Tuesday, August 28, 2012

ஆசை ஒரு புல்வெளி




மனினோட மூளையே ஒரு அதிசயம். எத்தனை எத்தனை விஷயங்களைத் தான் தனக்குள்ள வச்சுக்கிட்டு அமைதியா இருக்கு. என்னடா.. தலையும் புரியாம வாலும் புரியாம இந்த வயசுலேயே தத்துவம் பேச ஆரம்பிச்சிட்டான்னு பயப்படாதீங்க. இது தொத்து நோயல்ல. சொல்ல வந்த்து மனித மூளைக்குள்ள பலவகையா படிஞ்சி இருக்குற நினைவுகளை. எங்கேயோ எப்போதோ நடந்த சம்பவங்கள் அடிமனசுல ஆழத்துல புதைஞ்சி இருக்கு. சில நேரம் எத்தனை தான் யோசிச்சாலும் ஞாபகத்துக்கு வராது. ஆனா சில நேரங்கள்ல அதைப் பத்தி யோசிக்காமலேயே தண்ணீல போடப்பட்ட பந்து மாதிரி மேலெழும்பி வரும். இது கூட அந்த மாதிரி தான். என் வாழ்க்கையில் ஒரு நாள்.

கிட்டத்தட்ட நாலு வருஷம் இருக்கலாம். பெங்களூரில் வேலை பார்த்திட்டு இருந்த காலம். அப்போல்லாம் எங்க அலுவலகத்துல வாரயிறுதில மருத்துவ முகாம் நடத்துவோம். நானும் போவேன். நான் இந்த மாதிரி முகாம்ல கலந்துக்க ஆரம்பிச்சது ஒரு சுயநலத்துக்காக. என் நெருங்கிய நண்பர் செந்தில் தான் மருத்துவ முகாம்களுக்கு ஒருங்கிணைப்பாளர். வேலைக்கு சேர்ந்த காலகட்ட்த்துல ஒருதடவை இந்த முகாம்கள பத்தி சொன்னார். முகாம் ஒரு நாள் நடக்கும். பெங்களூரை சுத்தியுள்ள ஏதாச்சும் ஒரு கிராமத்துல இருக்கற பள்ளியில நடக்கும். மருத்துவர்கள் மற்றும் மருந்துகளை நாங்களே கொண்டு போயிடுவோம். என்னை ஈர்த்த ஒரு விஷயம் என்னன்னா. மதிய சாப்பாடு ஊர்காரங்களே ஏற்பாடு பண்ணிவாங்க. அது சர்க்கரை போட்ட சாம்பார சாப்பிட்டு மனசும் வாயும் வெறுத்திருந்த காலம். நல்ல சாப்பாடு கிராமத்து சாப்பாடு கிடைக்கும்ங்கற ஒரே காரணத்துக்காக போக ஆரம்பிச்சேன். இப்படியே ரெண்டு மூணு வருஷத்துல எங்க டிபார்ட்மெண்ட் ஒருங்கிணைப்பாளரா ஆனேன்.

எப்போதும் சனிக்கிழமை தான் முகாமுக்கு போவோம். அந்த முறை எங்க டிபார்ட்மெண்ட் ஆட்களை கூட்டிக்கிட்டு போகணும். சிலர் ஆர்வமா வந்து கலந்துப்பாங்க. சிலர் மேனேஜர் வர்றார்ங்கற காரணத்துனால வருவாங்க. சிலர நாம தான் பேசி சரிகட்டி கூட்டிட்டு போகணும். ஒருவழியா பேசி சமாளிச்சு கிளம்பியாச்சு. நாங்க போன ஊர் கோலார் பக்கத்துல இருக்கற ஒசூர்ங்கற ஊர். கிருஷ்ணகிரி பக்கத்துல இருக்கிற ஊருக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லே.

காலையில் பஸ்ஸில் போகும் வழியிலே சாப்பிட்டு ஊருக்கு போய் சேரும் போது மணி பத்தை நெருங்கிக்கிட்டு இருந்த்து. அது கொஞ்சம் பெரிய பள்ளிக்கூடம். வழக்கமா எல்லா படங்கள்லேயும் வர்ற மாதிரி ஏரிக்கரை, ஆலமரம் அது இதுனு கண்ணுக்கு விருந்தா காட்சிகள் இருந்த்து. போனதும் மருந்து மாத்திரைகளை எடுத்து வைப்பதும் மருத்துவர்களுக்கு இடங்களை தயார்படுத்துவதுமா பரபரப்பா போயிட்டு இருந்த்து. ஒவ்வொருத்தரா கூப்பிட்டு அவங்க என்ன செய்யணும்னு நானும் செந்திலும் சொல்லிக்கிட்டு இருந்தோம். சில மருத்துவர்களுக்கு உதவியாக, சிலர் மருந்துகளை கொடுப்பதற்கும், வேறுசிலர் மருந்துகளை எப்போது சாப்பிடணும்னு மக்களுக்கு விளக்குவதற்கும். கூட்டம் அதிகமா இருந்த்தால எல்லோருக்கும் நிறைய வேலை. நான் அங்க இங்கன்னு ஓடிக்கிட்டு இருந்தேன்.

மணி பன்னிரண்டை நெருங்கிகிட்டு இருந்தது. மருந்து கொடுக்கும் இடத்தில் கூட்டம். உள்ளே போய் உதவலாம் என்று போனேன். அப்போது தான் அந்த பெண்ணைப் பார்த்தேன். க்ரே கலர் புடவையில் ஒரு ஐந்தரை அடி உயரம், ஒல்லியான உருவம், முகம் ‘அட்டகத்தி’ பூர்ணிமா சாயலில் இருந்தது. ஒரு நிமிஷம் அசந்து நின்னேன். திடீர்னு வேறு சில விஷயங்கள் மனத்திரையில் ஓட ஆரம்பிச்சது. ‘கிராமம், பஞ்சாயத்து, அரச மரமோ ஆலமரமோ அதுல என்னை கட்டிவச்சு அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க’. மனம் திக்குனு ஆக திரும்பி வேலையில கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். மருந்து சீட்டுகளை வாங்கி அதை மருந்து எடுத்து தருபவர்களிடம் கொடுத்து மறுபடியும் மருந்தையும் சீட்டையும் மக்களிடம் கொடுக்க வேண்டும். இந்தப் பெண் எங்களுக்கு உதவி பண்ணிட்டு இருந்தாள். அவளிடம் இரண்டு முறை சீட்டை வாங்கி மருந்து எடுத்து கொடுத்தேன். கொஞ்ச நேரம் கழித்து தான் தெரிஞ்சுது. அந்தப் பெண் சீட்டையெல்லாம் வாங்கி வேறு யாரிடமும் கொடுக்காமல் நான் வரும் வரை காத்திருந்து என்னிடம் கொடுத்துக் கொண்டிருக்கிறாள் என்று. அப்படியே வானத்துல பறக்கற மாதிரி இருந்தது. பின்னெ கொஞ்சமா ரொமாண்டிக் ஃபீலிங்கோட நடக்க ஆரம்பிச்சேன்.

மதியம் சாப்பிடறப்போ செந்திலிடம்,

“செந்தில். அந்த பொண்ணு எப்படி? என்னைய பாத்துட்டு இருக்கு”

பார்த்த செந்தில்,

“தம்பி, ஒழுங்கா இருக்கணும்னு ஆச இல்லியா. அது ஊர் பெரியவரோட பேத்தி. மைசூர்ல வேலை பாக்குது லீவுக்கு வந்திருக்கு.”

செந்திலுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிருந்த்து. அவர் தொடர்புகள் அப்படி. ‘கொஞ்சம் கொஞ்சமா அதே ஏரிக்கரை, அரசமரம், கட்டிவைக்கறது எல்லாம் ஞாபகம் வந்தது.’ சிந்தனையை உதறி தள்ளினேன். வேலைக்காவாது.

“எதுக்கும் ஜாக்கிரதையா இருந்துக்கோ. காவேரி பிரச்சனை, இதுல இதையும் சேர்த்துவிட்டுடாதெ”. பீதியை கிளப்பினார்.

சாப்பிட்டு முடித்ததும் கருமமே கண்ணாயினார்னு வேலைய பார்க்க ஆரம்பிச்சேன். மதியம் மூணரை வாக்கில் முகாம் முடிந்த்து. அந்த பொண்ணு இருக்கற பக்கம் வேணும் என்றே போவதை தவிர்த்தேன். அடுத்து டீ குடிச்சிட்டு கிளம்ப வேண்டியது தான். அந்த பள்ளிக்கூடத்துல ‘சயின்ஸ் லேப்’ இருக்குதுனு எல்லோரும் பார்க்கப் போனோம். நன்றாகவே வைத்திருந்தார்கள். எல்லாவற்றையும் சுத்தி பார்த்துட்டு வெளியே வந்தேன். லேப் வாசலில் வரிசையாய் எல்லோரும் உட்கார சேர் போட்டிருந்தார்கள். எங்க மக்கள் டீ குடிக்க போய்விட நான் பின்தொடரும் போது பார்த்தேன். அந்த பொண்ணும் இன்னும் இரு பெண்களும். தோழிகள் போல. இந்த பெண்ணைப் பார்த்த போது திடுக்கிடும் உணர்வு. இதுவரை அப்படி ஒரு உணர்ச்சி வந்ததில்லை. அந்த சம்பவத்துக்கு அப்புறமும் வந்ததில்லை. இந்த ரொமாண்டிக் லுக் ரொமாண்ட்டிக் லுக்னு சொல்லுறாங்களே. அதை அந்தப் பெண் கண்களில் பார்த்தேன். கண்களில் இருந்தது கிறக்கமா மயக்கமானு தெரியல. அதீத காதலோட பார்த்த மாதிரி இருந்தது. காதலான கண்களை பார்த்ததும் முதலில் வந்தது பயம். ‘முதல்ல இந்த இடத்தை காலி பண்ணனும்.’

வேகமாய் டீ குடிக்க சென்றேன். பஸ் ஏறுவதற்கு அவர்களைத் தாண்டி தான் போக வேண்டும். நடந்ததை செந்திலிடம் சொன்னால் நம்பவில்லை.
“போப்பா. நீ பாட்டுக்கு கத வுடாத.”

