸ்ட்ரேயில் கொட்டிக் கிடந்த கிகரெட் துண்டுகள் காட்டிக் கொடுத்தன. காலையிலேர்ந்து பழங்களும் பாலும் மட்டுமே சாப்பிட்டு வெளியிலே போகாமல் இருந்தான். இது அவனுக்கு தரப்பட்டிருந்த பயிற்சியில் ஒன்று. சந்தேகத்திடமாக எங்கேயும் பகலில் சுற்றக்கூடாதென்பது.
ஒரு வழியாக பல கோடுகளை அந்த மேப்பில் கிறுக்கியபின் நிமிர்ந்தான். அருகிருந்த மடிக்கணினியில் ப்ராக்ஸி ஐ.பி. வழியாக தனக்கு வேண்டிய தகவல்களை தேடிக் கொண்டான். அவனது திட்டத்தை ஆரம்பிப்பதற்கான விஷயங்கள் இருந்தன. இது போதும். மேலும் வேண்டிய விஷயங்களை ஆரம்பித்தவுடன் பார்த்துக் கொள்ளலாம்.

மனதில் திருப்தி ஏற்பட்டவுடன் தன் முகத்தில் அப்படி ஒரு குரூரப் புன்னகையை பரவ விட்டான் தனக்கு இதுவே கடைசியாய் இருக்கப் போகின்றதென்பதை அறியாமல்.

Sunday, June 20, 2010

ராவணன் - என் பார்வையில்

ராவணன்…
படப்பிடிப்பு தொடக்கத்திலிருந்தே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். விக்ரம், ஐஸ்வர்யாராய், பிருத்விராஜ், ஏ.ஆர்.ரஹ்மான்… முக்கியமாக மணிரத்னம்.
அநேகமாக இந்நேரம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் படம் அப்பட்டமான ராமாயண தழுவல் என்று. படத்தின் ஆரம்பமே ஒகேனக்கலில் விக்ரம் குதிப்பதில் ஆரம்பிக்கிறது. துண்டு துண்டாக சில காட்சிகள், பின் வீரா பாடலின் பிண்ணனியில் பெயர்கள். ஒருவிதமான பயணத்திற்கு நம்மை தயார்படுத்துகிறார்களோ என்ற அளவிற்கு அசத்தல் ஆரம்பம்.


சீதையை கடத்தி சென்ற ராவணனை வதம் செய்யும் கதை. வேறுதுவும் கதையைப் பற்றி சொல்ல இல்லேங்கறதால மற்ற விஷயங்களைப் பார்ப்போம். படத்தின் ஆணிவேரே பச்சைப்பசேலென்ற காட்சியமைப்பும் கண்ணுக்குக் குளிர்ச்சியாக மழைக்கால காட்சிகளும். இப்படியெல்லாம் இந்தியாவில் இடங்கள் உள்ளதா என ஆச்சர்யப்படும் அளவிற்கு இருந்த ஒளிப்பதிவு. சந்தோஷ்சிவனுக்கும் மணிகண்டனுக்கும் ஹேட்ஸ் ஆஃப். ஒவ்வொரு ஃப்ரேமையும் அவர்கள் செதுக்க எடுத்துக் கொண்ட சிரத்தை படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது.
அடுத்ததாக ஏ.ஆர்.ரஹ்மான். பாடல்கள் சக்கைப்போடு போட்டாலும் எல்லாமே படத்தில் இல்லை. பிண்ணனி இசையில் ஒரு போர்களமே நடத்தியிருக்கிறார். காட்சியின் தன்மைக்கேற்ப வரும் இசை. ஆயினும் நிறைய இடங்களில் ட்ரம்ஸை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியிருக்காரோ என்று தோன்றுகிறது. படத்தின் உஷ்ணத்தை காட்டவும் இருக்கலாம். மொத்தத்தில், படத்தின் மற்றுமொரு பக்கபலம் ஏ.ஆர்.ஆர்.
கலை: சமீர் சந்தா. எது செட், எது உண்மை என தெரியாத வண்ணம் நம்மை படத்தில் ஒன்ற வைப்பதே போதும் அவரின் வெற்றிக்கு. சண்டைக்காட்சிகளில் கயிற்றின் பங்கு முக்கிய பங்கு. சில காட்சிகள் ஏகத்துக்கும் மெதுவாக செல்வதால் கயிறுகட்டியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக அருவியில் இருந்து கீழே குதிக்கும் காட்சி.
நடிகர்கள் விக்ரம், ஐஸ்வர்யாராய், பிருத்விராஜ், கார்த்திக், பிரபு. விக்ரம் சொல்லத் தேவையில்ல. பின்னி எடுத்திருக்கிறார் மனிதர். தொண்டையில் குண்டுப்பட்டதால் தனது குரலை அவர் மாற்றிப்பேசுவதாகட்டும், தங்கையில் சாவு போது கரகரப்பான குரலில் ஓவென்று பெருங்குரலில் அலறுவதாகட்டும் கலக்கியிருக்கிறார். ஐஸ்வர்யா முன்னைவிட இன்னும் அழகு. அந்த மழையிலும் காட்டுப்பயணத்திலும் வாடாத முகம். கண்களில் உணர்ச்சிகளைக் காட்டுவதில் அசத்தியிருக்கிறார். பிருத்விராஜ் சூப்பிரண்டண்ட் ஆஃப் போலிஸ். பல நேரங்களில் கண்ணாடி போட்டிருப்பதால் அவரது உணர்வுகள் சரியாக வெளிப்படவில்லை. ஆயினும் தனது மனைவி கடத்தப்பட்ட செய்தி கேட்கும் போது முகத்தில் எந்த மாற்றமும் காட்டாமல் பற்களை கடித்து தாடையின் அசைவுகளிலேயே கலக்குகிறார்.ப்ரியாமணி நல்ல நடிப்பு. ரஞ்சிதாவின் சீன்கள் வெட்டப்பட்டுவிட்டன போலும். இரண்டு மூன்று இடங்களில் தலை காட்டுவதோடு சரி. வசனமே இல்லை.
வசனம்: சுஹாசினி. ஆங்காங்கே நல்லா இருந்தாலும் பஞ்ச் டயலாக் என்று சொல்லும் படி எதுவுமே நினைவில் இல்லாதது குறை. சாமி சிலை முன் ராகினியும் வீராவும் பேசும் இடம் நச்.
இயக்கம்: மணிரத்னம் நடிகர் தேர்வுகளாகட்டும், இடங்கள் தேர்வாகட்டும் இயக்குநர் மணி தன் பேரை நிலைநாட்டியிருக்கிறார். நடிகர்களிடம் தனக்குத் தேவையான முகபாவங்களை வாங்குவதில் கில்லாடி. இதிலும் நிரூபித்திருக்கிறார்.
திரைக்கதை: என்ன தான் எல்லோருக்கும் தெரிஞ்ச கதையை எடுத்தாலும் திரைக்கதையை அமைக்க அசாத்திய திறமை வேண்டும். அதில் மணிரத்னம் தவறிவிட்டாரோ என்றுத் தோன்றுகிறது. “அசோகவனத்தில் சீதை” என்பதை மட்டும் நீட்டிமுழக்கி மற்றவிஷயங்களை சுருங்க சொல்ல முயன்றிருக்கிறார். ஏனோ பல விஷயங்களை தவறவிட்டிருக்கிறார். மற்றப்படங்களிலெல்லாம் சம்பவங்கள் நிறைய இருக்க உணர்ச்சிகள் அதற்கேற்றாற் போல் காண்பித்தால் போதும் என எடுத்திருப்பர். ஆனால் இதில் சம்பவங்கள் என்று எதுவும் இல்லை. கடத்துதல் மட்டும் தான் பெரிய சம்பவம். மற்றபடி காட்டில் சுற்றித் திரிவது. ஆக இந்த பதினாலு நாள் என்னெல்லாம் நடந்திருக்கலாம் என்ற இடத்தில் கோட்டை விட்டுவிட்டார். அதனால் பல இடங்களில் படம் தொய்வு ஏற்படுகிறது.
எனக்குத் தெரிந்தவரை, மனிதன் எந்நேரமும் எல்லோருரிடமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. தேவைக்கேற்ப நேரத்திற்கேற்ப அவன் ராவணனாகவோ, ராமனாகவோ அவதாரம் எடுக்கிறான் என்ற கருவைக் கையாள சிரமபட்டிருக்கிறார். எதை சொல்ல எதை விட என்று. மனித உணர்ச்சிகளின் வெளிப்பாடு கொண்டே படத்தை நகர்த்த முயன்றிருக்கிறார். சில இடங்களில் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஆயினும் விரிவாக காட்டவேண்டிய காட்சிகளை சுருக்கி இருவரி வசனங்களில் அடக்கியதும், சுருக்கமாக முடிக்கவேண்டியதை இழுத்தவும் பலவீனம். குறிப்பாக ப்ரியாமணியை போலிஸ் தூக்கி செல்லும் போது, ஏனோ பிறக்க வேண்டிய இரக்க உணர்வு ஏற்படவில்லை. முன்னிகழ்வுகளை இன்னும் சம்பவங்களோடு சொல்லியிருந்தால் ஒன்றியிருக்கலாம். அது மாதிரி தான் ஐஸ்வர்யா மேல் விக்ரம் காதலும். அருவியில் இருந்து கீழே விழுந்ததும் காதல் வருகிற மாதிரி “உசுரே போகுதே” வைத்ததும் ஏமாற்றம். பார்த்தவுடன் காதல் போன்ற உணர்வு. அதனால் விக்ரமின் காதலின் ஆழம் தெளிவாக எங்கேயும் சொல்லப்படாதது (ஆங்காங்கே கண்கள் மூலம் விக்ரம் காட்டும் காட்சிகள் தவிர) ஆச்சர்யம். எப்படிப்பட்ட சூழ்நிலையில் விக்ரம் மேல் ஐஸ்வர்யாவிற்கு பாசம் அல்லது காதல் வருகிறதென்பதும் காணோம். இறுதியாக ப்ருத்விராஜ் தன் கேள்விகளால் ஐஸ்வர்யாவை துளைக்கும் போதே முடிவு தெரிந்துவிடுகிறது, இதுவும் பலவீனம்.
கதாபாத்திரங்களின் நிலைமாறுதல் இன்னும் தெளிவாக கையாளப்பட்டிருக்கலாம். ராமன் ராவணன் ஆவதும், ராவணன் ராமன் ஆவதும்… இந்த மாற்றம் கொஞ்சம் கொஞ்சமாக பார்ப்பவர் மனதில் பதியும்படி இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஆச்சர்யப்பட்ட விஷயம் ப்ருத்விராஜ். படத்தில் ராமனாய் வந்தாலும் இவருக்கு கொடுக்கப்பட்ட இடம் கம்மி தான். என்னைப் பொறுத்த வரை இங்கே ராவணன் என்பது விக்ரமை குறிக்கவில்லை. குணத்தைக் குறிக்கிறது. அதன்படி ப்ருத்வி இறுதியில் ராவணாகிறான். பதினாலே நாளில் ராமன் எப்படி ராவணன் ஆனான் என்ற விஷயமும் தெளிவாக இல்லை. தன் மனைவியை தூக்கிட்டு போய் விடும் போது அவள் மேலிருந்த காதலால் படையைத் திரட்டிக் கொண்டு போகும் ராமன், அந்த பதினாலு நாளும் படும் கஷ்டங்களில் மனைவியை காப்பாற்றுவதை விட ராவணனைக் கொல்லுவதே தன் எண்ணம் என்னும் இடத்தில் ராவணனாகிறான். (என்ன குழம்பி..குழப்பிட்டேனா?) முதலில் இருந்த முகபாவங்கள் மாறி..இறுதியாக மனைவியைப்பார்த்த போதும் கண்ணில் காதலில் இல்லாமல் “த்தா… என்னையவே இவ்ளோ நாள் அலைய வச்சிட்டியா?” என்னும் வெறி வரும். இப்படிப்பட்ட நிலைமாறுதல்களைக் கையாளுவதில் ஏனோ கோட்டைவிட்டுவிட்டார் மணிரத்னம்.
ஆக மொத்தத்தில், என் நண்பன் சொன்னது: எல்லோரும் தங்களது மிகச் சிறந்த உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள் மணிரத்னத்தைத் தவிர.