அவர்களை கடந்து நடந்து பத்தடி தூரம் போனதும் திரும்பி பார்த்தேன். மூவரும் என் பின்னாலேயே வந்துக்கிட்டு இருந்தார்கள். ‘வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருவம்’ பந்தாடிக்கிட்டு இருந்த்து. வேகவேகமாக நடையைக்கூட்டினேன். பஸ்ஸில் ஏறினால் உட்கார இடமில்லை. படியிலேயே உட்கார்ந்துகிட்டு போகவேண்டியது தான். வியர்த்து போன என் முகத்தையும் பின்னால வந்த பெண்களையும் செந்தில் ஆச்சர்யமா பார்க்க ஆரம்பிச்சார். ‘அப்பாடா. கொஞ்சமாச்சும் நம்பறாரே.’
பெண்கள் மூவரும் பஸ்ஸுக்கு மிக அருகில் வந்துவிட்டார்கள். திக்திக்கென்று அடிச்சது மனது. ‘ஆண்டவா. நல்லபடியா பெங்களூருக்கு போய் சேர்த்துடுப்பா.’ அப்போது தான் கவனித்தேன். அந்த பெண்ணின் தாத்தா, ஊர் பெரியவர் பஸ் முன் சீட்டில் உட்கார்ந்திருந்தார். வழியில் எங்கேயோ இறங்கணுமாம். பெண்கள், படிக்கட்டில் நான், பெரியவர் மூவரும் ஒரே நேர்கோட்டில். செந்தில் எல்லாவற்றையும் பார்த்துக்கிட்டு இருந்தார். அந்தப் பெண் கன்னடத்துல அவங்க தாத்தாக்கிட்ட ஏதோ பேசினாள். இதழின் ஓரம் அன்று முழுக்க பார்த்த அதே ஈரமான புன்னகை. மறைக்கக்கூடாதென்று சற்று நகர்ந்தேன். வண்டியும் கிளம்ப ஆயத்தமானது. ஓட்டுநர் வண்டியை கிளப்ப அப்பெண் டாட்டா காண்பித்தாள். தாத்தாவிற்கு தான் டாட்டா என திரும்பிப் பார்த்தால் அவர் வேற எங்கேயோ பார்த்திட்டு இருந்தார். ‘எனக்குத் தான் அந்த டாட்டாவா’. பயம் இருந்தாலும் தலை தன்னிச்சையா அசைந்தது. கூட இருந்த தோழிகள் அவளை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். வண்டி வேகமெடுக்க ஆரம்பிக்கும் போது மனம் அன்று முழுக்க நடந்ததை அசை போட ஆரம்பித்தது.

போகும் வழியில் பெரியவர் இறங்கிக் கொள்ள செந்தில் என்னிடம்,

“நீ சொன்னது உண்மை தாம்பா. உன்னைய வச்ச கண் வாங்காம பாத்துச்சு.”
 மனதில் ஒரு சின்ன பெருமிதம். நம்மையும் ஒரு பொண்ணு பார்க்குதுங்கற கர்வம். நாட்கள் அப்படியே ஓடியது.

அடுத்த வருஷமும் அந்த ஊருக்கு போனார்கள். வேறொரு வேலை இருந்ததால போக முடியல. போயிட்டு வந்த செந்தில் சொன்னார்.

“தம்பி. அந்த பொண்ணு எல்லா மூஞ்சியையும் பாத்துச்சு. உன்னத் தான் தேடுச்சுன்னு நினைக்கிறேன். கடைசியில் சோகமா இருந்துச்சு”

“இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் உடம்ப ரணகளமாக்கறீங்க.”
சொன்னாலும் கேட்கும் போது நல்லாவே இருந்தது. அவ்வளவு தான் நாலு வருஷம் இருக்கும். அந்த ஊருக்குப் போனதே சுத்தமா மறந்து போயிருந்த நிலையில் ‘அட்டகத்தி’ படமும் பூர்ணிமாவும் பழைய நினைவுகளை கிளறிவிட்டுவிட்டார்கள். சில வருஷம் கழிச்சு நானும் இவ்வளவு எழுத காரணமா இருந்துட்டாங்க.

அடுத்ததா அந்த ஊருக்கு ஒரு ட்ரிப் போடலாம்னு இருக்கேன். யார் கண்டா அந்த பெண் எனக்காக இன்னும் காத்துக்கிட்டு இருந்தா….


Thursday, July 29, 2010

உன்னை தற்கொலை செய்யவா?! - பகுதி 8

கெய்ரோ.

எகிப்தின் தலைநகர். ஆப்ரிக்கா கண்டத்துலேயே மிகப்பெரிய நகரம். பழங்கால எகிப்தியர்கள் கட்டிய பிரமிடுகள் அவர்கள் வாழ்க்கை முறைக்கு சான்று. கணிதத்தில் சிறந்து விளங்கியவர்கள். மிகவும் பழமைவாய்ந்த நைல் நதி பாலைவனமாயிருந்த அந்தப்பகுதியையே செழிப்பாக்கியது. எப்போதும் பரபரப்பை தன்னகத்தே கொண்ட அங்கே ஏகப்பட்ட சுற்றுலா பயணிகள் வருவதால் கொஞ்சம் கொஞ்சம் ஆங்கிலம் கற்றுக் கொண்டு பேசும் கைடுகள். மிக முக்கியமாக சொல்லப்போனால் கிரேக்க மன்னன் ஜூலியஸ் சீயரை மயக்கிய பேரழகி கிளியோபாத்ரா வாழ்ந்த நகரம். ஏனோ அன்று நடக்கப்போகும் அந்த சம்பவத்தை தெரிந்து கொண்ட மாதிரி அதிசயமாய் வானம் தூறல் போட்டுக் கொண்டிருந்தது. மங்கிய நிலவொளியில் வீட்டுக்கு விரைவாக செல்லும் உத்வேகத்தில் பலரும் ரோட்டை ஆக்ரமிக்க ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல்.

எதிர்பாராமல் வந்த மழையை நொந்துக் கொண்டே தன் அந்த நூலகத்தை விட்டு வெளியே வந்தாள் நோரா. அழகான பெயர் அவளைப்போலவே. இருபத்திரண்டு முடிந்து இருபத்து மூன்றை நெருங்கும் வயது. நீண்ட கால்கள். கூர்மையான நாசி. கிளியோபாத்ராவை ஒத்த கரிய ஆனால் களையான நிறம். பார்ப்பவர் எவரையும் சுண்டி இழுக்கும் பெரிய கண்கள், மெல்லிய உதடுகள். அந்த பல்கலைக்கழக வளாகத்திலேயே அவளைத் தெரியாதவர் யாரும் இருக்க முடியாது.

அன்று ஏனோ ஆராய்ச்சியில் நீண்ட நேரம் மூழ்கி இருந்ததால் ரொம்பவே நேரமாகிவிட்டது. மிகப்பழமையான கெய்ரோ பல்கலைகழகத்தில் அகழ்வாராய்ச்சித் துறையில் முதுகலை படிக்கிறாள். சிறுவயதிலிருந்தே பிரமிடுகளைப்பார்த்து வாழ்ந்ததால் ஏனோ வரலாறு மேல் அளவு கடந்த ஆர்வம். அடம் பிடித்து இந்தப் படிப்பை தேர்ந்தெடுத்திருந்தாள். பெற்றோர் சொந்த ஊரில் இருக்க கெய்ரோவில் சின்னதாய் ஒரு வீடை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தாள். வெளியே வந்தவள் கைக்கடிகாரத்தைப் பார்க்க மணி ஒன்பதை தொட்டுக் கொண்டிருந்தது.

தூரத்தில் விளக்கொளியில் பல்கலைக்கழகத்தின் பிரதான கட்டிடத்தின் கோபுரம் விளக்கொளியில் மின்னிக் கொண்டிருந்தது. சுற்றிலும் இடமே வெறிச்சோடியிருந்தது.

கைப்பையை தலைக்குப் பிடித்துக் கொண்டு ஓரமாக ஓடினாள். சற்று தூரத்திலேயே மெட்ரோ ரயில் நிலையம். ஐந்து நிமிட ஓட்டமும் நடையுமாக ரயில் நிலையத்தை அடைந்தாள். ஆளரவமின்றி இருந்தது. ஆங்காங்கே இரண்டு மூன்று பேர் நின்றுக் கொண்டிருந்தனர். சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த போது ரயில் வந்து நிற்க ஏறினாள். பல்கலைக்கழகத்திலிருந்து அவள் தங்கி இருக்கும் இடமான எல்மௌனிப் செல்ல பதினைந்து நிமிடத்திற்கு மேலாகும்.

சொற்ப ஆட்களே அமர்ந்திருக்க தன் ஸ்கர்ட்டை சரி செய்து கொண்டு கண்மூடி அமர்ந்தாள். கொஞ்ச நாளாகவே அவளுக்கு பைத்தியம் பிடித்ததைப் போலிருந்தது. ரயில் முன்னோக்கி செல்ல அவள் நினைவுகள் பின்னோக்கி சென்றது. அவனையும் இப்படித் தான் ஒரு வருடம் முன்பு இதே ரயில் நிலையத்தில் சந்தித்தாள். அழகானவன். பார்த்த மாத்திரத்திலேயே பிடித்திருந்தது. முதலில் பேசத் தயங்கினான். பின் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். பெயர் பொம்மானி. ஷோப்ராவில் ஏதோ சாப்ஃட்வேர் கம்பெனியில் வேலை.

சில விஷயங்கள் நம்மை மீறி நடக்கும். அது போல தான் அவர்கள் காதலும். அதுவாய் நடந்தது. அவளையும் மீறி நடந்தது. தன் படிப்பில் கவனம் செலுத்த முயன்ற அவளை அவன் கொஞ்சம் கொஞ்சமாய் ஈர்த்தான். அவனது வசீகரப் புன்னகையும் வெடுக்கென்ற பேச்சும் யாரையும் கவரும். அவள் காதல் வயப்பட்டதில் தவறொன்றும் இல்லை.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் காதல் பறவைகள் சிறகடித்துப் பறந்தனர். வேலை நேரம் போக மீதி நேரத்தில் பேசுவதே முழுமுக்கிய வேலை. மாலை நேரங்களில் மஞ்சள் வண்ண வானத்தின் பிண்ணனியில் நைல் நதியோரமாய் நடப்பது இருவருக்கும் மிகவும் பிடித்த விஷயம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ஒரு நாள் அவளிடம் அரேபிய மொழியில்,

“ஹே நோரா. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..?!”

புரியாமல் குழப்பமாய் அவனைப் பார்த்தாள்.

“எங்க கம்பெனியில என்னை ரெண்டு மாசம் வெளிநாடு போக சொல்றாங்க. ஐரோப்பாவுக்கு. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல”

சட்டென்று கலவரப்பட்டாள் நோரா. பிரிதல் என்ற வார்த்தையே வலி கொடுத்தது. பெற்றோரைப் பிரிந்த போது கூட இவ்வளவு விசனமில்லை. ஏனோ பொம்மானியுடன் அவ்வளவு ஐக்கியமாயிருந்தாள்.

“என்ன முடிவு பண்ணிருக்க?”

“தெரியல. இவ்ளோ நாளா இந்த மாதிரி சூழ்நிலையை நெனச்சு கூட பார்க்கல. ஆனா எனக்கு வேற வழி தெரியல…”

முடிவெடுத்த பிறகு தான் தன்னிடம் சொல்கிறான் என்பது புரிந்தது. இரண்டு மாதம் தானே. சட்டென ஓடிப்போய்விடும். சம்மதமாய் தலையாட்டினாள். அவன் பயணப்பட இன்னும் இரு வாரங்களே இருந்தன. அந்த இருவாரமும் விடுப்பு எடுத்துக் கொண்டு அவன் கூடவே தங்கி இருந்தாள்.

கிளம்பும் நேரம் வரும் போது துக்கம் தொண்டையை அடைக்க வழிஅனுப்பினாள். ஆயிற்று. அவன் போய் சேர்ந்தவுடன் தினமும் தொலைப்பேசியில் அழைப்பான். அன்று நடந்த கதை முழுதும் ஒப்பிப்பான். நாளாக ஆக பேசும் நேரம் குறைந்தது. வேலைப்பளுவாய் இருக்கும் என்று விட்டுவிட்டாள்.

இதோ இரண்டு மாதம் என்று சொன்னவன், இன்னும் இரண்டு மாதம் இருக்க வேண்டியதாய் போயிற்று. இன்று நள்ளிரவு வந்திறங்கப் போகிறான். நினைவுகளிலிருந்து மீண்டாள். நினைக்க நினைக்க சந்தோஷமாய் இருந்தது. ஸ்டேஷனில் இறங்குவதற்கும் அவள் செல்பேசி சிணுங்குவதற்கும் சரியாய் இருந்தது. அவன் எண் தான்.

“ஹே.. எப்படி இருக்க..?”

“என்னப்பா கிளம்பியாச்சா? பெட்டியெல்லாம் எடுத்து வச்சாச்சா?”

“ஓ அதெல்லாம் எப்போவோ ரெடி ஆயாச்சு. இரண்டு மாசம்னு சொல்லி நாலு மாசமாச்சு. ஒரு வழியா தப்பிச்சு வர்றேன்.”

“தப்பிச்சு வர்றியா? நீ அனுப்பின மெயில்ல எல்லாம் ஐரோப்பிய அழகிய பத்தி தான் வர்ணிப்பே. இப்போ எனக்காக பேச்ச மாத்தறியா?”

“சீச்சீ.. அவங்கல்லாம் சும்மா பாக்குறதுக்கு தான். ஒவ்வொருத்தியும் எவ்ளோ உசரமா இருக்காங்க. என்னிக்கு இருந்தாலும் நீ தான் என் தேவதை.”

அந்த நேரத்திலும் முகம் சிவந்தாள். “சரி. எத்தனை மணிக்கு ப்ளைட் வரும்?”

“பாத்தியா அத சொல்லத் தான் கூப்பிட்டேன். நான் வந்து இறங்க எப்படியும் லேட்டாயிடும். தூக்கம் கெட்டு ஏர்போர்ட்டுக்கு வர வேண்டாம். நான் சொல்வேனே என் சின்ன வயசு ஸ்நேகிதன் அவன் ஊரிலிருந்து வந்திருக்கிறான். அவன் வருவான். ஸோ.. நான் இறங்கியதும் உன்னைக் கூப்பிடுறேன். நாளைக்கு மீட் பண்ணலாம்”

“என்னப்பா இப்படி சொல்ற.. உன்னைப்பார்த்து நாளாச்சு” நோரா இழுக்க..

“அதான் நாளைக்குப் பார்க்கலாம்னு சொல்றேன்ல. சரி.. நேரமாச்சு.. வந்தவுடன் கால் பண்றேன்.உனக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் காத்திருக்கு” போனை வைத்து விட்டான்.

முகத்தில் வெட்கம் கலந்த புன்னகையுடன் பிரபலமான அந்த அரேபியப்பாடலை முணுமுணுத்துக் கொண்டே வீட்டை யடைந்தாள்.

சாப்பிட்டுவிட்டு தூக்கம் வராமல் நேரத்தை ஓட்டிக் கொண்டிருக்க பின்னிரவில் அவன் கூப்பிட்டான்.

“ஹே.. ஒரு வழியா வந்து சேர்ந்தாச்சு. நிம்மதியா தூங்கு. நாளைக்கு சந்திப்போம். நானே கூப்பிடுறேன்”

மறுநாள் காலை. வகுப்பிற்கு விடுப்பு சொல்லி இருந்தாள். காலையிலேயே அவன் வீட்டுக்குப் போகலாமா? அவன் நண்பனும் இருப்பதாய் சொன்னானே. சரி. அவனே கால் பண்ணட்டும். காதலுடன் பதைபதைப்பையும் துணைக்கு சேர்த்துக் கொண்டு காத்திருக்கலானாள். மணி பத்தாகியது. பதினொன்று ஆயிற்று. அழைப்பு வரவே இல்லை. பொறுத்துப் பார்த்த அவள் அவன் எண்ணை அழைக்க செல்பேசி அணைக்கப்பட்டிருந்தது. அழுகை அழுகையாய் வந்தது. இதற்காகவா காலையிலிருந்து சாப்பிடாமலேயே காத்திருந்தாள்.

சரியாய் பதினொன்னரை மணிக்கு புதிதாய் ஒரு நம்பரிலிருந்து போன். எடுத்து,

“ஹலோ..”

“ஹே.. நான் தான். பொம்மானி. பப்ளிக் பூத்திலிருந்து பேசறேன். ஒரு முக்கியமான விஷயமா போலிஸ் ஸ்டேஷன் போய்கிட்டு இருக்கேன். இன்னும் இரண்டு மணிநேரத்தில் கூப்பிடுறேன்.”

குரலில் அவசரமும் பதைபதைப்பும் தெரிந்தது. பயந்து போனவளாய்..

“என்னாச்சு.. என்னாச்சுனு சொல்லு? நான் வரவா”

“எல்லா விவரத்தையும் சொல்றேன். நீ வர வேண்டாம். சீக்கிரமே கூப்பிடுறேன்..” வைத்துவிட்டான்.

தலைகால் புரியாமல் என்ன செய்வதென்று யோசித்த அவள் போலிஸ் ஸ்டேஷன் கிளம்பிவிட்டாள்.

உள்ளே நுழைகையில் பொம்மானியின் கலவர முகம் தெரிந்தது. அங்கிருந்தவர்கள் பரபரப்பாக பேசிக் கொண்டார்கள்.

“ரொம்ப நாள் கழிச்சு நடந்திருக்கு இது. அந்த ரயில் போட்டப்பவே சொன்னாங்க. ஆபத்துன்னு. யாரும் கேக்கல. இன்னும் எத்தனை பேரோ?”

இந்தக் கதையை இதுவரை படிக்கறவங்க மாதிரி தான் அவளுக்கு என்ன தான் நடந்தது, நடக்கிறதுன்னு சுத்தமா புரியல. காவல் அதிகாரி முன் உட்கார்ந்திருந்த பொம்மானி கைகுலுக்கி எழுந்து திரும்பும் போது இவளைப் பார்த்தான். அவன் முகம் ஏக களைப்புடன் இருந்தது.

அவளை பத்திரமாய் வெளியே கூட்டிக்கிட்டு வந்தான்.

“ஹே.. என்னாச்சு.. சொல்லுப்பா? எதுக்கு இங்க வந்தே..”

ஆயாசமாய் அவளைப் பார்த்தான். “காலையிலேர்ந்து சாப்பிடல. வா. எங்கியாவது சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்”

அந்த கடைக்குள் நுழைந்து ஆளுக்கொரு ஜூஸ் ஆர்டர் செய்துவிட்டு பேச ஆரம்பித்தான்.

“நான் இறங்கினதுலேர்ந்தே நேரம் சரியில்ல. என் நண்பன் வரான்னு சொன்னேன்ல. அவன் வந்து பிக்கப் செஞ்சான். ஊரில கொஞ்சம் பழக்கம். இங்க வேலை விஷயமாய் வந்திருக்கிறான். ரொம்ப நாளா பணக்கஷ்டம். காலையில நான் தூங்கிட்டு இருக்கறப்போ எழுப்பி அவசரமா யாரையோ பார்க்க போகணும். உன் மொபைல எடுத்துட்டு போறேனு சொன்னான். சரின்னு தூங்கினேன். ஒரு மணிநேரம் கழிச்சு வீட்டுக்கு போலிஸ் வந்தாங்க.”

“என்னாச்சு…?” தவிப்பாய் அவள் கேட்க மயக்கத்திலிருந்த அவன் ஜூஸைப் பருகிக் கொண்டே,

“யாரோ தெரியாம ரயில் தண்டவாளத்துல விழுந்துட்டாங்க. அது உங்க நண்பன் தானானு அடையாளம் காட்ட முடியுமானு சொன்னாங்க. ஒன்னுமே புரியல. போனா அவன் கருகி கரியா இருந்தான்.”

“உன் நண்பன் தானா அது… என்னாச்சு?” பயமும் அழுகையும் வர அவள் கைகளைப் பற்றி ஆசுவாசப்படுத்தி,

“ஆமா. நடக்கும் போது தவறி விழுந்திருக்கலாம்னு சொல்றாங்க. அவன் பக்கத்திலேயே கொண்டு போன என் செல்போனும் கருகி இருந்துச்சு. பேசிக்கிட்டே கவனிக்காம விழுந்திருக்கலாம்னு சொன்னாங்க. தண்டாவாளத்துக்கு நடுவுல கரண்ட் போறதால யாரும் விழுந்திடக்கூடாது தடுப்பு போட்டிருந்தாங்களாம். ஏதோ பராமரிப்புப் பணின்னு அந்த இடத்துல மட்டும் தடுப்பை எடுத்திருந்தாங்களாம். அதுல போய் விழுந்துட்டான்.”

“இப்போ என்ன செய்யப் போறீங்க?”

“ஏற்கனவே அவன் ரொம்ப கஷ்டத்திலிருந்தான். அவன் அப்பா அம்மாகு சொல்லிட்டாங்க. தற்கொலையா இருக்கலாம்னு யோசிக்கறாங்க. எதுவா இருந்தாலும் கொஞ்ச நாள் கழிச்சு தான் தெரியும்..ச்சே.. வந்து இறங்கினதுமே இப்படியா?” அங்கலாயித்தான் பொம்மானி.

அப்போது போலிஸ் ஸ்டேஷனில் கருகிய நிலையில் இருந்த இறந்தவனின் உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த அதிகாரி அந்த செல்போனிலிருந்து வெளியே துருத்திக் கொண்டிருந்த ஆண்டெனா போலிருந்த சின்னக் கம்பியை அதிசயமாய் பார்த்தார்.

பெங்களூர்.

எத்தனை நாளாய் அடைப்பட்டிருக்கிறோம் என்று தெரியாமல் தவித்தான் வைபவ். அது ஒரு சவுண்ட் ப்ரூஃப் அறை. கத்துவது வெளியே கேட்காது. கடத்தி வரப்பட்ட நாளில் மயக்கமானவன் முழிக்கும் போது இங்கே இருந்தான். வசதிகளுக்கு ஏதும் குறைவில்லை. ஆனால் எதற்காக கடத்தப்பட்டோம் என்பது மட்டும் தெரியவில்லை. பகலும் இரவும் எப்போது வருகிறதென்பதே தெரியவில்லை. அங்கிருந்த ப்ரிஜ்ஜில் வேண்டிய பழங்களும் ரொட்டியும் தண்ணீரும் இருந்தது. ஒருவாரத்திற்கு தாங்கும். கதவு எந்நேரமும் பூட்டப்பட்டிருந்தது. அறையை ஓட்டியே அட்டாச்ட் பாத்ரூம். மாற்றிக் கொள்ள துணிமணி. ஆனால் வெளியுலகத் தொடர்பு மட்டும் துண்டிக்கப் பட்டிருந்தது. அவன் கையிலிருந்த வாட்சையும் செல்போனையும் எடுத்துவிட்டுருந்தனர்.

எதுவானாலும் சரி ஒருவாரத்திற்கு மேல் இருக்கப் போவதில்லை என்று புரிந்தது. யாராய் இருக்கும் என்று யோசித்ததிலேயே தலையை வலித்தது. அவன் பொழுது போக்க புத்தங்கள். அதுவும் அவனுக்கு விருப்பமான நாவலாசிரியர்கள். நேரம் கழிக்க அவன் அந்த புத்தகத்தை எடுத்த போது ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருந்த அந்த வீட்டின் காம்பௌண்டுக்குள் அந்த மாருதிவேன் நுழைந்தது.