Friday, May 21, 2010

உன்னை தற்கொலை செய்யவா ??!! - பகுதி 5

பெங்களூர்..


தன்னிடம் வாசிக்கப்பட்ட லிஸ்டில் அந்த மொபைல் போன் இல்லாததைப் பார்த்து வியர்த்தான் வைபவ். கன்னடத்தில் அந்த லேப்பில் இருந்த நபரிடம்,

“நல்லா பாருங்க.. இன்னிக்கு அந்த தற்கொலை நடந்த இடத்திலேர்ந்து ஒரு மொபைல் போன் கொண்டு வந்திருப்பாங்க..”

“இல்ல.. சார். நல்லா பாத்துட்டேன். எல்லா பொருளையும் இங்க எண்ட்ரி போட்டு தான் வாங்குவோம். மிஸ் ஆயிருக்க சான்ஸே இல்ல..”

குழம்பிய வைபவ் யூனிபார்மை எடுத்து மாட்டிக் கொண்டு அம்மா சொன்னதைக் கூட காதில் வாங்காமல் தன் ப்ரத்யேக ஹீரோ ஹோண்டாவில் கிளம்பினான். ‘எப்படி மிஸ் ஆயிருக்கும். நான் ஸ்பாட்டுக்கு போன போது கூட பக்கத்தில கிடந்ததே. ஒரு வேளை அவங்க எடுக்கவே இல்லியா..’ அவுட்டர் ரிங் ரோட்டில அந்த ராத்திரி வேளையில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே ரொம்பவும் குழம்பி வண்டியை ஓரமாய் நிறுத்தினான்.

மொபைல் போனை எடுத்து ஸ்டேஷனுக்கு கால் பண்ணினான். மூன்றாவது ரிங்கில் கான்ஸ்டபிள் போனை எடுத்தார்.

“நான் இன்ஸ்பெக்டர் பேசறேன். இன்னிக்கு காலைல அந்த தற்கொலை கேஸ் நடந்த எடத்துக்கு போனோமே.. பாரன்ஸிக் லேப்லேர்ந்து யார் வந்தா?”

“சார்.. வணக்கம் சார். எப்பவும் வழக்கமா வர்ற முனிரெட்டி தான் வந்தான். ஏன் சார்? ஏதாச்சும் பிரச்சனையா? இந்த நேரத்துல அவன பத்தி கேக்கறீங்க?”

“அதெல்லாம் ஒன்னுமில்ல. காலைல அங்கிருந்து என்னெல்லாம் எடுத்துட்டு வந்தான்னு கேக்கணும். ஒரு மொபைல் போன் எங்க போச்சுன்னு தெரியல”

“ஓ.. அவன நம்பர் வேணா தரட்டுமா சார். இந்நேரம் நல்லா மப்பு போட்டுட்டு இருப்பான்னு நெனைக்கிறேன்..”

“குடு..குடு”

கான்ஸ்டபிள் நம்பர் தர அங்கிருந்த மொபைலில் டைப் செய்தான். லோடு ஏற்றிய லாரி ஒன்று விர்ரென்று அவனை கடந்து சென்றது. அடுத்து முனிரெட்டிக்கு டயல் செய்தான்.

ரிங் போய் போன் எடுக்கப்பட்டு சொன்ன ‘ஹலோ’விலேயே அவன் தள்ளாட்டம் தெரிந்தது.

“முனிரெட்டி. நான் இன்ஸ்பெக்டர் வைபவ் பேசறேன். எங்க இருக்க..?”

“வணக்கம் சார். இங்க சும்மா சகாக்களோட…மடிவாலால இருக்கற பார்ல.. ஹி.. என்ன மேட்டர் சார்?”

“காலைல நீ தானே அந்த அபார்ட்மெண்டுக்கு வந்து பொருளெல்லாம் கொண்டுட்டு போன.. அதுல ஒன்னு மிஸ்ஸாவுது”

“என்னாது…. மிஸ்ஸாவுதா..?” ஏற்றியிருந்த போதை பாதிக்கும் மேல் இறங்கியது.

“ஆமா… அந்த மொபைல் போன காணல. உனக்கு தான் தெரிஞ்சிருக்கணும்..”

“மொபைல் போனா… நல்லா ஞாபகம் இருக்கு சார். அந்த பொண்ணு பக்கத்துல சுக்குநூறா கெடந்துதே. நான் தான் சார் எல்லா பார்ட்டையும் ஒன்னு விடாம எடுத்தாந்தேன்.”

“எடுத்த எல்லாத்தையும் கணக்கு பண்ணி கரெக்டா லேப்ல கொடுத்த தானே..?”

“லேப் வரைக்கும் வந்தேன் சார். திடீர்னு போன் வந்துச்சு. அதான் பேசிக்கிட்டிருந்ததால வெளிய வந்த லேப் இன்சார்ஜ் கிட்ட கொடுத்தேன். அவர் தான் எண்ட்ரி போட்டிருப்பார்..”

சுத்தமாய் குழம்பியது வைபவ்விற்கு. ‘எங்க தான் தொலஞ்சு போயிருக்கும். இல்ல யார் தான் எடுத்திருப்பாங்க..’ அந்த இரவிலும் வியர்த்தது. அடுத்து எங்கிருந்து ஆரம்பிப்பது?

“சரி.. ரெட்டி. நீங்க திரும்பி போன வழியில ஏதாச்சும் நடந்துச்சா? “

“அப்படி எல்லாம் ஒன்னும் நடக்கலியே…” யோசித்தவன். “ஆமா சார். திரும்புற வழியில போலீஸ் நின்னு எல்லா வண்டியும் செக் பண்ணிட்டு இருந்தாங்க. ஏதோ குண்டு வெடிக்கப் போகுதுன்னு புரளி வந்துச்சாம். நம்ம வண்டிய கூட திறந்து பாத்தாங்க. லேப் வண்டின்னதும் விட்டுட்டாங்க. ஏன் சார்.. ஏதாச்சும் பெரிய ப்ரச்சனையா?”

“தெரியல… அதான் விசாரிக்கணும். சரி நீ உன் கச்சேரிய நடத்து. நாளைக்கு ஸ்டேஷன் பக்கமா வந்துட்டு போ”

அடுத்த பக்கம் சரின்னதும் போனை வைத்தான். கொஞ்சம் தெளியற மாதிரி தெரிந்தது. ‘எடுத்தா வண்டிய செக் பண்ணும் போது எடுத்திருக்கணும்.’

கண்ட்ரோல் ரூமுக்கு போன் பண்ணினான்.

“ஹலோ கண்ட்ரோல் ரூம்.”

“நான் பெங்களூர் தெற்கு இன்ஸ்பெக்டர் வைபவ் பேசறேன். இன்னிக்கு ஏதாச்சும் பாம் ஸ்கேர் போன் வந்துச்சா?”

“ஒரு நிமிஷம்…. அப்படியெல்லாம் ஒன்னுமில்லையே சார். எவ்ரிதிங் ஓக்கே”

“ஓக்கே.. தாங்க்ஸ்.”

அவன் போனை வைக்கும் போது மணி பதினொன்னரையைத் தாண்டியிருந்தது. வண்டி சாவியைப் போட்டு கிக்கரை உதைக்கவும் எதிர் திசையில் போய்க்கிட்டு இருந்த அந்த மாருதி வேன் யூ டர்ன் போட்டு அவனருகில் நிற்கவும் சரியாயிருந்தது.