Tuesday, July 20, 2010

Inception

படம் வந்தவுடனே பார்த்துவிட வேண்டும் என்று முடிவு பண்ணியாயிற்று. மெமண்டோ, டார்க் நைட் எடுத்த கிரிஸ்டோபர் நோலன் இயக்கம். டி காப்ரியோ நடிப்பு. கேட்கவும் வேண்டுமா?




கதையைப் பற்றி இங்கே அலசமுடியாது. கண்டிப்பாக அனைவரும் படத்தை ஒருமுறையாவது பார்க்கவேண்டும். மீண்டும் ஒரு முறை பார்க்கத் தோன்றும். ஆரம்பத்திலிருந்து கடைசிவரை நம்மை சீட்டுடன் கட்டிப் போடுவது இயக்குநரின் சாமர்த்தியம்.

ஆரம்பத்திலேயே க்ளோஸப் காட்சியில் கடலலைகள் நம்மை ஈர்க்கின்றன. அப்படி என்ன தான் சொல்ல வர்றாங்கனு ஆர்வம் மேலிடுகிறது. கடற்கரையோரமாக விழுந்துகிடக்கும் காப் (டி காப்ரியோ)வை ஒரு துப்பாக்கி தொடுகிறது. அங்க ஆரம்பிக்கும் படம் சடசடவென விரிந்து நம்மை ஒரு பிரம்மாண்ட அனுபவத்திற்கு தயார் செய்கிறது. மற்றபடி படத்தை திரையில் காண்க.

கிரிஸ்டோபர் நோலனை ஒரு விஷயத்துக்காக பாராட்டியே தீர வேண்டும். கஷ்டமான திரைக்கதையை அழகாக விவரிக்கிறார். இரண்டு மணிநேரத்துக்கும் மேல் ஓடும் இப்படம் ஆரம்பத்திலிருந்து கனவு பற்றிய விவரணைகளுடன் எல்லோருக்கும் புரியும் படி தெளிவாக விரிகிறது. ஒவ்வொரு கட்டத்தையும் நமக்கு புரிய வைத்த பிறகே அடுத்த கட்டத்திற்கு போகின்றார். அதுவே அவரின் சிறந்த யுக்தி எனவும் கூறலாம். எல்லாம் எனக்குத் தெரியும் என்ற மனப்பான்மையை நமக்குள் ஏற்படுத்தி வரும் திரைக்கதையில் இறுதிக்காட்சி சம்மட்டியால் அடிப்பது போல மாயையை ஏற்படுத்துகிறார். எல்லாம் முடிந்தது என்று நினைத்திருக்க இல்லை என்று சொல்லாமல் சொல்கிறார். படம் முடிகையில் நிறைய பேர் ஆச்சர்யத்தாலும் குழப்பத்தாலும் ஆர்வத்தாலும் கத்திய காட்சியை பார்க்க முடிந்தது. இதற்கே அவருக்கு ஒரு சபாஷ். “புரிந்த மாதிரி இருந்துச்சு… கடைசியா புரியல..” போன்ற சம்பாஷணைகளை நிறைய திரையரங்கில் கேட்கலாம்.

மற்றபடி படத்தில் நடித்த அனைவரும் படத்தின் தன்மையை உணர்ந்து மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். டிகாப்ரியோ வழக்கம் போல குழம்பிய கதாபாத்திரத்தை திறமையாக கையாண்டுள்ளார். அவருக்கு இன்னுமோர் மகுடம் இந்த படம். அப்புறம் அவரின் குழுவில் வரும் அட்ரையனாகட்டும், யூசுப்பாகட்டும், சைட்டோவாகட்டும்..எல்லோரும் நன்றாக நடித்திருக்கின்றனர். மேலும் படத்தில் வரும் புவிஈர்ப்பை மிஞ்சிய சண்டைக்காட்சியில் சுழலும் அறையில் நடக்கும் சண்டைக்காட்சி காண அவ்வளவு அழகு. அதிகமாக கிராஃபிக்ஸ் உபயோகிக்காமல் நடிகர்களே அதை செய்திருப்பதும் சிறப்பு.

குறிப்பாக சொல்ல வேண்டியது ஒளிப்பதிவு மற்றும் கலை. கனவுகளை வடிவமைப்பது மிக கடினம். ஆனாலும் நம்பும் படி திறமையாக செய்கிறார்கள். அதிலும் பாரிஸ் நகரம் மடித்து வைக்கப்பட்டது போன்றதொரு காட்சி.. நம் கண்கள் விரிகிறது. இப்படி பார்த்து பார்த்து பூரிக்க நிறைய காட்சிகள்.

கண்டிப்பாக சயின்ஸ் பிக்ஷன் கதைகளை விரும்பி பார்ப்பவர்களுக்கு இந்தப்படம் மிகவும் பிடிக்கும். படம் பார்த்தபின் ஏறக்குறைய ஒரு மணிநேரம் படத்தின் காட்சிகள் நம் கண்முன்னே வருவது தவிர்க்க முடியாதது. அந்தளவுக்கு நம்மை படத்துள் ஒன்ற செய்து முடிந்தபின்னும் பல கேள்விகளை மனதில் ஏற்படுத்துவதில் ஜொலிக்கிறார் நோலன்.

முடிவுக்கு இரண்டு மூன்று காரணங்கள் எனக்குத் தோன்றுகின்றன. ஆங்காங்கே அதை கதையினூடே அவர் காண்பித்துள்ளார். ஆனாலும் இன்னமும் முடிவைப் பற்றிய விவாதங்கள் பல தளங்களிலும் நடந்து கொண்டிருக்கின்றன.

இன்செப்ஷன் – கண்டிப்பாக அனுபவிக்க வேண்டிய படம்.

Saturday, July 17, 2010

மதராஸப்பட்டினம்

மதராஸப்பட்டினம்.. கொஞ்ச நாளாகவே இந்தப்படத்தை தொடர்ந்துக்கிட்டு இருக்கேன். படத்தில் வெள்ளைக்கார அம்மிணி நடிக்குதுன்னு கேள்விப்பட்டு இணையத்துல தேடி கண்டுபுடிச்சு, ப்ளாகெல்லாம் படிச்சு, ரொம்பவே புடிச்சுப் போச்சு. அழகுப் பதுமையா தான் இருக்குனு படம் வெளியானப்புறம் பாக்கலாம்னு முடிவுபண்ணியாச்சு. இன்னிக்கு போயாச்சு. நிற்க.

படத்தின் கதையென்று பார்த்தால் டைட்டானிக் கொஞ்சம், லகான் கொஞ்சம், வெள்ளைக்கார பெண்-இந்திய பையன் காதல் கொஞ்சம் - எல்லாம் சேர்ந்த கலவையே படம். பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படி வேறெதுவும் இல்லாததால் அடுத்த விஷயத்திற்குப் போவோம்.

திரைக்கதை.. படம் 1945-ல் நடப்பதாய் வருகிறது. அதற்கேற்றாற் போல் திரைக்கதை. அந்த கால கட்டத்தில் நடந்த சுதந்திரப்போராட்டத்தை மேலோட்டமாக காண்பித்தது ஆறுதல். ஆயினும் ஆர்யாவிற்கும் ஏமிக்கும் வந்த காதல் அப்படியே போகுது பெரிதாய் ஏதும் சம்பவங்களில்லாமல். அதனால் ஆங்காங்கே தொய்வு ஏற்படுவது போல் தோன்றுகிறது. ஆனாலும் நம்மை முழுமையாக படத்தோட ஒன்றவைக்குது அந்த காதல். அவ்வளவு ரசனையோடு எடுக்கப்பட்டிருக்கிறது. சரளமாக காமெடி தூவப்பட்டிருக்கிறது...நம்மை படத்தோடு ஒன்ற வைக்க.

இசை.. ஜி.வி.ப்ரகாஷ். பாடல்களில்..எம்ம துரையம்மா மற்றும் ததநாதீன டூயட் நல்லாருக்கு. பிண்ணனி இசைசேர்ப்பு நல்லா இருக்கு.

படத்தின் முக்கிய பலமே கலை மற்றும் ஒளிப்பதிவு. ஒளிப்பதிவு தெளிவாய் இருந்தது, நீரவ் ஷா, இந்த காலத்தையும் அந்த காலத்தையும் மாறுபட்ட கலரில் உறுத்தாமல் காண்பித்தது சிறப்பு. அதிலும் அந்த கால மதராஸப்பட்டினத்தின் காட்சிகள் அழகு. கலை மிக அற்புதம். அப்படியே அந்த கால சென்னை நம் கண்முன் தெரிகிறது. ஆங்காங்கே கோர்க்கப்பட்ட க்ராஃபிக்ஸ் எதுவும் உறுத்தலாய் தெரியவில்லை.ஒவ்வொரு விஷயத்துக்கும் நிறையாஅராய்ச்சி செய்திருக்கிறார்கள். அந்த கால கட்டிட அமைப்பு, சென்னையின் தேம்ஸ் நதி, வண்ணான் பேட்டை - இப்படி பல இடங்களும் அழகாக இருக்கிறது. கதாநாயகி வந்திறங்கும் போது அந்தப் பெட்டியில் டாடா ஏர் சர்வீஸ் என்ற அட்டை தொங்குவதும், தியேட்டரில் கண்ணம்மா திரைப்படம் ஓடுவதும் என.. கவனித்து செய்திருக்கிறார்கள்.

ஆர்யா - உடல் ஏற்றி லகான் அமீர்கானை நினைவுபடுத்துகிறார். உடையும் அதே மாதிரி இருந்தது சற்றே அலுப்பு தட்டியது. தன் வேலை அழகாக செய்திருக்கிறார் ஹீரோத்தனங்கள் இல்லாமல். ஹனீபா, நாசர், அவரவர் வேலைகளை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். ஹனீஃபா வரும் காட்சிகளில் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் இவ்வளவையும் தூக்கி சாப்பிட்டது ஏமி ஜாக்ஸனும், இன்றைய கால ஏமியாய் வரும் அந்த பாட்டியும். படம் முழுக்க இவர்களே வியாபித்திருக்கிறார்கள். ஏமி இன்னும் டீன் ஏஜ் தாண்டவில்லை. ஆயினும் அபார நடிப்பு. முழு திரைக்கதையையும் தன் தோளில் ஏற்றி பயணித்திருக்கிறார். அந்தப்பேசும் கண்களாகட்டும், சிரிப்பாகட்டும்..உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறார். என் ஓட்டு இந்த அம்மிணிக்குங்கோ.. அழகு மட்டுமில்லை.. தமிழில் பாடவும் லிப் சிங்க் செய்தது அருமை. ஹிஹி.. ஜொள்ளு தானுங்கோ.. ஆனாலும் ஒர்த் இட். இதையெல்லாம் பார்க்கும் போது ஏன் நம்மூர் நடிகைகளுக்கெல்லாம் நடிக்க வரலேன்னு தோணுது. முதல்படத்திலேயே ஏகப்பட்ட க்ளோஸப் காட்சிகளில் அநாயசமாக வெளுத்து வாங்கியிருக்கிறார். ஒவ்வொரு உடையிலும் தேவதை வலம் வருவது மாதிரி... சோகக் காட்சியிலேயும் அருமை. அதே மாதிரி அந்த பாட்டி, நிலைக்குத்திய கண்கள், பரிதவிக்கும் கண்கள் என கண்களிலேயே நடித்திருக்கிறார். இவர்களிடம் கதை சொல்லி இத்தனை தேர்ந்த நடிப்பை வாங்கிய விஜயை எத்தனைப் பாராட்டினாலும் தகும்.