அப்போது

ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் இரவு மணி பத்தைத் தாண்டியிருந்தது. ஊரே அமைதியாயிருந்தது. பனிப் பொழிவு ஆரம்பிக்க இன்னும் கொஞ்ச காலம் தான் இருந்தது. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பழம்பெரும் நகரம். ரஷ்யாவின் மேற்கே பால்டிக் கடலை ஒட்டி அமைந்திருந்தது. நேவா நதி ஊரின் ஊடாக ஓடி பால்டிக் கடலில் கலந்தது. அதனாலேயே அந்த ஊருக்கு மேற்கத்திய வெனிஸ் என்றொரு பேரும் உண்டு. இரவு நேரத்தில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட டிரினிட்டி பாலத்தில் நின்று ஆற்றோட்டத்தைப் பார்ப்பதற்கு கண்கோடி வேண்டும்.

எப்போதும் சல சலவென ஓடும் நேவா நதி அன்று ஏனோ அமைதி காத்தது. விளக்கு வெளிச்சங்களில் பளபளவென்று மின்னிக் கொண்டிருந்த வேளையில் ஆற்றின் ஓரத்தில் கட்டப்பட்டிருந்த சர்ச் அருகில் அமைதிகாத்த அந்த கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ரஷ்ய முறைப்படி கட்டப்பட்டிருந்த அந்த கட்டிடத்தில் அரசாங்க அலுவலகங்கள் இருந்தன. அந்த நேரத்தில் எல்லா அலுவலகங்களும் மூடப்பட்டிருக்க அந்த ஒரு அலுவலகம் மட்டும் இயங்கிக் கொண்டிருந்தது.

ஒன்றிரண்டு பேர் சுறுசுறுப்பாய் இயங்கி கொண்டிருக்க அந்த அலுவலகம் “விளையாட்டுத் துறை அலுவலகம்” என பெயர்ப் பலகையைத் தாங்கியிருந்தது. கொஞ்சம் தள்ளிப் போனால் தலைமை அதிகாரி என ரஷ்ய மொழியில் எழுதியிருந்தது. இன்னும் பூட்டப்பட்டிருக்க வில்லை.

உள்ளே பெரிய மேஜை. எதிரில் இருந்த பெரிய ரஷ்ய ஜன்னல் வழியாக நேவா நதி மின்னிக் கொண்டிருந்தது. மேஜையில் முன்னிருந்த நாற்காலியில் அமர்ந்து இருந்த அவர் ஆழ்ந்த சிந்தனையிலிருந்தார். ஐந்தடிக்கும் கொஞ்சம் அதிகமான உயரம். துடுக்கான தோற்றம். ரஷ்யக் களை முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. சிந்தனைக் கோடுகள் முகத்தில் வரிகளாய் தெரிந்தது. தீர்க்கமான அந்தப் பார்வை ஆற்றின் மேலேயே நிலைக் குத்தி நின்றது. ஏறக்குறைய ஒரு மணி நேரமாய் அவர் அப்படி தான் அமர்ந்திருக்கிறார்.

அவர் இருந்த அறை பழங்கால அறை. ஒருபக்க முழுக்க புத்தங்களாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. பாதிக்கும் மேல் ரஷ்ய மொழிப் புத்தகங்கள். சுவரில் ஃப்ரேம் செய்து மாட்டப்பட்ட லெனின் புகைப்படம்.

உட்கார்ந்திருந்த அவர் தலையைத் திருப்பி லெனின் படத்தைப் பார்த்தார். ஒரு பெருமூச்சு விட்டு மறுபடியும் நதியைப் பார்க்கலானார். யாரையோ எதிர்பார்த்து காத்திருப்பது தெரிந்தது. அப்போது வரப்போகிறவர் மிக முக்கியமான நபராய் தான் இருக்க வேண்டும். உட்கார்ந்திருந்த நபர் ரஷ்யாவின் மிகப்பெரிய பதவியில் இருப்பவர். அவர் ரஷ்யாவின் வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்பான “Foreign Intelligence Service” தலைவர் மிகைல் ப்ராட்கோவ். திடமான மனதுடையவர். அவர் மனமே கலக்கத்திலிருப்பது முகத்தில் தெரிந்தது.

1991-ல் ரஷ்ய அதிபரை கவிழ்க்க சதி செய்ததாக புகழ்பெற்ற கேஜிபி ரகசிய உளவாளிகள் அமைப்பு கலைக்கப்பட்ட பின் உருவான அமைப்பு தான் FIS. உள்நாட்டு வெளிநாட்டு புலனாய்வுகளை மேற்கொண்ட அந்த அமைப்புக்கு கடந்த பத்தொன்பது ஆண்டுகளாக மிகப்பெரிய சிக்கல்கள் எதுவும் வரவில்லை. ஆனால் இப்போது வந்திருப்பது மிக முக்கியமானது. நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கக் கூடியது. அதைப் பற்றி விவாதிக்கத் தான் அந்த நபரை அழைத்திருந்தார்.

மணி சரியாக பத்தரை ஆகும் போது கதவு திறந்தது. ஒடிசலாய் உயரமாய் இருந்த அந்த நபர் நுழைவதற்கும் மேஜையிலிருந்த ரகசியம் தாங்கிய பேப்பர்கள் சலசலப்பதற்கும் சரியாய் இருந்தது.

Saturday, May 15, 2010

உன்னை தற்கொலை செய்யவா??!! - பகுதி 4

‘பயணிகளுக்கு அன்பான வணக்கங்கள். இது சென்னை நோக்கி செல்லும் LH-758 லுஃப்தான்ஸா விமானத்தில் ஏறுவதற்கான அறிவிப்பு. சிறுகுழந்தைகளுடன் வந்துள்ள பயணிகளையும் சிறப்பு உதவி தேவைப்படும் பயணிகளையும் விமானத்தில் ஏறுமாறு அழைக்கிறோம். உங்களின் விமானச்சீட்டுக்களை வைத்திருங்கள். இதர பயணிகள் இன்னும் பத்து நிமிடங்களில் ஏறலாம். நன்றி.’

ஒலிப்பெருக்கியில் லுஃப்தான்ஸா நிறுவன ஊழியை குழைவாய் ஆங்கிலத்தில் கசிந்துருக ஜெர்மனியின் ப்ராங்க்பர்ட் விமான நிலையத்தில் டெர்மினல் ஒன்றில் இருந்த மக்கள் தங்கள் பைகளை பொறுக்கிக் கொண்டு விமானத்தின் உள்புக வரிசையில் காத்திருந்தனர். அது எப்போதும் பரபரப்பாய் இயங்கும் விமான நிலையம். கிழக்கிலிருந்து மேற்கு செல்பவரும் மேற்கிலிருந்து கிழக்கு செல்பவரும் என அனைத்து நிற மக்களும் பாகுபாடில்லாமல் தத்தம் விமானத்தை பிடிக்க காத்திருந்தனர்.

அங்கே ஓரமாய் இருந்த ரெஸ்டாரண்டில் அமைதியாய் காபி குடித்துக் கொண்டிருந்த அவன் பெயர் ப்ராங்க். அமெரிக்கன். ஆறரை அடி உயரம். ஆஜானுபாகுவாய் முறுக்கேறியிருந்த உடம்பு. கண்கூசும் அளவுக்கு கச்சிதமாய் அடித்திருந்த மொட்டை. காதில் சின்ன வளையம். அவன் போட்டிருந்த கோட்டும் சூட்டும் வில்லன் கேரக்டருக்கு இவன் பொருத்தமாய் இருப்பான் எனக்கூறியது. தன் காபிக் கோப்பையை முடித்திருந்த ப்ராங்க் குப்பைக் கூடையில் கோப்பையை எறிந்துவிட்டு பக்கத்திலிருந்த சின்ன சூட்கேஸை எடுத்துக் கொண்டு சென்னை விமானம் நிற்கும் கேட்டை நோக்கி சென்றான்.

டிக்கட்டையும் பாஸ்போர்டையும் சரிபார்த்ததும் அமைதியாய் நின்றிருந்த அந்த ஏர்பஸ் A340 ரக விமானத்தில் ஏறினான். விமான பணிப்பெண் கூறிய வணக்கத்தை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டு தன் சீட்டை நோக்கிப் போனான். இன்னும் ஒன்பது மணிநேரம் பயணம் மிச்சமிருக்கிறது. பயணிகள் அவரவர் இருக்கையில் அமர சற்று நேரத்தில் விமானம் நிரம்பியதும் அது கிளம்புவதாக விமானி ஒலிபெருக்கியில் சொன்னார். பயணிகளை வரவேற்றவுடன் அவர்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்தினார். பின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் திரையில் ஓட விமான பணிப்பெண்கள் செய்முறை விளக்கம் கொடுத்தனர். எத்தனையோ முறை பயணம் செய்திருந்ததால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஜன்னல் வழியே பார்த்தான். தூரத்தில் மேகங்கள் ஒன்றுக்கொன்று முட்டி மோதிக் கொண்டிருந்தன.

அன்று காலை ப்ராங்க்பர்ட்டில் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் தூங்கிக் கொண்டிருந்த அவனை எழுப்பி அவசர அவசரமாய் சென்னை செல்லுமாறு உத்தரவு வந்திருந்தது. ஏன் எதற்கு என்று கேள்வி கேட்கும் முறை அவன் தொழிலில் கிடையாது. அப்படி கேட்பவர்கள் உயிருடன் இருந்தார்களா என்றும் தெரியாது. மேற்கொண்டு தகவல்கள் அவ்வப்போது வந்து சேரும். ப்ராங்க் என்பது கூட அவன் உண்மையான பெயரா என அவனுக்கே மறந்து விட்டது. இப்போதைக்கு நம் எல்லோருக்கும் அவன் ப்ராங்க். அவசரமாய் ஓட்டலை காலி செய்து விட்டு காத்திருக்க அந்த வழியே சென்ற ஒருவன் மூலம் அவனிடமிருந்த பெட்டி அவனுக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. ப்ராங்க் என்ற பெயரில் பாஸ்போர்ட்டும் இந்தியவிசாவும் இதர விஷயங்களும் இருந்தன.