படத்தின் திரைக்கதையில் இருக்கும் சின்ன சின்ன குறைகளையும் இந்த இருவர் சரிகட்டி விடுகிறார்கள். மொத்தத்தில் ஏற்கனவே பழக்கப்பட்ட கதையை அந்தகால படமாக தந்திருக்கிறார்கள்.. ஏமிக்காக கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.

எல்லாவற்றையும் தன் திறம்பட கோர்த்த இயக்குநர் விஜய்க்கு ஒரு சபாஷ்.

(பெங்களூரில் ஏமிக்கு ரசிகர் மன்ற அமைக்கலாம் என்றிருக்கிறேன். நான் தான் தலைவர். செயலாளர் பொறுப்பாளர் பதவி காலியாக இருக்கிறது. விண்ணப்பிப்போர் விண்ணப்பிக்கலாம்).

Tuesday, July 6, 2010

உன்னை தற்கொலை செய்யவா?! - பகுதி 7

கி.பி. 1895.



நியூயார்க் நகரம். இன்றைய கால நகரத்தைப் போல இல்லை. அது ஜூன் மாதத்தில் ஒரு நாள். தெருவில் குதிரை பூட்டிய சாரட் வண்டிகளும் ட்ராம் வண்டிகளுக்காக போடப்பட்டிருந்த இருப்புப் பாதைகளும் அமையப்பெற்ற அழகை பறைசாற்றின. கோட் சூட் அணிந்த கனவான்களும் அவர்களின் தரையைப் பெருக்கும் வகையில் நீளமான கவுன் அணிந்த இல்லத்தரசிகளும் குதிரைவண்டியில் ஏறி பயணிக்கும் காட்சி சர்வசாதாரணம். கப்பல் வணிகமும் இதர வணிகமும் அந்நகரை பேர் பெற்ற நகராக்கியிருந்தது. அவ்வப்போது கப்பலில் வந்திறங்கும் பொருட்களை வாங்க நாடெங்கிலும் இருந்து வரும் வியாபாரிகள் கூட்டம் அலைமோதும்.

(1895-ம் காலத்திய நியூயார்க்)

பிரபலமான ஹூஸ்டன் தெருவில் இருந்தது அந்த இரண்டு மாடி கட்டிடம். இரண்டாம் மாடியில் மங்கலான விளக்கு வெளிச்சத்தில் அந்த நபர் தீவிரமான வேலையிலிருந்தார். எவ்வளவு நேரம் அப்படி இருந்திருப்பாரென்று அவருக்குத் தெரியாது. சிறுவயதிலிருந்தே அப்படி தான். அவரது பயணம் நாடுகள் கடந்தது. 1856ல் செர்பியாவில் பிறந்து பின் ப்ரான்ஸ் சென்று படிப்படியாக முன்னேறி இப்போது அமெரிக்காவில். இதுவரையிலுமே அவர் செய்திருக்கும் சாதனைகள் ஏராளம். ஆயினும் அதைப்பற்றியெல்லாம் அக்கறைப்படாமல் அந்த கடின செய்முறையில் ஈடுபட்டிருந்தார். உண்மையிலேயே அவருக்கு அறிவியலில் இருந்த திறமை அதை பிரசுரிப்பதில் இல்லை. இதனாலேயே பல கண்டுபிடிப்புகளை அவர் விட்டுக் கொடுக்க வேண்டியதாயிருந்தது. அவர் நிக்கோலா டெஸ்லா. அவரின் எண்ணற்ற கண்டுபிடிப்புகளுள் குறிப்பிடத்தக்கது ரேடியோ. ஆம். அவர் தான் ரேடியோவிற்கான உரிமையை பெற்றவர்.

அவர் தான் அந்த நேரத்தில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். இரவு மணி எட்டை தாண்டியிருந்தது. சாப்பிட்டிருக்கவில்லை. இன்னும் சற்று நேரத்தில் தெரு முனையிலுள்ள பேக்கரியை மூடிவிடுவார்கள். அவரின் ஆராய்ச்சிக் கூடமே அவரின் தங்குமிடமும். எப்போதும் உடல்நலத்திலும் சுத்தத்திலும் மிகவும் அக்கறை கொண்டவர். ஆயினும் அன்று மிகமுக்கிய வேலையில் ஈடுபட்டிருந்ததால் சாப்பிடவும் தோணாமல் இருந்தார்.


(டெஸ்லாவின் சோதனைக்கூடம்)

சற்று நேரத்தில் அவர் அறைக்கதவு தட்டப்பட்டது. கவனம் கலைந்து கதவைத் திறந்தால் நீண்ட அங்கி அணிந்த அந்த நபர் புன்சிரிப்புடன் நின்றிருந்தார். அதுவரை இருந்த களைப்பெல்லாம் நீங்கி அவரை வரவேற்றார் டெஸ்லா.

உள்நுழைந்த அந்த நபர் சுற்றும் முற்றும் பார்த்தார். சோதனைக்கூடம் சுத்தமாய் இருந்தது. அழுக்கைக் கண்டால் டெஸ்லாவிற்கு அலர்ஜி என்பது அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. டெஸ்லாவை இதற்கு முன் ஒரு முறை தான் சந்தித்திருக்கிறார். இரு வாரங்களுக்கு முன் நடந்த சந்திப்பு அது.

சம்பிரதாயமாய் வரவேற்ற டெஸ்லா அவர் கையில் இருந்த ரொட்டி பாக்கெட்டைப் பார்த்து புன்னகைத்தார். அவர் வருவது கூட மறந்து போய் எதுவும் வாங்கி வைக்கவில்லை. செர்பிய வாடை அடிக்கும் ஆங்கிலத்தில் பேச்சைத் தொடங்கினார்.

“வாங்க. என் அழைப்பை ஏற்று வந்தமைக்கு மிக்க நன்றி.”

தலையில் இருந்த முண்டாசை சரி செய்து கொண்டே திட்சன்யமான பார்வையில் கனிவாய் அவரைப்பார்த்து புன்னகைத்தார் அவர்.

“நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அன்று உங்களுடன் நடத்திய உரையாடல் தான் என்னை இந்தளவுக்கு கொண்டு வந்துள்ளது.”

“உண்மையில் நாம் இருவரும் சாராவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும்”

மௌனமாய் தலையசைத்தார் அந்த நபர்.

அவர் நினைவில் கடந்த இரு வருடத்திய சம்பவங்கள் ஓடின. இருவருடங்களுக்கு முன் அமெரிக்கா நாடே விழாக் கோலம் பூண்டிருந்தது. உலகிலிருந்து பெரிய பெரிய தலைவர்கள் எல்லோரும் வந்திருந்தனர். எல்லோருடைய பேச்சும் மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அந்த நபரும் அழைக்கப்பட்டிருந்தார். இளையவராயிருந்த அவரைப்பார்த்து எல்லோரும் ஆச்சர்யப்பட்டனர். மாபெரும் கூட்டத்தைப்பார்த்து சிறிது கலக்கமிருந்தாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல் எழுந்த அவர், ‘அமெரிக்க சகோதரர்களே சகோதரிகளே’ என விளித்தது தான். அங்கு கூடியிருந்த மாபெரும் கூட்டமே எழுந்து நின்று கரகோஷம் எழுப்பியது. சத்தம் அடங்க இரண்டு நிமிடங்களுக்கும் மேலானது.

அவர் சுவாமி விவேகானந்தா.

இந்தியாவையும் இந்து பௌத்த மதங்களைப்பற்றியும் பேச வந்திருந்தார் அவர். அன்று அவர் ஆற்றிய உரையும் அதற்கு மேற்கோள் காட்டி அவர் பேசிய பகவத் கீதையும் பலரையும் ஈர்த்தது. அவரில் ஒருவர் சாரா பெர்ன்ஹார்ட். ப்ரெஞ்ச் நாடக நடிகை. சிறுவயதிலிருந்தே நாடகத்தில் பால் ஈர்ப்பு கொண்டவரான அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறந்த நாடக நடிகை என பெயர் பெற்றவர்.

இருமுறை விவாகரத்து பெற்றிருந்த நிலையில் தான் சுவாமி விவேகானந்தாவின் பேச்சினால் ஈர்க்கப்பட்டார் சாரா. அந்த பிரபலமான உரைக்குப் பின் பல இடங்களில் சொற்பொழிவாற்றினார் நரேந்திரநாத். 1895ம் வருடம் நியூயார்க் நகரில் இருமாதங்கள் வேதாந்தம் பற்றி வகுப்புகள் எடுத்த போது நரேந்திரநாத்திற்கு அறிமுகமானாள் சாரா. ஒரு நாள் சுவாமியிடம் சாரா,

“சுவாமிஜி, நாளை நான் நடிக்கும் நாடகம் நியூயார்க் செண்ட்ரல் திரையரங்கில் நடக்க இருக்கிறது. தாங்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.”

சற்று நேரம் யோசித்த அவர்,

“உறுதியாக சொல்ல இயலாது. கலந்து கொள்ள முயற்சிக்கிறேன். என்னை எதிர்பார்க்க வேண்டாம்.”

கேளிக்கைகளிலும் நாடகங்களிலும் சுவாமிக்கு ஈடுபாடு இருக்காது என்று தெரிந்திருந்ததால் பெரிதாய் ஏமாற்றம் கொள்ளவில்லை சாரா. வழக்கம் போல் நாடக ஒத்திகைக்கு சென்றாள்.

அடுத்த நாள் நாடகம் ஆரம்பமானது. ‘இஸிஎல்’ என்னும் ப்ரெஞ்ச் நாடகம் அது. இஸிஎல் என்ற கதாபாத்திரமாகவே நடித்தாள் சாரா. புத்தரின் வரலாறு சொல்லும் நாடகம். நாடகம் நடந்து கொண்டிருக்கையிலேயே பி வரிசையில் அமர்ந்திருந்த சுவாமிஜியை கண்டுகொண்டாள் சாரா. மனம் சொல்லாத களிப்புற்றது. சுவாமியின் மேலிருந்த மரியாதை இன்னும் அதிகமாகியது. இடைவேளையின் போது வேகவேகமாக ஓடி வந்த சாரா சுவாமியை வணங்கி,

“நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை”

வழக்கமான புன்முறுவலை பதிலாய் அளித்தபடி

“புத்தரின் வாழ்க்கை பற்றிய நாடகமென்று அறிந்தேன். பார்க்கலாமென்று வந்தேன்”

“மிக்க மகிழ்ச்சி. நாடகம் முடிந்ததும் விருந்து நடக்க இருக்கிறது. கண்டிப்பாய் கலந்து கொள்ள வேண்டும். முக்கியமான ஒரு நபரை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.”

மறுக்காமல் தலையாட்டினார் சுவாமிஜி.

இடைவேளைக்கு பின் நடந்த நாடகத்தில் சாராவின் நடிப்பு இன்னும் மெருகேறியிருந்தது. அவளின் குருநாதர் தன் நாடகத்தைப்பார்த்து கொண்டிருக்கிறார் என்ற பூரிப்பு அது.

நாடகம் முடிந்ததும் நடந்த கேளிக்கைகளில் ஈடுபடாமல் ஓரமாய் இருந்த மேஜையில் அந்த இருவரும் அமர்ந்திருந்தனர். சுவாமிஜி மற்றும் டெஸ்லா. டெஸ்லாவின் நீண்ட நாள் தோழி சாரா. அவரின் அறிவியல் அறிவை அறிவாள்.

நூறு வருடங்கள கழிந்து உலகையே உலுக்கப்போகும் சந்திப்பு அது என்பதை சாரா அறிந்திருக்கவில்லை. சுவாமி விவேகானந்தாவும் டெஸ்லாவும் அறிந்திருக்கவில்லை.

பார்த்தவுடனே சுவாமிஜி மேல் ஈர்ப்பு வந்தது டெஸ்லாவிற்கு. ‘என்ன பெரிதாய் பேசப்போகிறார்’ என்ற எண்ணம் மறைய ஆரம்பித்தது. சாராவின் வற்புறுத்தலுக்காக தான் இந்த சந்திப்புக்கு ஒத்துக் கொண்டிருந்தார் அவர். ஆனால் சுவாமிஜி பேசப்பேச அவர் மேல் மரியாதை கூடியது.

“உங்களை தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். நீங்கள் சொல்லும் வேதாந்தங்களும் பகவத் கீதையும் இல்லாத ஒன்றை தானே சொல்கின்றன.”

“அப்படி இல்லை. இந்த உலகம் இருவேறு உந்து சக்திகளால் இயங்குகிறது. ப்ராணம் ஆகாஷம். இவற்றில் ஆரம்பிப்பது தான் எந்த ஜீவனுமே. இதை தான் எங்கள் வேதாந்தங்கள் சொல்கின்றன.”

மேலும் அவர் பேச அவரின் பால் ஈர்க்கப்பட்டார் டெஸ்லா. அவர் செய்து கொண்டிருந்த பல சோதனை முயற்சிகளுக்கான விடை வேதாங்களிலும் வேதாந்தங்களிலும் இருப்பதாய் தெரிந்தது.

‘உலகம் உந்து சக்தியினால் இயங்குகிறது’ என்பதை கணித ரீதியாக நிரூபிக்கமுயன்ற அவருக்கு ஆகாசம், ப்ராணம் ஆகியவற்றிற்கான அர்த்தங்கள் புதிய பாதையை கொடுத்தது.

“சுவாமிஜி. உங்களுடன் நிறைய பேச வேண்டும். எனக்குத் தேவையான பல விஷயங்கள் உங்கள் வேதாந்தங்களில் இருக்கிறது. இன்னும் இருவாரங்களில் என் வீட்டிற்கு வர முடியுமா?”

அழைப்பை ஏற்றார் விவேகானந்தர். அதன்விளைவே அவரின் வருகை. வருவதற்குமுன் தன் நண்பனுக்கு எழுதிய கடிதத்தில் தான் சந்திக்கப்போவதைப்பற்றியும் தான் எவ்வளவு ஆர்வமாய் இருக்கிறேன் என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.

நினைவில் ஓடிய நிகழ்வுகளை அசைபோட்ட விவேகானந்தர் நேரத்தை சற்றும் வீணாக்காமல் டெஸ்லாவுடன் விவாதத்தில் பங்குகொண்டார். டெஸ்லா சக்தி என்பதற்காக தான் செய்த ஆராய்ச்சிகளை விளக்க விவேகானந்தருக்கு ஆச்சர்யம். வேதாந்தங்களில் எழுதிய வைத்தவைகளை நிரூபிக்க முடியும் என்கிற நம்பிக்கை அவருக்குப் பிறந்தது. அதற்கு ஏற்றாற் போல் அது வரை தான் செய்திருந்த சோதனைகளை திருப்பி செய்து காண்பித்தார் டெஸ்லா. இறுதியாகடெஸ்லாவின் வேண்டுகோளின் படி அவருக்கு வேதாந்தங்களைப் பற்றி சொல்லித் தர ஒத்துக் கொண்டார்.

பின் இருவரும் மீண்டும் சந்திப்பதாய் முடிவு கொண்டு பிரிந்தனர். அடுத்த இருமாதங்கள் இருவருக்கும் பரபரப்பாய் கழிந்தது. ஏற்கனவே ஒத்துக் கொண்ட கூட்டங்களில் பங்கு கொண்டு சொற்பொழிவாற்றிய நிலையில் நான்கைந்து முறை டெஸ்லாவை சந்தித்து வேத சூத்திரங்களை விளக்கினார். அண்ட வெளியில் உயிர் சக்தி இருப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் அலைகள் மூலம் செய்தி பரிமாறும் முறைகளைப் பற்றியும் அலசினர். முடிவில் டெஸ்லாவிற்குள் அந்த அறிவியல் அற்புதம் நிகழ்ந்தது. சுவாமிஜியிடமிருந்து கற்றுக் கொண்ட விஷயங்களை மேலும் ஆராய்ந்து மின்காந்த அலைகள் மூலமாக செய்திகள் பரிமாறும் அதிசயம் கண்டார். மேலும் மேலும் பல ஆராய்ச்சிகள் செய்த அவர் 1930-களில் செய்த ஆராய்ச்சி அவரை நிலைகுலையச் செய்தது.

தனது கண்டுபிடிப்பு எவருக்கும் தெரியக்கூடாது என்று நினைத்த அவர் தன் நண்பர் மூலமாக ஐரோப்பாவில் அதை பாதுகாப்பாக பதுக்கி வைக்க சொன்னார். கிட்டத்தட்ட பத்தாண்டுக்கும் மேலாக மிகுந்த ரகசியமாக அது இருந்தவரை பிரச்சனைகள் ஏதும் வராமலிருந்தது. சரியாக டெஸ்லா இறந்து 10 வருடம் கழித்து அந்த ரகசியங்கள் அடங்கிய ஆராய்ச்சிக் குறிப்புகள் ரஷ்யரிடம் சிக்கியது.

கி.பி. 2010

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க். அழகாக வர்ணனைகளால் எழுதப்பட்ட அந்தக் குறிப்புகளைப் படித்த அவர், நியான் விளக்கு வெளிச்சத்தில் சிந்தனையோடு எதிரில் அமர்ந்து நேவா நதியை வெறித்துக் கொண்டிருந்த மிகைல் ப்ராட்கோவை பார்த்தார். பின் தொண்டையை கனைத்து கொண்டு பேச ஆரம்பித்தார்.

Friday, June 25, 2010

உன்னை தற்கொலை செய்யவா??!! - பகுதி 6

அமெரிக்காவில் விர்ஜினியா மாகாணத்தில் லேங்க்லி. மிகவும் பேர் பெற்ற இடம். உலகையே ஆட்டிப் படைக்கும், படைப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்க ராஜ்யத்தின் முக்கிய உளவுப் பிரிவான சி.ஐ.ஏ.வின் தலைமையகம். அடர்ந்து வளர்ந்திருந்த காட்டு மரங்களுக்கிடையே அமைதியாக அமைந்திருந்தது அந்த வளாகம். மிகப்பெரிய வளாகம். ஏறக்குறைய ஐந்தடுக்கு பாதுகாப்பு வளையம் அமையப்பெற்றது. அனுமதிக்கப்பட்டவரைத் தவிர வேறு யாரும் அவ்வளவு எளிதில் உள்ளே நுழைந்துவிட முடியாது. பாதுகாப்பிற்காக அந்த ஏரியா முழுவதும் விமானம் பறக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. உலகில் நடக்கும் எண்ணற்ற சம்பவங்களுக்கு காரணகர்த்தாவான அந்த மையம் பற்பல ரகசியங்களைக் கொண்டிருந்தது.

பனிக்காலமாகையால் எங்கும் வெள்ளைநிற பனிக்கட்டிகள் பரவியிருக்க சில்லென்று பனிப்பொழிவும் இருந்ததது. வெள்ளை நிற பனித் துகள்கள் மேலிருக்க மின்சார வேலியின் பக்கமிருந்த காவலர் வாசலுக்கு சர்ரென்று வந்து நின்ற அந்த நிஸ்ஸான் அல்டிமா காரில் இருந்தவரை அடையாளம் கண்டு வழிவிட்டனர் செக்யூரிட்டி. காரை ஒரு ஓரமாய் பார்க் செய்த கோட் சூட்டிலிருந்த கனவான் மைக்கேல். சி.ஐ.ஏவின் அந்தப்பிரிவின் தலைமை செயலதிகாரி. அதிபரின் ஆலோசனைக்குழுத் தலைவர். இவரின் கட்டளைக்கு கீழ் பணிபுரிய உலகெங்கிலும் பல்லாயிரம் ஊழியர்கள் சாதாரண குடிமக்கள் வேடத்திலிருந்தனர். காரிலிருந்து இறங்கியவுடன் மேல் போர்த்தியிருந்த ஜெர்கினை இழுத்துக் கொண்டு கண்ணாடிகளைப் பதித்து கட்டப்பட்டிருந்த அந்த கட்டிடத்தை நோக்கி நடந்தார். வழியில் அவரை கண்டு கொண்டவர்கள் வைத்த வணக்கங்களை வாங்கிக் கொண்டு பரபரப்பாக நடந்தார். பரபரப்பு எப்பவுமே அவரிடம் தொற்றிக் கொண்ட ஒரு வியாதி.

முதல் வேலையாக உள்ளே நுழைந்ததும் அந்த பெரிய கான்ஃப்ரண்ஸ் அறைக்குள் நுழைந்தார். விஸ்தீரணமான அறை, குஷன் வைத்த நாற்காலிகள், மிகப்பெரிய ப்ரொஜக்டர், நீல நிற வெளிச்சம் அந்த அறையை பிரம்மாண்டமாய் காட்டியது. உள்ளே நுழைந்தவர் நாற்காலியில் தன் ஜெர்கினை மாட்டிவிட்டு அமர்ந்தவுடன் அங்கிருந்தவர்களைப் பார்த்தார். அவர் முகத்தைப் பார்த்ததும் அவர்களில் மூத்தவரான அந்த கண்ணாடி அணிந்த அதிகாரி ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார்.

“வணக்கம் மைக்கேல். இந்நேரம் உங்களுக்கு அந்த செய்தி கிடைச்சிருக்கும் என்று நம்புகிறோம்.”

மௌனமாக தலையாட்டினார் மைக்கேல். தொண்டையை கனைத்துக் கொண்டு மறுபடியும் பேச ஆரம்பித்தார் அந்த அதிகாரி. ப்ரொஜக்டர் திரையில் காண்பிக்கப்பட்ட அந்த படங்களை காண்பித்து,

“இது தான் நம்ம சாட்டிலைட் எடுத்து அனுப்பிய புகைப்படங்கள். இந்தியாவில் ஐதராபாத்திற்கு அருகில் இருக்கும் கிராமம்…”

“இங்க தெரிவது தான் அந்த செய்தியில் இருந்த ரைஸ்மில். கிராமத்திற்கு ஒதுக்குப்புறமாய் அமைந்திருக்கிறது.”