விமான ஓடுதளத்தில் பொறுமையாக பயணிக்க ஆரம்பித்த அந்த உலோகப்பறவை ஜிவ்வென பறக்க ஆரம்பித்ததும் கண்மூடி தூங்க ஆரம்பித்தான். எத்தனை நேரம் தூங்கி இருப்பானோ தெரியாது. இன்னும் சற்று தூங்கி இருக்கலாம் என தோன்றியது. விமானத்தில் பணிப்பெண்கள் ஜூஸும் வைனும் பரிமாறிக்கொண்டிருந்தனர். அருகே வந்த பணிப்பெண்ணிடம் வைன் கேட்டு வாங்கி குடித்தான். சற்று தேவலாம் போலிருந்தது. சுற்றிப்பார்க்கையில் எல்லோரும் அவரவர் முன் இருந்த திரையில் படம் பார்க்க ஐக்கியமாயிருந்தனர். இவனுக்கு ஏனோ பயணிக்கும் போது படம் பார்க்க பிடிப்பதில்லை.
அரை மணிநேரம் கழிந்தது. உணவு பொட்டலங்களை எடுத்துக் கொண்டு பணிப்பெண்கள் வந்தனர். தனக்கு கொடுக்கப்பட்ட உணவுபொட்டலத்தை சாப்பிட்டு விட்டு திரும்பவும் தூங்க ஆரம்பித்தான்.

இந்திய நேரப்படி இரவு பதினொன்றேமுக்கால் மணியளவில் விமானம் சென்னையில் இறங்கியது. இறங்குவதற்கு முன் விமான கழிவறக்குள் சென்று பைஜாமா குர்தாக்கு மாறியிருந்த ப்ராங்க் குடியுரிமை சோதனை அதிகாரி முன் நின்றான்.

“வணக்கம் ப்ராங்க். வெல்கம் டூ இண்டியா. நீங்க என்ன விஷயமாக இந்தியாவிற்கு வந்துள்ளீர்கள்?”

குடியுரிமை அதிகாரி கேட்டுக் கொண்டே பாஸ்போர்டை ஸ்கேன் செய்தார். ப்ராங்க் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அவர் முன் இருந்த திரையில் வர ஆரம்பித்தது. எல்லாம் பொய்யான விவரங்கள்.

அசராத ப்ராங்க் அமெரிக்கன் ஆங்கிலத்தில்

“நான் சுவாமி ஆத்மானந்தாவின் தீவிர பக்தன். அவரின் ஆசிரமத்திற்கு வந்து அவரை தரிசிக்க வேண்டுமென்பதற்காக வந்துள்ளேன்.”

அவனின் விசாக்காரணமும் அதுவாக இருப்பதை பார்த்து திருப்தியடைந்த அதிகாரி அவன் இந்தியமண்ணில் வந்து இறங்கியதற்கு அடையாளமாக சீலை வைத்து அனுப்பினார். சிரிப்பை உதிர்த்த ப்ராங்க் வணக்கம் சொல்லிவிட்டு கஸ்டம்ஸ் அதிகாரிகளைத் தாண்டி வெளியே வந்தான். சென்னை அந்த நேரத்திலும் வெப்பமாய் இருந்தது. குப்பென்று வியர்த்தான்.

வெளியே வந்ததும் டாக்ஸியை அமர்த்தி கொண்ட அவன் சென்னைக்கு வெளியே மதுரவாயில் தாண்டி சில கிலோமீட்டர் தொலைவிலுள்ள சுவாமி ஆத்மானந்தா ஆசிரமத்திற்கு போக பணித்தான். டாக்ஸி சென்னை சாலையில் வழுக்கிக் கொண்டிருந்த அதே வேளையில்…..

கெத்திரெட்டிப் பள்ளி…

தத்தம் வேலையை முடித்துவிட்டு பங்கர் போன்றிருந்த படுக்கைக்கு தயாராகிக் கொண்டிருந்தனர் மிருதுளாவும் ப்ரணவும். ஆராய்ச்சி இறுதிக்கட்ட நிலையில் இருப்பதால் வேலையை தான் பார்த்துக் கொள்வதாகவும் அவர்களை ஓய்வெடுக்குமாறும் ராஜசேகரன் பணித்திருந்தார். சோம்பல் முறித்தவாறே கட்டில்கள் போடப்பட்ட அறைக்குள் நுழைந்த அவர்கள் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தனர்.

சட்டென நினைவுக்கு வந்தவளாய் மிருதுளா…

“ப்ரணவ்.. நீ வேணா போய் தூங்கறதுனா தூங்கு. நான் கொஞ்சம் தியானம் பண்ணிட்டு வர்றேன்..”

“ம்ம்.. போ. நான் வேணா வெயிட் பண்றேன். உன்கூட ஆராய்ச்சி தவிர வேற விஷயம் பேசியே நாளாச்சு…”

சிரித்துக் கொண்டே அடுத்திருந்த அறைக்குள் சென்ற மிருதுளா தியானத்துள் மூழ்கலானாள்.
அரை மணி நேரம் முடிந்ததும் இதுவரை இருந்த களைப்பெல்லாம் மறைய முகத்தில் புன்சிரிப்புடன் ப்ரணவ் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். அதுவரை கண்மூடி சோபாவில் தலை சாய்த்திருந்த ப்ரணவ் கண் திறந்து அவளை முழுங்குவது போல் பார்த்தான். சோபாவில் இருந்த அவள் கைகளை எடுத்து ஓவ்வொரு விரலாய் சொடுக்கெடுக்கலானான்.

“என்னடா.. செம மூட்ல இருக்க போலிருக்கு” மிருதுளா சீண்ட…

“ஆமாமா.. எவ்ளோ நாளாச்சு உன்கூட ரசிச்சு சிரிச்சு பேசி.. பக்கத்திலேயே தான் இருக்கோம். ஆனா எங்கியோ தூரத்துல இருக்கற மாதிரி இருக்கு.”

“ஆஹா.. வேணும்னு தானே இந்த வேலைக்கே வந்தே…”

“அதே தான்... நீ வேணும்னு தான் நான் இந்த வேலைக்கே வந்தேன்…” ப்ரணவ் வழிய மிருதுளா ரசித்தாள். ‘இது இந்த குறும்புத்தனம் தான் அவனிடம் அவளுக்கு பிடித்தது. எது வேண்டுமென்றாலும் அடம் பிடிக்கும் குணம். இவள் வேண்டுமென்று இவளுக்காக ராஜசேகரனிடம் போராடி இந்த வேலைக்கு சேர்ந்திருந்தான்.

கிறக்கத்திலிருந்த மிருதுளா..

“நான் எங்க போனாலும் என் கூடவே வந்துடுவியா?”

“கண்டிப்பா.. இதிலென்ன சந்தேகம். நாம சுத்தின அந்த நாளெல்லாம் நெனச்சுப்பாத்தா..ம்ம்.. இங்க வந்து ரெண்டு வருஷத்துக்கும் மேலாச்சு… எப்போ வெளியே போவோம்னு இருக்கு..”
“கவலைப்படாத.. இன்னும் கொஞ்ச நாள் தான்.. வேலை முடிஞ்சுடும். நாட்டுக்காக இந்த வேலைய பண்றோம்னு உனக்கு பெருமையா இல்லியா..”

“நீ நாட்டுக்காக உழைக்கற.. நான் உனக்காக உழைக்கிறேன்.. ஆக மொத்தம் பாத்தா பெருமையா தான் இருக்கு…”

“அது சரி… ஸ்ஸ்..ஏ.. கையில் இப்படியா சொடக்கு எடுப்ப.. வலிக்குது”

செல்லமாய் சிணுங்கினாள் மிருதுளா…

“ஓ… செல்லமே.. வலிக்குதா.. இப்போ வலி போறதுக்கு ஒத்தடம் கொடுக்கறேன் பாரு. “

அவள் கையைப் பிடித்து மெல்லியதாய் முத்தமிட்டான்.

“டேய்.. என்னாதிது… உன் மீசை..குறுகுறுங்குது”

“மீச.. தான் ஆம்பளைக்கு அழகு…” சொல்லிக்கொண்டே மெல்ல மெல்ல அவன் உதடு அவள் கைகளின் மேலேறியது.

“சீ… என்னடா பண்ற… ரொம்பவும் மோசமாயிட்டே வர்ற…”

“ஆமா மோசம் தான். இந்த வேலை முடிஞ்சதும்.. மொதல்ல கல்யாணம்..”

“ம்ம்.. எந்த வேலை…? இப்போ பண்ணிட்டிருக்கிறதா..”

“அடி.. என்னைய சொல்லிட்டு.. நீ மோசமா பேசற…”

“அட..அட.. இவரு ரொம்ப ஒழுங்கு..” பழிப்பு காட்டினாள்.

“என்னைய பாத்தா பழுப்பு காட்டற.. உன்னை…” பற்கள் நறநறக்க.. கண்ணில் மின்னலுடன் அவன் அவளின் உதடை நோக்கி பாய்ந்தான். மறுப்பேதும் காட்டாமல் கிறங்க ஆரம்பித்திருந்தாள் மிருதுளா…

இரண்டு நாள் கழித்து..

சுவாமி ஆத்மானந்தா ஆசிரமம். மதுரவாயில் சென்னை நெடுஞ்சாலையிலிருந்து சற்று தள்ளி இருக்கிறது. வெளியே பெரிய கதவு. சுற்றிலும் அமைக்கப்பட்ட பெரிய தடுப்புச் சுவர். அவ்வளவு சீக்கிரம் யாரும் உள்ளே போய்விட முடியாது. அனுமதி உள்ளவர் மட்டும் உள்ளே வர முடியும். வெளியிலிருந்து பார்த்தால் கூரை வேய்ந்த குடிசைகள். எப்போதும் ஏதாவது பஜனை பாட்டு பாடிக்கொண்டிருக்கும்.

சுற்றியிருந்த குடிசைகளிலிருந்து சற்றே வித்தியாசப்பட்டு பெரியதாய் அமைக்கப்பட்டிருந்த அந்த குடிலில் தான் எப்போதும் பூஜைகள் நடக்கும். நடுவில் ருத்ரதாண்டவமாடும் காளி சிலை. மகா சக்தி பொருந்திய தெய்வம் என்று பேச்சு. எல்லாவற்றிலிருந்தும் சற்றே வேறுபட்டு இரண்டு மாடி கட்டிடம் அந்த வளாகத்தின் ஓரமாய் பார்ப்பதற்கு சாதாரணமாய் இருந்தது.
கட்டிடத்தின் உள்ளே விர்ரென்று ஓடிக்கொண்டிருந்த குளிர்சாதனப்பெட்டி. குளிரூட்டப்பட்டிருந்த அறையில் நடுநாயகமாய் போடப்பட்டிருந்த சோபாவில் ஒரு பக்கம் ப்ராங்க். மறு முனையில் சுவாமி ஆத்மானந்தா. எதிரில் இருந்த டீபாயில் அப்போது தான் புதிதாய் திறக்கப்பட்டிருந்த ஜானிவாக்கர் பாட்டில். யாரையோ எதிர்பார்த்து காத்திருந்தனர். நேரமாகவும் கச்சேரி ஆரம்பமாகிவிட்டது.

முதல் ரவுண்டில் இருக்கையில் ப்ராங்க் ஆத்மானந்தா பற்றி தெரிந்து கொண்டான். பூர்வாசிரம பெயர் வடிவேலன். படிக்காம ஊர் சுற்றிக் கொண்டு இருந்தான். காட்டுக்குள்ள சாமி இருக்கிறதென்று புரளி கிளம்ப காட்டுப் பக்கம் போனான். மனம் போன போக்கில் திரிந்த அவன் நாளான தாடியுடன் நாட்டுக்கு வர சாமியாக்கிவிட்டனர். சாமியாரானதும் சர்வதேச தொடர்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அதன் விளைவு தான் ப்ராங்க் வருகை.
ஆத்மானந்தா ப்ராங்க் பற்றி விசாரிக்க சின்னதாய் புன்னகையை மட்டும் உதிர்த்தான். எந்த சூழ்நிலையிலும் போதை ஏறாத வண்ணம் அவனுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது.
இரண்டாவது ரவுண்ட் ஆரம்பிக்கும் போது தான் அந்த நபர் நுழைந்தார். ஏற்கனவே பரிச்சயமாயிருந்ததால் ஆத்மானந்தா அவரைப்பார்த்து இளித்தார். பதிலுக்கு புன்னகைத்த வாறே ப்ராங்கை ஏறிட்ட அவர் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

“ப்ராங்க். வெல்கம் டூ இண்டியா..”

“நன்றி.. எனக்கு உங்களை சந்திக்க சொல்லி தகவல். அதற்கு தான் இந்த ஏற்பாடே. நீங்களும் சுவாமியின் பக்தன் தானே.”

“ஆமா. என் டிபார்மெண்டுக்கே தெரியும்.”

“ம்ம்.. சரி. இப்போதைக்கு திட்டம் என்ன? என்ன பண்ணப் போறோம்?”

தனக்கான கோப்பையில் ஜானிவாக்கரை ஊற்றிக் கொண்ட அவர் தேன்நிற திரவத்தை உறிஞ்சியவாறே..

“மூன் மிஷனுக்கான வேலைகள் முடிஞ்சாச்சு. அந்த ஏரியாக்குள்ள குறிப்பிட்ட சிலர் மட்டும் தான் போக முடியும். பல கட்ட சோதனைகள். மூணு பேர் தான் இந்த ஆராய்ச்சியில முக்கியமா வேலை செய்யறாங்க. இதப்பத்தின மொத்த விஷயங்களும் அவங்களுக்குத் தெரியும். ஆனா யாரும் இதுவரை அந்த கிராமத்தை விட்டு வெளியே வந்ததில்ல. ஆக யாராச்சும் உள்ளே போய் தான் தகவல்கள எடுத்திட்டு வரணும்.”

“ம்ம்.. ஆனா உங்களுக்குத் தான் அனுமதி இருக்கே”

“இருக்கு. கொஞ்ச நாள் முன் தான் போய்விட்டு வந்தேன். ஆனா அங்கிருந்து எதையும் வெளியே கொண்டு வர முடியாது. மாட்டிக்குவோம். அந்தளவுக்கு பாதுகாப்பு அதிகம்.”

“நீங்களே இப்படி சொன்னால் எப்படி? உங்களால முடியாததா?”

“ம்ம்.. இது உண்மையிலேயே பலமான கோட்டை. உடைப்பது ரொம்ப கஷ்டம். நீ தான் எப்படி உள்ளே போறதுக்கு யோசிக்கணும்”

சொல்லிக் கொண்டே கண்ணடித்தார் அவர். தேசிய விஞ்ஞானக்குழுத் தலைவர் நாராயணரெட்டி.