“அங்க தான் இந்திய அரசாங்கம் ஏதோ ரகசிய ஆராய்ச்சி நடத்திக்கிட்டு இருக்கிறது. நம்பத் தகுந்த தகவல் இது. இந்த புகைப்படங்கள் எடுத்து ஒரு மாதமாகிறது. இதற்கிடையில் தான் இந்திய அரசாங்கம் அவங்க நிலா பயணத்தை அறிவிச்சிருக்கிறது. அதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கு.”

திரையில் சாட்டிலைட்டிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மாற ஆரம்பிக்க மேலும் அந்த அதிகாரி தொடர்ந்தார்.

“இந்த கிராமமே சந்தேகத்திற்கிடமான கிராமம். இப்படி ஒரு கிராமம் அஞ்சு வருஷத்திற்கு முன் இருந்ததா அங்க பதிவுலேயே இல்ல. திடீர்னு முளைச்சிருக்கு. இதுவும் எங்க சந்தேகத்திற்கு காரணம். இதைப்பற்றி மேலும் விவரங்கள் சேகரிக்க சொல்லி இருக்கிறோம்.”
முடித்தார் அந்த அதிகாரி.

அதுவரை மௌனமாக தலையை மட்டும் ஆட்டிக்கொண்டிருந்த மைக்கேல் பேச ஆரம்பித்தார்.

“அங்க நமக்கு எதிரா இந்தியா ஏதும் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காங்கன்னு சொல்றீங்களா?”

“ஒரு அனுமானம் தான். தெளிவா சொல்ல முடியாது. ஆனா விண்வெளி சம்பந்தமா ஏதோ செய்யறாங்கன்னு மட்டும் நல்லா தெரியுது. அது இந்த மூன் மிஷனுக்கா கூட இருக்கலாம். மேற்தகவல்களுக்காக காத்திருக்கிறோம்.”

“ரைட்.. நல்ல காரியம். இந்த இடத்துல என்ன நடக்குதுனு கண்டுபிடிக்க இவ்வளவு நாளா?”

“அந்த ஏரியாவுல யாரும் வெளி ஆளுங்க உள்ளே நுழைய முடியறதில்லை. அப்படி போன நம்ம ஆளுங்க இரண்டு பேரை காணவில்லை. அந்த ஏரியா முழுக்க பாதுகாப்பா வைச்சிருக்காங்க.”

“ம்ம்.. சரி. ஒரு வேளை இது வழக்கமா நமக்கு தண்ணி காட்டுற வேலையா இருந்தா? பொக்ரான் ஞாபகம் இருக்குல்ல.”

“நல்லாவே ஞாபகம் இருக்கு. ஒரிசா பக்கம் வண்டிகளை அனுப்பிட்டு பொக்ரான்ல சோதனை செஞ்சாங்க. உண்மையிலேயே அந்த சம்பவம் நமக்கு சறுக்கல் தான். அதற்கப்புறம் அங்க நம்ம பலத்தை இன்னும் கூட்டிட்டோம். இப்போ சில பெரிய தலைகளுக்கு வலையை விரிக்க ஆரம்பிச்சிருக்கோம். கூடியவிரைவிலேயே எல்லா தகவல்களோடு வர்றேன்”

தலையாட்டிக் கொண்டே தன் அறைக்கு போக கிளம்பினார் மைக்கேல். காலை எழுந்ததும் முதல் வேலையாய் அமெரிக்க அதிபருடன் பதினைந்து நிமிடங்கள் பேசுவார் அவர்களுக்கென்றே இருக்கும் ப்ரத்யேக டெலிபோன் இணைப்பில். யாரும் ஒட்டு கேட்க முடியாது. முதல் நாள் நடந்த சம்பவக்கோர்வையை தெரிவித்தபின் தற்போதைய பிரச்சனையைப் பற்றி பேசுவர். சுருக்கமாய் தான் இருக்கும் அவர்கள் பேச்சு. அதற்கப்புறம் அலுவலகத்திற்கு வந்தவுடன் அதிபருக்கு அனுப்ப வேண்டிய ரிப்போர்ட்களை ஒரு முறை சரி பார்த்து அனுப்பி வைப்பார்.

மீட்டிங் முடிந்ததும் தன்னறைக்கு வந்தவர் கதவை மூடிவிட்டு இருக்கைக்கு வந்தார். அன்றைக்கு அதிபருக்கு அனுப்ப வேண்டிய தகவல்களை சரிபார்த்து அனுப்பி வைத்தார். கொஞ்ச நேரம் ஆனதும் அவருக்கென இருந்த தனிப்பட்ட டெலிபோன் லைனில் அந்த நம்பரை டயல் செய்தார்.

மறுமுனையில் எடுக்கப்பட்டதும் அடையாள எண்ணைக்கூறினார். அவரது அடையாளத்தை மறுமுனை அங்கீகரித்தது. அது சாட்டிலைட் போன் ஆகையால் எந்த நாட்டினரும் ஒட்டு கேட்க இயலாது. சுருக்கமாக சொன்னால் என்க்ரிப்டட் லைன்.

அமெரிக்க ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார் மைக்கேல்.

“என்னவாயிற்று?”

“நேற்று தான் சந்திப்பு முடிந்தது. இருக்குமிடம் தெரிந்துவிட்டது. பாதுகாப்பு பலமாக இருக்கும் போல. ஏதாச்சும் வழிவகை செய்யவேண்டும்.”

“ம்ம். ஏதேனும் தேவைப்பட்டால் நம் உதவி தகுந்த நேரத்தில் வரும்.”

போனை வைத்து விட்டு ஆல்பர்ட்டுக்கு போன் செய்தார்.

ஆல்பர்ட் அவருடன் உளவு வேலைகளில் பணியாற்றிய அதிகாரி. நீண்ட காலமாக ஒருவரை ஒருவர் அறிவர். ஆறுமாதத்திற்கு முன் தான் உளவுப்பிரிவிலிருந்து ப்ரமோஷனில் வந்திருந்தார் மைக்கேல். பொதுவில் அவர் நடவடிக்கைகள் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் ரகசிய உளவுப்பிரிவிலும் அவர் கை ஓங்கி இருந்தது.

“ஆல்பர்ட்..?”

“யெஸ்… ஸ்பீக்கிங்..”

“இன்னிக்கு மதியம் லஞ்ச் .. ஒகேவா?”

“ம்ம். ரைட்டோ”

“ஓக்கே.. டாக்கோ பெல்ஸ். வார்னர் ரோட்”

போன் துண்டிக்கப்பட்டது.

சரியாய் நண்பகல் பன்னிரண்டு மணிக்கு அவர் கார் கிளம்பியது. அருகிலிருந்த ஊருக்குள் சென்று வார்னர் ரோட்டில் இருந்த டாக்கோ பெல்ஸ் கடைக்குள் நுழைந்தார். அவருக்கு முன்னே ஆல்பர்ட் அங்கே காத்திருக்க ஆளுக்கொரு பரிட்டோ ஆர்டட் செய்து வாங்கிக் கொண்டு ஓரமாய் இருந்த இருக்கையில் அமர்ந்தனர்.

கடையில் கூட்டம் கம்மியாக இருந்தது. கண்ணாடி சுவர்கள் இருந்ததால் வெளியில் போகும் வாகனங்களைப்பார்த்துக் கொண்டே சாப்பிடலாம். சாதம் அடைக்கப்பட்ட நம்மூர் சப்பாத்தி போல் இருந்த அந்த் பரிட்டோவை கடித்துக் கொண்டே பேச ஆரம்பித்தார் மைக்கேல். அந்த கடை அவர்களுக்குப் பாதுகாப்பான கடை. ரகசிய பாதுகாப்பில் இருந்தது.

“தற்போதைய நிலவரம் என்ன?”

“நம்ம ஆள் சென்னை போய் சேர்ந்தாச்சு. தக்க பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்.”

“தெரியும். சற்று முன் தான் பேசினேன்”

“என்னென்ன தேவைப்படும்?”

“இப்போதைக்கு அந்த ரைஸ்மில்லுக்குள் நுழைய வேண்டும். கிடைத்த தகவல்படி அந்த இடம் நிறைய அடுக்கு பாதுகாப்பு கொண்டது. நம் ஆள் உள்ளே நுழைய அவகாசம் வேண்டும்”

“அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. இன்னும் இரு மாதங்கள் கூட இல்லை. அதற்குள் அந்த யந்திரத்தில் என்னென்ன இருக்கிறது என்று தெரிந்தாக வேண்டும்.”

“கண்டுபிடித்துவிடலாம்.”

“எப்படியோ. இன்று தான் அந்தப்பிரிவு ஆட்கள் அந்த கிராமத்தைப் பற்றியே கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒன்று அந்த ரைஸ்மில்லுக்குள் என்ன நடக்கிறது என்று தெரியவேண்டும். இல்லையேல் அந்த ரைஸ்மில்லையே அழிக்க வேண்டும். ஏதாச்சும் ஒன்று செய்தாக வேண்டும். நிலைமை ரொம்ப மோசம். புரிகிறதா?”

“புரிகிறது. “

“எனக்கு இன்னும் இரண்டு நாளில் அப்டேட் வேணும். என்ன ப்ளான் என்னவென்று”

“சரி.”

சாப்பிட்டு முடித்தக் கையோடு இருவரும் தத்தம் காரில் கிளம்பினார்கள். ஆல்பர்ட்டும் பின்னால் போய் கொண்டிருந்த மைக்கேல் ஓரமாக தன் வண்டியை நிறுத்தி விட்டு சாட்டிலைட் போனில் அந்த ந(ம்)பரை தொடர்பு கொண்டார்.

பேசி முடித்ததும் அலுவலகத்திற்கு கிளம்பினார் மைக்கேல்.

சென்னை புறநகர். நேரம் இரவு மணி பத்தை தாண்டியிருந்தது. ஆத்மானந்தா ஏற்பாடு செய்திருந்த ப்ளாட் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தது. நாராயண ரெட்டி கொடுத்திருந்த தகவல்கள் ப்ராங்கின் திட்டத்திற்கு போதுமானதாய் இருந்தது. மேஜை மேல் ஹைதராபாத்தை சுற்றியுள்ள பகுதிகளின் வரைபடமும், இதர மின்னணு சாதனங்களும் இருந்தன. நீண்ட நேரமாக அவன் வேலையில் முழுகியிருந்ததை ஆஸ்ட்ரேயில் கொட்டிக் கிடந்த கிகரெட் துண்டுகள் காட்டிக் கொடுத்தன. காலையிலேர்ந்து பழங்களும் பாலும் மட்டுமே சாப்பிட்டு வெளியிலே போகாமல் இருந்தான். இது அவனுக்கு தரப்பட்டிருந்த பயிற்சியில் ஒன்று. சந்தேகத்திடமாக எங்கேயும் பகலில் சுற்றக்கூடாதென்பது.
ஒரு வழியாக பல கோடுகளை அந்த மேப்பில் கிறுக்கியபின் நிமிர்ந்தான். அருகிருந்த மடிக்கணினியில் ப்ராக்ஸி ஐ.பி. வழியாக தனக்கு வேண்டிய தகவல்களை தேடிக் கொண்டான். அவனது திட்டத்தை ஆரம்பிப்பதற்கான விஷயங்கள் இருந்தன. இது போதும். மேலும் வேண்டிய விஷயங்களை ஆரம்பித்தவுடன் பார்த்துக் கொள்ளலாம்.

மனதில் திருப்தி ஏற்பட்டவுடன் தன் முகத்தில் அப்படி ஒரு குரூரப் புன்னகையை பரவ விட்டான் தனக்கு இதுவே கடைசியாய் இருக்கப் போகின்றதென்பதை அறியாமல்.

Sunday, June 20, 2010

ராவணன் - என் பார்வையில்

ராவணன்…
படப்பிடிப்பு தொடக்கத்திலிருந்தே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். விக்ரம், ஐஸ்வர்யாராய், பிருத்விராஜ், ஏ.ஆர்.ரஹ்மான்… முக்கியமாக மணிரத்னம்.
அநேகமாக இந்நேரம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் படம் அப்பட்டமான ராமாயண தழுவல் என்று. படத்தின் ஆரம்பமே ஒகேனக்கலில் விக்ரம் குதிப்பதில் ஆரம்பிக்கிறது. துண்டு துண்டாக சில காட்சிகள், பின் வீரா பாடலின் பிண்ணனியில் பெயர்கள். ஒருவிதமான பயணத்திற்கு நம்மை தயார்படுத்துகிறார்களோ என்ற அளவிற்கு அசத்தல் ஆரம்பம்.


சீதையை கடத்தி சென்ற ராவணனை வதம் செய்யும் கதை. வேறுதுவும் கதையைப் பற்றி சொல்ல இல்லேங்கறதால மற்ற விஷயங்களைப் பார்ப்போம். படத்தின் ஆணிவேரே பச்சைப்பசேலென்ற காட்சியமைப்பும் கண்ணுக்குக் குளிர்ச்சியாக மழைக்கால காட்சிகளும். இப்படியெல்லாம் இந்தியாவில் இடங்கள் உள்ளதா என ஆச்சர்யப்படும் அளவிற்கு இருந்த ஒளிப்பதிவு. சந்தோஷ்சிவனுக்கும் மணிகண்டனுக்கும் ஹேட்ஸ் ஆஃப். ஒவ்வொரு ஃப்ரேமையும் அவர்கள் செதுக்க எடுத்துக் கொண்ட சிரத்தை படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது.
அடுத்ததாக ஏ.ஆர்.ரஹ்மான். பாடல்கள் சக்கைப்போடு போட்டாலும் எல்லாமே படத்தில் இல்லை. பிண்ணனி இசையில் ஒரு போர்களமே நடத்தியிருக்கிறார். காட்சியின் தன்மைக்கேற்ப வரும் இசை. ஆயினும் நிறைய இடங்களில் ட்ரம்ஸை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியிருக்காரோ என்று தோன்றுகிறது. படத்தின் உஷ்ணத்தை காட்டவும் இருக்கலாம். மொத்தத்தில், படத்தின் மற்றுமொரு பக்கபலம் ஏ.ஆர்.ஆர்.
கலை: சமீர் சந்தா. எது செட், எது உண்மை என தெரியாத வண்ணம் நம்மை படத்தில் ஒன்ற வைப்பதே போதும் அவரின் வெற்றிக்கு. சண்டைக்காட்சிகளில் கயிற்றின் பங்கு முக்கிய பங்கு. சில காட்சிகள் ஏகத்துக்கும் மெதுவாக செல்வதால் கயிறுகட்டியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக அருவியில் இருந்து கீழே குதிக்கும் காட்சி.
நடிகர்கள் விக்ரம், ஐஸ்வர்யாராய், பிருத்விராஜ், கார்த்திக், பிரபு. விக்ரம் சொல்லத் தேவையில்ல. பின்னி எடுத்திருக்கிறார் மனிதர். தொண்டையில் குண்டுப்பட்டதால் தனது குரலை அவர் மாற்றிப்பேசுவதாகட்டும், தங்கையில் சாவு போது கரகரப்பான குரலில் ஓவென்று பெருங்குரலில் அலறுவதாகட்டும் கலக்கியிருக்கிறார். ஐஸ்வர்யா முன்னைவிட இன்னும் அழகு. அந்த மழையிலும் காட்டுப்பயணத்திலும் வாடாத முகம். கண்களில் உணர்ச்சிகளைக் காட்டுவதில் அசத்தியிருக்கிறார். பிருத்விராஜ் சூப்பிரண்டண்ட் ஆஃப் போலிஸ். பல நேரங்களில் கண்ணாடி போட்டிருப்பதால் அவரது உணர்வுகள் சரியாக வெளிப்படவில்லை. ஆயினும் தனது மனைவி கடத்தப்பட்ட செய்தி கேட்கும் போது முகத்தில் எந்த மாற்றமும் காட்டாமல் பற்களை கடித்து தாடையின் அசைவுகளிலேயே கலக்குகிறார்.ப்ரியாமணி நல்ல நடிப்பு. ரஞ்சிதாவின் சீன்கள் வெட்டப்பட்டுவிட்டன போலும். இரண்டு மூன்று இடங்களில் தலை காட்டுவதோடு சரி. வசனமே இல்லை.
வசனம்: சுஹாசினி. ஆங்காங்கே நல்லா இருந்தாலும் பஞ்ச் டயலாக் என்று சொல்லும் படி எதுவுமே நினைவில் இல்லாதது குறை. சாமி சிலை முன் ராகினியும் வீராவும் பேசும் இடம் நச்.
இயக்கம்: மணிரத்னம் நடிகர் தேர்வுகளாகட்டும், இடங்கள் தேர்வாகட்டும் இயக்குநர் மணி தன் பேரை நிலைநாட்டியிருக்கிறார். நடிகர்களிடம் தனக்குத் தேவையான முகபாவங்களை வாங்குவதில் கில்லாடி. இதிலும் நிரூபித்திருக்கிறார்.
திரைக்கதை: என்ன தான் எல்லோருக்கும் தெரிஞ்ச கதையை எடுத்தாலும் திரைக்கதையை அமைக்க அசாத்திய திறமை வேண்டும். அதில் மணிரத்னம் தவறிவிட்டாரோ என்றுத் தோன்றுகிறது. “அசோகவனத்தில் சீதை” என்பதை மட்டும் நீட்டிமுழக்கி மற்றவிஷயங்களை சுருங்க சொல்ல முயன்றிருக்கிறார். ஏனோ பல விஷயங்களை தவறவிட்டிருக்கிறார். மற்றப்படங்களிலெல்லாம் சம்பவங்கள் நிறைய இருக்க உணர்ச்சிகள் அதற்கேற்றாற் போல் காண்பித்தால் போதும் என எடுத்திருப்பர். ஆனால் இதில் சம்பவங்கள் என்று எதுவும் இல்லை. கடத்துதல் மட்டும் தான் பெரிய சம்பவம். மற்றபடி காட்டில் சுற்றித் திரிவது. ஆக இந்த பதினாலு நாள் என்னெல்லாம் நடந்திருக்கலாம் என்ற இடத்தில் கோட்டை விட்டுவிட்டார். அதனால் பல இடங்களில் படம் தொய்வு ஏற்படுகிறது.
எனக்குத் தெரிந்தவரை, மனிதன் எந்நேரமும் எல்லோருரிடமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. தேவைக்கேற்ப நேரத்திற்கேற்ப அவன் ராவணனாகவோ, ராமனாகவோ அவதாரம் எடுக்கிறான் என்ற கருவைக் கையாள சிரமபட்டிருக்கிறார். எதை சொல்ல எதை விட என்று. மனித உணர்ச்சிகளின் வெளிப்பாடு கொண்டே படத்தை நகர்த்த முயன்றிருக்கிறார். சில இடங்களில் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஆயினும் விரிவாக காட்டவேண்டிய காட்சிகளை சுருக்கி இருவரி வசனங்களில் அடக்கியதும், சுருக்கமாக முடிக்கவேண்டியதை இழுத்தவும் பலவீனம். குறிப்பாக ப்ரியாமணியை போலிஸ் தூக்கி செல்லும் போது, ஏனோ பிறக்க வேண்டிய இரக்க உணர்வு ஏற்படவில்லை. முன்னிகழ்வுகளை இன்னும் சம்பவங்களோடு சொல்லியிருந்தால் ஒன்றியிருக்கலாம். அது மாதிரி தான் ஐஸ்வர்யா மேல் விக்ரம் காதலும். அருவியில் இருந்து கீழே விழுந்ததும் காதல் வருகிற மாதிரி “உசுரே போகுதே” வைத்ததும் ஏமாற்றம். பார்த்தவுடன் காதல் போன்ற உணர்வு. அதனால் விக்ரமின் காதலின் ஆழம் தெளிவாக எங்கேயும் சொல்லப்படாதது (ஆங்காங்கே கண்கள் மூலம் விக்ரம் காட்டும் காட்சிகள் தவிர) ஆச்சர்யம். எப்படிப்பட்ட சூழ்நிலையில் விக்ரம் மேல் ஐஸ்வர்யாவிற்கு பாசம் அல்லது காதல் வருகிறதென்பதும் காணோம். இறுதியாக ப்ருத்விராஜ் தன் கேள்விகளால் ஐஸ்வர்யாவை துளைக்கும் போதே முடிவு தெரிந்துவிடுகிறது, இதுவும் பலவீனம்.
கதாபாத்திரங்களின் நிலைமாறுதல் இன்னும் தெளிவாக கையாளப்பட்டிருக்கலாம். ராமன் ராவணன் ஆவதும், ராவணன் ராமன் ஆவதும்… இந்த மாற்றம் கொஞ்சம் கொஞ்சமாக பார்ப்பவர் மனதில் பதியும்படி இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஆச்சர்யப்பட்ட விஷயம் ப்ருத்விராஜ். படத்தில் ராமனாய் வந்தாலும் இவருக்கு கொடுக்கப்பட்ட இடம் கம்மி தான். என்னைப் பொறுத்த வரை இங்கே ராவணன் என்பது விக்ரமை குறிக்கவில்லை. குணத்தைக் குறிக்கிறது. அதன்படி ப்ருத்வி இறுதியில் ராவணாகிறான். பதினாலே நாளில் ராமன் எப்படி ராவணன் ஆனான் என்ற விஷயமும் தெளிவாக இல்லை. தன் மனைவியை தூக்கிட்டு போய் விடும் போது அவள் மேலிருந்த காதலால் படையைத் திரட்டிக் கொண்டு போகும் ராமன், அந்த பதினாலு நாளும் படும் கஷ்டங்களில் மனைவியை காப்பாற்றுவதை விட ராவணனைக் கொல்லுவதே தன் எண்ணம் என்னும் இடத்தில் ராவணனாகிறான். (என்ன குழம்பி..குழப்பிட்டேனா?) முதலில் இருந்த முகபாவங்கள் மாறி..இறுதியாக மனைவியைப்பார்த்த போதும் கண்ணில் காதலில் இல்லாமல் “த்தா… என்னையவே இவ்ளோ நாள் அலைய வச்சிட்டியா?” என்னும் வெறி வரும். இப்படிப்பட்ட நிலைமாறுதல்களைக் கையாளுவதில் ஏனோ கோட்டைவிட்டுவிட்டார் மணிரத்னம்.
ஆக மொத்தத்தில், என் நண்பன் சொன்னது: எல்லோரும் தங்களது மிகச் சிறந்த உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள் மணிரத்னத்தைத் தவிர.


Blogger Templates by Isnaini Dot Com. Powered by Blogger and Supported by ArchiThings.Com - Modern Architecture Design