Monday, May 3, 2010

உன்னை தற்கொலை செய்யவா - பகுதி 3


அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் இருந்தான் மாதவன். எல்லாம் கனவு போலிருந்தது. எட்டிப்பார்த்த மறுகணம் உலகமே சுழல்வது போலிருந்தது. சற்று நேரத்தில் போலீஸும் வந்துவிட்டது. மார்சுவரி வண்டியும் டாக்டர்களும் ஆஜராயினர். அவரவர் செவ்வனே தன் கடமையை செய்ய சரண்யா விழுந்த இடத்தைச் சுற்றி கோடு வரையப்பட்டது. சரண்யாவின் உடலைப் போர்த்தி ஸ்டெச்சரில் ஏற்றினர். கண்ணில் நீர்வராமல் மனத்தில் பாரம் அழுத்த வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் மாதவன்.
சம்பவம் நடந்து ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்கும் மேலிருக்கும். வேடிக்கைப் பார்த்த மக்களுக்கு தத்தம் வேலைகள் நினைவுக்கு வந்து ஓவ்வொருத்தராய் நழுவ ஆரம்பித்திருந்தனர். அந்த அபார்ட்மெண்ட்டின் செக்ரட்டரி இன்ஸ்பெக்டர் வைபவ்வின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.
இன்ஸ்பெக்டர் வைபவ். எப்போதோ தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகத்திற்கு வந்து செட்டிலாயிருந்த முன்னோர். பெங்களூர் வாசத்தில் தமிழ் கொஞ்சிக் கொஞ்சி வரும். இன்ஸ்பெக்டர் ஆகவேண்டும் என்ற வைராக்யத்தில் படித்து முடித்து தேர்வில் வெற்றிப் பெற்று புதிதாய் இந்தப்பதவிக்கு வந்திருப்பவன். துக்கடா கேஸ்களையே பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கு இந்த மரணம் தலைவலியை தரப்போகின்றது என்பதை அப்போது அவன் அறிந்திருக்கவில்லை.
வைபவ்வும் செக்ரட்டரியும் சரளமாக கன்னடத்தில் மாத்தாடிக் கொண்டிருந்தனர்.
“இந்த பொண்ணு இந்த அபார்ட்மெண்ட்ல எத்தனை நாளா தங்கியிருக்குது?”
“ஒரு வருஷத்துக்கு மேலிருக்கும் சார். அந்தப்பொண்ணும் இன்னும் இரண்டு பொண்ணுங்களும் தங்கியிருக்காங்க. அமைதியான பொண்ணுங்க. வீட்டில இருக்கறதே தெரியாது. என்ன பிரச்சனையோ? இப்படி செத்துப் போச்சு” உண்மையிலேயே பரிதாபப்பட்டார்.
“இந்த பொண்ணு எங்க வேலை பாக்குதுன்னாவது தெரியுமா? எந்த ஊர்?”
“அதெல்லாம் தெரியாது சார். அபார்ட்மெண்ட் வாடகைக்கு விடறவங்ககிட்ட தான் அந்த விஷயமெல்லாம் இருக்கும். எத்தனையோ தடவ மீட்டிங்ல சொல்லிட்டோம். இது மாதிரி யாருக்கு வாடகைக்கு விட்டாலும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கனு. யார் சார் கேக்கறாங்க?”
“ஓ.. கூட தங்கியிருக்கற பொண்ணுங்களப் பத்தி தெரியுமா.. எங்க வேலை பாக்கறாங்க.. காண்டாக்ட் நம்பர்ஸ்…”
“இல்லே.. சார். எதுவும் தெரியாது. ஆனா வீட்டு ஓனருக்கு தெரிஞ்சிருக்கணும். அக்ரிமெண்ட்ல இருக்கும். ஒரு நிமிஷம் சார். அவர் அட்ரஸ் போன் நம்பர் எடுத்துத் தாரேன். அவர்கிட்ட கேட்டா தெரியும்..”
“அத குடுங்க சார் முதல்ல. இந்த பொண்ணோட பேரண்ட்ஸுக்கு தெரியப்படுத்தணும். அப்புறம் தடுமாறி கீழே விழ சான்ஸ் இருக்கா?”
“இல்லே சார்.. அதுக்கெல்லாம் சான்ஸே இல்லே. தடுப்புச் சுவரே மூணடி மேலிருக்கும்.”
“ஓ… இந்த பொண்ணு கீழே விழுந்தப்போ பார்த்தவங்க யாரு..?”
“இதோ.. மூணாவது மாடியில குடியிருக்கற மாமி தான். இங்க அஞ்சு வருஷமா தங்கியிருக்காங்க..”
செக்ரட்டரி மாமியைக் கூப்பிட மாமி தயங்கி தயங்கி வந்தார்.
“மேடம் நீங்க தான் போன் பண்ணினதா?”
“ஆமா சார். காலையில் எந்திருச்சு பையனுக்கு மாட்டுப்பொண்ணும் ஆபிஸுக்கு போனதும் குளிச்சுட்டு காய்கறி வாங்கப்போலாம்னு கீழே இறங்கினேன். ஏதோ சத்தம் கேட்டு திரும்பி பாத்தா இந்த பொண்ணு கட்டை மேலேர்ந்து கீழ குதிச்சா. எனக்கு பதட்டத்துல ஒன்னுமே புரியல. அதான் போலீஸுக்கு போன் செஞ்சேன்.”
“இந்தப்பொண்ணு தானா குதிச்சுதா.. இல்லே யாராவது தள்ளிவிட்டாங்களா? யாராச்சும் ஓடிப்போறத பாத்தீங்களா?”
“இல்லீங்க. நான் காய்கறி வாங்க கீழே இறங்கறப்ப இந்தப் பொண்ணு வராண்டாவில நின்னு பேசிட்டு இருந்துச்சு. அத தாண்டி லிப்ட்ல கீழ வந்தப்புறம் போது கீழே விழுந்துடுச்சு. அப்போ அந்த ப்ளோர்ல யாருமே இல்ல.. கண்டிப்பா தெரியும்..”
இன்ஸ்பெக்டருக்கு சப்பென்று ஆனது. தற்கொலை கேஸ். ஆனா எதுக்கு தற்கொலை பண்ணிக்கணும். யோசனையில் இருக்கும் போதே ஒரு குரல்.
“எக்ஸ்க்யூஸ் மீ சார்.”
சிந்தனை கலைந்து “எஸ்”
“சார். என் பேர் தனுஜா. சரண்யாவோட ப்ரண்ட். சரண்யா கீழே விழுந்து இறந்து போய்ட்டதா சொல்றாங்க.. என்ன சார் ஆச்சு?” கண்கள் கலங்க தனுஜா நிற்க நிமிர்ந்தான் வைபவ்.
“நீங்க தான் மேடம் சொல்லணும். உங்க ப்ரண்ட் மேலேர்ந்து கீழே குதிச்சிட்டதா போன் வந்துச்சு. வந்து பார்த்தா இறந்திருந்தாங்க. அவங்க உடலை அடாப்ஸிக்கு அனுப்பிட்டு இன்வெஸ்டிகேஷன ஆரம்பிச்சிருக்கோம். நீங்க சொல்றதுல தான் என்ன ஆச்சுன்னு தெரியணும்.. பை த வே அவங்க அப்பா அம்மாக்கு தெரியப்படுத்திடுங்க. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.”
கண்ணீருடன் தனுஜா தலையாட்ட
“அப்புறம் உங்க ப்ரண்ட் சரண்யாவுக்கு யாராச்சும் வேண்டப்பட்டவங்க இருக்காங்களா..?”
தனுஜா மௌனமாய் மாதவன் இருந்த பக்கம் கைகாட்டினாள். அப்போது தான் சுவரோரமாய் சாய்ந்து சடலத்தைச் சுற்றி கிழிக்கப் பட்டிருந்த கோடுகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மாதவனைப் பார்த்தான் வைபவ்.
“சரி. மேடம். நீங்க அவங்க அப்பா அம்மாக்கிட்ட தகவல் சொல்லிட்டு வாங்க. நான் அவர்க்கிட்ட கொஞ்சம் விசாரிக்கறேன்..”
தனுஜா நகர மாதவனை நோக்கிப் போனான் வைபவ்.
“ஹலோ மிஸ்டர். நீங்க இறந்துபோனவங்களுக்கு என்ன வேணும்?”
அப்போது தான் நினைவுக்குத் திரும்பிய மாதவன், வற்றிப் போய் காய்ந்திருந்த கண்களுடன் வைபவ்வை பார்த்து
“நான் அவளுக்கு ப்யாண்ஸி சார். இன்னும் ஒன்னரை மாசத்துல கல்யாணம் பண்ணிக்க போறோம். பண்ணிக்க இருந்தோம்..ப்ச்.. இன்னிக்குக் கூட ரெண்டு பேரும் வெளில போறதா ப்ளான். அதுக்காக ஆச ஆசையா வந்தேன். என்னாச்சுன்னே தெரியல..?”
“ஐம் ரியலி சாரி.. உங்க பேர்?”
“மாதவன் சார்…”
“சாரி டூ டிஸ்டர்ப் யூ.. எதுக்காக இவங்க தற்கொலை பண்ணிக்கிட்டாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா?”
அப்போது தான் வெடித்து வரும் அழுகையுடன்..
“எதுக்கு சார் தற்கொலை பண்ணிக்கணும்.. இன்னிக்கு நாங்க பாத்துக்கிட்டு அம்பதாவது நாள். அதைக் கொண்டாடலாம்னு ப்ளான் பண்ணிருந்தோம். அவளை பிக்கப் பண்ணிட்டு போகதான் வந்தேன். வந்து பாத்தா இப்படி. ஏன் சார் தற்கொலை பண்ணனும்.. அவ ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தா சார்…”
சொல்லிக் கொண்டிருக்கும் போதே கண்ணீர் பிரவாகம் எடுக்க மேலும் தொல்லைத் தர விரும்பாமல்.
“ஓக்கே மாதவன். உங்களை மேலும் டிஸ்டர்ப் பண்ண விரும்பல. அவங்க பேரண்ட்ஸுக்கு தகவல் சொல்ல சொல்லிட்டேன். அப்புறமா உங்களை நான் சந்திக்கறேன். உங்க கஷ்டம் புரியுது. ரிலாக்ஸ் யுவர்செல்ஃப். “
தலையாட்டிக் கொண்டிருந்த மாதவன் இன்னும் வெறித்துக் கொண்டிருக்க தொலைப்பேசிவிட்டு வரும் தனுஜாவை பார்த்து நடக்கலானார்.
“என்ன மேடம் அவங்க பேரண்ட்ஸுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டீங்களா?”
“ம்ம்.. பண்ணியாச்சு சார். கேட்டதும் அவங்கம்மா ஓன்னு அழ ஆரம்பிச்சுட்டாங்க. டாக்ஸி புடிச்சு வராங்க.” கொஞ்சம் தெளிவானது போலிருந்தாள்.
“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். இஃப் யு டோண்ட் மைண்ட் உங்க வீட்டுக்குள்ள போய் பேசலாமா? அப்படியே ஏதாச்சும் துப்பு கிடைக்குதான்னு பாக்கணும்”
“ம்ம்.. ஓக்கே சார்.”
லிஃப்ட் ஏறும் போது மாதவன் இருந்த திசையினை பார்த்தார். இன்னமும் கீழே வரையப்பட்டிருந்த கோடுகளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
வீட்டுக்குள் நுழைந்ததும் அவன் பார்வை ஒவ்வொரு பொருளாய் அலச ஆரம்பித்தது. வீடு சுத்தமாய் இருந்தது. பெண்கள் இருப்பதற்கான அறிகுறிகள் எங்கேயும் தென்பட்டது. குளியலறைக்குள் நுழைந்தால் சோப்பு வாசம் கமகம என்றிருந்தது. இறப்பதற்கு முன் தான் குளித்திருப்பாள் போலும்.
“உங்களுக்கும் சரண்யாவிற்கும் எப்படி பழக்கம்?”
“நாங்க ரெண்டு பேரும் காலேஜ்லேர்ந்து ப்ரண்ட்ஸ் சார். பெங்களூர்லேயே வேலை கிடைச்சதும் ஒன்னா வீடு எடுத்து தங்கிட்டு இருந்தோம்.”
“ஓ.. காலேஜ் படிக்கும் போது காதல்..கீதல்னு.?”
“அப்படியெல்லாம் ஒன்னுமில்லை சார். வெளிய பாக்க அமைதியா இருப்பா ஆனா அறுந்த வாலு. நிறைய ப்ரண்ட்ஸ் இருக்காங்க. ஆனா காதல்னு ஒன்னும் கிடையாது. மேரேஜ் பிக்ஃஸ் ஆனப்புறம் தான் மாதவனை விழுந்து விழுந்து காதலிச்சுட்டு இருந்தா..”
“ம்ம். மாதவன் எப்படி? அவர பத்தி உங்களுக்குத் தெரியுமா?”
“ரெண்டு மூணு தடவை பேசிருக்கேன். ஆள் ஜெம் ஆஃப் த பர்சன். நல்ல மனுஷன். ரொம்ப நாளா காதலிக்கறவங்க மாதிரி ரெண்டு பேரும் அவ்ளோ உருகிட்டு இருப்பாங்க. இவ இழப்ப எப்படி தான் தாங்கிக்கப் போறாரோ?” மாதவன் மேலிருந்த சந்தேகக் கோடு மெல்லியதாய் அழிய ஆரம்பித்தது.
“வேற ஏதாச்சும் உங்க ப்ரண்ட டிஸ்டர்ப் பண்ணின விஷயங்கள்..? இப்படி தற்கொலை பண்ணிக்கற அளவுக்கு..”
“அவ தற்கொலை பண்ணிட்டு இருக்கான்னே எனக்கு நம்ப முடியல சார். அவ்ளோ தைரியமான பொண்ணு. எங்களுக்கெல்லாம் தெம்பே அவ பேச்சு தான். காலையில கூட ஆபிஸுக்கு போனதும் அவகிட்டேர்ந்து போன். மாதவன் கூட வெளிய போறதாவும் ராத்திரி வர லேட்டானாலும் ஆகும்னும் சந்தோஷமா சொன்னா.. சொல்லிட்டு இருக்கும் போதே தடால்னு சத்தம் கேட்டுச்சு. அப்புறம் அவ நம்பர் ஸ்விட்ச் ஆஃப் ஆச்சுனு வந்தது. என்ன ஆச்சு ஏதாச்சுனு புரியாம ஆபிஸுக்கு லீவ் போட்டுட்டு வந்தேன். வந்துப்பாத்தா…”
இதுவரை நிறுத்தி வைத்திருந்த கண்ணீர் மறுபடி எட்டிப்பார்க்க ஆரம்பிக்க..
“ஓக்கே.. தனுஜா. இதுக்கு மேல கஷ்டப்படுத்த விரும்பல. அப்புறமா பேசலாம். கொஞ்சம் சரண்யா திங்க்ஸ் இருக்கற இடத்தை காட்டுனீங்கன்னா.. ஏதாச்சும் கிடைக்குதான்னு பாக்குறேன். அப்புறம் சரண்யாவோட பேரண்ட்ஸ்கிட்ட அப்புறமா விசாரிக்க வரேனு சொல்லுங்க. அவங்க எந்த ஊரு?”
“சேலம்..”
யோசித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான் வைபவ். ஏறக்குறைய ஒரு மணிநேரம் தேடியும் ஒன்றும் உருப்படியாக கிடைக்காததால் தனுஜாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினான். அன்று முழுக்க வேற வேலையிருந்ததால கவனம் திசை மாறிப் போச்சு. இதற்கிடையில் சரண்யாவின் அம்மாவும் அப்பாவும் வந்து சரண்யாவின் உடலை வாங்கிச் சென்றிருந்தனர். சாயந்திரம் போல கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் போது மனம் இந்த கேஸை அசைப்போட்டது. ‘அப்பட்டமா தற்கொலைன்னு தெரியுது ஆனா ஏன்னு மோட்டோ மட்டும் கிடைக்கல..ம்ம். மாதவன்கிட்டேயும் தனுஜாகிட்டேயும் இன்னும் பேசிப் பார்க்கணும். முடிஞ்சா ஒருதடவை சேலம் போயிட்டு வரலாம்.’
இரவு வர வீட்டிற்கு சென்று சாப்பிட்டு விட்டு படுக்கைக்கு போனான். கனவில் சரண்யாவின் உடலும் மாதவன் கண்ணீரும் மாறி மாறி வந்தது. அப்போது தனுஜாவின் குரல் எதிரொலித்தது. ‘காலையில கூட ஆபிஸுக்கு போனதும் அவகிட்டேர்ந்து போன். மாதவன் கூட வெளிய போறதாவும் ராத்திரி வர லேட்டானாலும் ஆகும்னும் சந்தோஷமா சொன்னா.. சொல்லிட்டு இருக்கும் போதே தடால்னு சத்தம் கேட்டுச்சு. அப்புறம் அவ நம்பர் ஸ்விட்ச் ஆஃப் ஆச்சுனு வந்தது.’
திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான் வைபவ். காலையிலேர்ந்த பரபரப்பில அந்த மொபைல் போன் மேட்டர கவனிக்கவில்லையே. பாரன்ஸிக் டிபார்மெண்ட்ல அங்கிருந்த பொருட்களையெல்லாம் சேகரிச்சுட்டு போயிருந்தார்கள். ஒரு வேளை மொபைல்ல ஏதாச்சும்? வேகவேகமாக பாரன்ஸிக் லேப்பிற்கு டயலிட்டு பேசினான். காலையில் நடந்த தற்கொலைக்கான ஆதாரங்கள் இருக்கிறதா என்று விசாரித்தான். மறுமுனையில் ஒப்பிக்கப்பட்ட பொருட்களில் மொபைல் போனும் அதன் உதிர்பாகங்களும் இல்லை. அந்த லேப்பிலிருந்த அந்த பொருட்கள் பத்திரமாய் தொலைந்து போயிருந்தது.

Friday, April 30, 2010

வலி

இருக்கும் ஒரு இருபத்தி அஞ்சு வருஷத்துக்கும் மேல இந்த கோயிலுக்குள்ள நுழைஞ்சு. வானுயர நிற்கும் கோபுரத்தையும் மாடவாசலையும் தாண்டிப் போனா நிறைய பிரகாரங்களா வரும். சின்ன வயசுல கோயில சுத்தறது தான் பொழுதுபோக்கே. இந்த அம்பத்தி எட்டு வருஷமா இந்த ஊர விட்டு எங்கேயும் போனதில்லை. தினமும் கோயில் கோபுரத்தை பார்ப்பேன். சின்ன வயசிலேர்ந்தே அப்பா புத்தியோட பக்தியும் சேர்த்து தான் சொல்லித் தந்தார். கடவுள சேவிச்சா அன்னிக்கு நாள் நல்லாயிருக்கும்னு. தினமும் கோபுரதரிசனம் முடிச்சதுக்கு அப்புறம் தான் மத்த வேலைகளே ஆரம்பிக்கும். எல்லாம் நல்லா தான் போயிட்டு இருந்துச்சு அந்த சம்பவத்துக்கு முன்னாடி வரை.
பையனுக்கு கல்யாண வயசாச்சுன்னு பொண்ணு தேட ஆரம்பிச்ச அப்பா அதே ஊர்லேயே பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி வச்சுட்டார். கல்யாணம் முடிச்ச கையோட தன் வேலை முடிஞ்சுடுச்சுனு தோணுச்சோ என்னவோ எண்ணி பத்து மாசத்துலேயே போய் சேர்ந்துட்டார். அப்போ கல்யாணி நிறைமாச கர்ப்பிணி. அப்பா காரியமெல்லாம் முடிஞ்சு அடுத்த ஒரு வாரத்துலேயே வரது பொறந்தான். அப்பாவே வந்து பொறந்திருக்கான்னு எல்லோருக்கும் சந்தோஷம்.
சோகத்திலேயும் அம்மாக்கு ஒரு சந்தோஷம். சந்ததி தழைச்சுடுச்சே.. ஆத்துக்காரரே வந்து பேரனா பொறந்த மாதிரி. வரதுக்குட்டியை கொஞ்ச ஆரம்பிச்சா. நல்லதும் கெட்டதும் மாறி மாறி வரும்னு சொல்லுவாங்க. அப்பா கல்யாணம் பண்ணிக்கிட்டதுலேர்ந்து எங்கேயும் தனியா போனதில்லையாம். அது தான் முத வருஷ திதி வர்றதுக்குள்ளேயே தனியா இருக்க பயந்து அம்மாவையும் கூட்டிக்கிட்டார். பேரனைக் கொஞ்சிக்கிட்டு இருக்கறப்பவே நெஞ்சு வலின்னு படுத்தவ தான். கண்ணை அப்புறம் தொறக்கவே இல்ல.
அப்புறம் வாழ்க்கை போயிட்டு இருந்துச்சு. அதே ஊர்லேயே தாசில்தார் ஆபிஸ்ல வேலை. வாழ்க்கைக்கேற்ற வருமானம். கல்யாணியும் ரொம்ப ரொம்ப நல்லவ. புருஷங்காரன் கொண்டு வர்ற சம்பளத்துல கச்சிதமா குடும்பம் நடத்த தெரிஞ்சவ. வரதுக்கு அப்புறம் லக்ஷ்மி பொறந்தா. எல்லாம் நல்லபடியா தான் இருந்துச்சு அந்த நாள் வரைக்கும்.
வீட்ல ஒரே பையங்கறதால எப்பவுமே வரதுக்கு செல்லம் அதிகம். எப்பவுமே அவன் செட்டு பசங்களோட சுத்திக்கிட்டே இருப்பான். ஆனா ஒழுக்கந்தவறாதவன். சில சமயம் திட்டுனா மட்டும் அப்படி மொறச்சு பார்ப்பான். யாராச்சும் கொஞ்ச உதவி பண்ணுடான்னு சொன்னா மொத ஆளா போய் நிப்பான். அப்படியே அப்பா குணம்.
அன்னிக்கு ஆடிப் பெருக்கு. ஆத்துல தண்ணி நல்லா வந்துட்டு இருந்துச்சு. பசங்களோட சேர்ந்து குளிச்சுட்டு வர்றேன் கிளம்பிப் போனவன் தான். பையன ஆத்துத் தண்ணி அடிச்சுட்டு போச்சுனு தகவல் மட்டும் தான் வந்து சேந்துச்சு. அடிச்சுபுடிச்சு ஆத்துக்கு ஓடினா அவன மாதிரி இன்னும் ரெண்டு மூணு பேரும் போயிட்டாங்களாம். கண்டுபுடிக்க முடியலேன்னு சொன்னாங்க. கல்யாணி அழுது அரற்ற கோயிலுக்கு ஓடினேன்.
‘எப்பவுமே நல்லது கெட்டதுக்கெல்லாம் நீ தான் காரணம்னு அப்பா சொல்லுவார். இப்போ நடக்கறதுக்கும் நீ தானே காரணம். காரணமே இல்லாம அப்பாவ கொண்டு போய் வரதுவா பொறக்க வச்ச. இப்போ பத்து வயசு புள்ளைக்கு ஏன் இந்த கண்டம். கடவுளே..! நல்லபடியா என் புள்ளைய மட்டும் என்கிட்ட சேத்துடு. நான் காலம் முழுக்க உனக்கு கடமைப்பட்டிருப்பேன்…”
அடுத்த நாள் அஞ்சு கிலோமீட்டர் தள்ளி ஒரு புதர்ல வரது கிடைச்சான். அன்னிக்கு கடைசியா அந்த ஆத்துல முழுகினது தான். அப்புறம் அந்த கோயில் பக்கமும் போனதில்ல. ஆத்துக்கும் போனதில்ல. கல்யாணியும் லக்ஷ்மியும் எவ்ளோ கூப்பிட்டாலும் கோயிலுக்குள்ள போகக்கூடாதுங்கற வைராக்கியம் தான் ஜெயிச்சுக்கிட்டு இருந்துச்சு.
இதோ.. ரிட்டையர் ஆயாச்சு. லக்ஷ்மியும் நல்ல இடத்துல வாக்கப்பட்டு போயிட்டா. நேத்து தான் வேலைக்கு சேர்ந்த மாதிரி இருந்துச்சு. அதுக்குள்ள ரிட்டையர்மெண்ட் வயசாயிடுச்சு. கல்யாணிக்குத் தான் கவலை. ‘இனி எப்படி நான் இருக்கப் போறேன்’னு. ‘அடிப் பைத்தியமே. இவ்ளோ நாள் எனக்காக நம்ம குடும்பத்துக்காக இவ்ளோ தூரம் உழைச்சிருக்க. கொஞ்சம் ரெஸ்ட் எடு’. காலங்கார்த்தாலேயே எந்திரிச்சு பால் வாங்கிட்டு வந்து அவளை எழுப்பாம காபி போட்டு.. அட அவ எப்படிப்பட்ட காபி குடிப்பா.. சக்கர தூக்கலாவா கம்மியா வா.. தெரியலியே.. இதுகூட தெரியாத முட்டாளா நான். என்னைப்பத்தி எல்லா விஷயமும் அவளுக்குத் தெரியும்.. எனக்கு? என்னை நானே நொந்துக்கிட்டேன்.
அவளை எழுப்பிவிட்டதும் ஆச்சர்யமா மலங்க மலங்க முழிச்சா. பாக்கறதுக்கே சிரிப்பா இருந்துச்சு. என் கல்யாணி இவ்ளோ அழகா என்ன? கலைஞ்சு போன தலையில அங்கங்க நரைமுடி. கன்னத்துலேயும் நெத்தியிலேயும் சுருக்கங்கள். ம்ம். வயசாயிடுச்சு. ஆனாலும் கொள்ள அழகு. எனக்கும் தான் நரைவிழுந்து பாதி முடி காணாம போயிடுச்சு. இதுநாள் வரை சமையக்கட்டுக்குள்ளேயே வராத மனுஷன் காபி போட்டு எடுத்துட்டு வந்துட்டானேன்னு அவளுக்கு தலைகால் புரியல. மகளுக்கு போன போட்டு அப்படியே ஒப்பிக்க ஆரம்பிச்சுட்டா. சிரிப்பா தான் வந்துச்சு. அடியே இனி இருக்கற நாளெல்லாம் உன்கூடத் தான் உனக்காகத் தான்.
காலையிலே சாப்பிட்டு வெளியே வந்ததும் கோயில் கோபுரம் கண்ணுக்குத் தெரிஞ்சது. இத்தனை நாள் போகாதவன் இன்னிக்கு போய் தான் பார்ப்போமே எனத் தோண உள்ளே நுழைஞ்சேன். ரொம்பவே மாறிப்போச்சு. அதிசயமா இருந்துச்சு. பிரகாரங்கள தாண்டி அந்த ஆயிரங்கால் மண்டத்துல வந்து உட்காந்த போது மனசுக்கு இதமா இருந்துச்சு. நினைச்சுப் பாத்தே சிரிச்சுக்கிட்டேன். கடவுள்கிட்ட சண்ட போட்டத நெனச்சு. அப்போ தான் அந்த ஜோடி என்னைக் கடந்து போனாங்க. புதுசா கல்யாணம் ஆன ஜோடி போல. பையன் முகத்துல அப்படி ஒரு சந்தோஷம். வரது இருந்தா இந்நேரம் இவன மாதிரி தான் இருப்பான். கொஞ்ச நேரம் அப்படியே கண்ணசந்துட்டேன்.
யாரோ அழற சத்தம் கேட்டு திடுக்கிட்டு எந்திருச்சேன். நானிருப்பது தெரியாமல் ரெண்டு தூண் தள்ளி ஒருத்தன் அழுதுட்டு இருந்தான். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பாத்த பையன் தான்.
‘தம்பி.. ஏன்ப்பா அழற..?’
நிமிர்ந்து பாத்த அவன் அவசர அவசரமாய் கண்ணை துடைச்சுக்கிட்டான். ‘ஒன்னுமில்லீங்க’.
‘சரிப்பா.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ஒரு பொண்ணோட சாமி கும்பிடப்போன. இப்போ தனியா அழறியே? என்னாச்சு?’ அவன் முகம் வாட்டத்துக்கு போச்சு.
‘ஒன்னுமில்லீங்க. அவ என் பொண்டாட்டி தான்.’
‘மங்களகரமான லட்சணமான பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு ஏன்ம்பா அழற?’
‘அது ஒன்னு தான் கொறச்சல். அத நம்பி தான் ஏமாந்தேன்.’
‘கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுப்பா’
 ‘போன வாரம் தான் சார் எனக்கு கல்யாணமாச்சு. நான் பெங்களூரில இஞ்சினியரா இருக்கேன்.’
‘ம்’
‘கல்யாணத்துக்கு முன்னாடி போன் பண்ணுறபோதெல்லாம் நல்லா தான் பேசிட்டு இருந்தா. கல்யாணம் முடிஞ்ச அன்னிக்கு என்ன தொடக்கூடாதுன்னுட்டா.. சரி. கூச்சப்படறா. சரியாயிடும்னு இருந்துட்டேன். இன்னிக்கு திடீர்னு கோவிலுக்குப் போலாம்னு சொன்னா. சரியாயிட்டா போலனு இங்க வந்து பாத்தா..’
‘ம்..ம்’
‘யாரோ ஒருத்தன காமிச்சு இவன தான் லவ் பண்றேன்னு சொல்றா. தலகால் புரியல. என்ன சொல்றேன்னு கேட்டா.. ரொம்ப நாளா ரெண்டு பேரும் லவ் பண்றோம். வீட்டுலேயும் தெரியும். இவர் வேலை விஷயமா வெளிநாடு போயிருந்தார். அப்போன்னு பாத்து கல்யாணத்துக்கு நிச்சயம் பண்ணிட்டாங்க. என்ன பண்றதுன்னு புரியல. இவருக்கும் வர முடியல. உங்ககிட்ட சொன்னா இவரை கொன்னுடுவோம்னு வீட்ல மிரட்டினாங்க.. எங்களுக்கும் என்ன பண்றதுனு புரியலன்னு சொன்னா சார்..’
‘என்ன தம்பி இவ்ளோ சாதாரணமா சொல்ற. அதுக்காக உன்னைய கல்யாணம் பண்ணி கழுத்தறுக்கறது எந்த விதத்துல நியாயம்?’
‘அதே தான். சார். நான் பாட்டுட்டு என் வேலைய பாத்துட்டு இருந்தேன். இதான் பொண்ணு புடிச்சிருக்கான்னு கேட்டுட்டு கல்யாணமும் பண்ணிவச்சுட்டு இப்போ அவ வேற ஒருத்தன காமிச்சு அவன் கூடத் தான் வாழப்போறேன்னு சொல்றா. நான் என்ன சார் தப்பு பண்ணினேன்? இவங்க காதலிச்சா கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே.. என் லைஃப்ல ஏன் சார் விளையாடறாங்க…?’
‘புரியுது தம்பி. உன் கோவம் புரியுது. இப்போ அந்த பொண்ணு எங்க…?’
‘எல்லாத்தையும் பேசிட்டு இன்னிக்கு தான் இவர் வந்தார். இதுக்கு மேலயும் உங்கள நாங்க தொந்தரவு பண்ணல. மன்னிச்சுக்கோங்கனு கழுத்தில இருந்த தாலிய கழட்டி கையில குடுத்துட்டு அவன்கூட போயிட்டா சார்…’ சொல்லிட்டு இருக்கும்போதே அழ ஆரம்பிச்சான். என்ன சொல்றதுன்னே தெரியல. ஏன் எல்லோருக்கும் இப்படி கஷ்டம் வருது. இந்தப்பையன் என்ன பாவம் பண்ணினான். இந்த உலகத்துல கடவுளே இல்லியா.. இவ்ளோ பெரிசு பெரிசா கோவில்லாம் கட்டி வச்சிருக்காங்க. அப்ப கூட மக்களுக்கு நல்லது பண்ணணும்னு ஏன் கடவுளுக்கு தோண மாட்டேங்குது. அந்த பையனுக்காக மனசு கஷ்டப்பட்டது.
‘கவலைப்படாதப்பா. எல்லாம் நல்லபடியா நடக்கும். தைரியமா வீட்டுக்குப் போ. நடந்தத சொல்லு. எல்லா பிரச்சனைக்கும் தீர்வு உண்டு. மனசு வலிக்கத் தான் செய்யும். புரியுது. கொஞ்ச காலம் போனா குழம்பின குட்டை மாறி இருக்கிற மனசு தெளிவாயிடும்.’
அவன் முகம் மாறியது. தெளிவு கொஞ்சம் கண்ணில் தெரிஞ்சது.
‘சரி தான். என் பிரச்சனை.. என்னோட போகட்டும்.. வீட்ல போய் என்ன சொல்லப்போறேன்னே தெரியல..’
‘கவலையவிடுப்பா.. எல்லாம் நல்லதுக்கு தான். இப்போவே உண்மை தெரிஞ்சுதே.. தைரியமா போ.’ சலிச்சுக்கிட்டே கிளம்பினான். மனசு அவனுக்காக பரிதாபப்பட்டது. ‘இவனுக்கு என்ன குறை? இந்த வயசுலேயே ஏன் இந்த வலி??’
அடுத்தநாள் காலையில எந்திரிச்சதும் முகத்துல சந்தோஷமா என் கல்யாணி காபி குடுத்துட்டு பேப்பர எடுத்துட்டு வந்தா. காபிய குடிச்சுக்கிட்டே பேப்பர திறந்தா கொட்ட எழுத்தில ‘கள்ளக் காதலனுடன் புதுமனைவி ஓட்டம். கணவன் தற்கொலை’னு போட்டிருந்தான். வரது செத்ததுக்கு அப்புறம் மொத மொறயா என் கண்ணுல தாரை தாரையா கண்ணீர் வந்தது. மனசு வலித்தது.


Blogger Templates by Isnaini Dot Com. Powered by Blogger and Supported by ArchiThings.Com - Modern Architecture Design