Friday, March 26, 2010

வெட்கம்ன்னா.....

ஏன் எழுத ஆரம்பிச்சேன்னு தெரியல.. ஆனா அது நடந்துச்சு.. கிட்டத்தட்ட நாலஞ்சு வருஷமிருக்கும் எழுதணும்னு தோணி.. ஏகத்துக்கும் ப்ளாக்கும் கதைகளும் படிச்ச விளைவு. திடீர்னு போன வருஷம் இனி எழுதறத நிறுத்தினேன். அப்புறம் இப்போ ப்ளாக் ஆரம்பிச்சதுக்கு அப்புறம் பழைய டச் விட்டுப் போச்சு. அதான் மொக்கையா முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன்..

அதாகப்பட்டது இப்போ எத பத்தி எழுதப்போறேன்னா... வெட்கம். அந்தக் காலத்திலேர்ந்து ஒரு நாலு மேட்டர பத்தி சொல்லுவாங்க. குறிப்பா பொண்ணுங்களுக்கு.. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு. மத்தத பத்தி இப்போ கவலையில்ல. ஆனா அந்த மூணாவது மேட்டர்.. நாணம்.. வேற பேரு தான் வெட்கம். என்னமோ அத பொண்ணுங்களுக்கு மட்டும் சொந்தம்ங்கற மாதிரி பேசறாங்க... ஆனா வெட்கப்பட்ட பல ஆண்களைப் பார்த்திருக்கேன்.. மச்சான்.. மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிடுச்சுன்னு வழிவாங்கல்ல.. அது வ்ழிசல் இல்லீங்க.. வெட்கம். அதே மாதிரி கடலை.. ஜொள்ளு..இப்படி பல பேர்ல பொண்ணுங்ககிட்ட பேசும் போது அவங்க கண்ணு மின்னுமே..அது ஜொள்ளு இல்லே வெட்கம். வாயில வழிஞ்சா தான் ஜொள்ளு..

மேட்டருக்கு வருவோம். சினிமால நிறைய தமிழ் பொண்ணுங்க வெட்கப்பட்டு பார்த்திருக்கேன். ஆனா நேரில என் அதிர்ஷடமோ என்னமோ தெரியல.. இதுவரை ஒரே ஒரு பொண்ணு தான் வெட்கப்பட்டு பாத்திருக்கேன்....ஹ்ம்ம்... சரி..விடுங்க. மத்தபடி சரியாவே ஞாபகம் இல்லே... அதுவும் பெங்களூருக்கு வந்தப்புறம் வெட்கமா என்ன?னு கேக்கற அளவுக்கு எல்லோரும் இருக்காங்க.. ஆண்கள் வெட்கப்படுற அளவு கூட பெண்கள் வெட்கப்படுற மாதிரி தெரியல..

வெட்கப்படுறதும் வெட்கப்படுறதைப்பாக்கறதும் ஒரு சுகம். மனசுக்குள் பட்டாம்பூச்சி பறக்கறது கண்ணுல தெரியும்.. கால் பூமியில இல்லாம ஆகாயத்துல அடியெடுத்து வைக்கும்... அப்போ இருக்கும் பாருங்க ஒரு லவ் ஃபீல்... ச்சே.. இது எதுவும் இன்னும் எனக்கு குடுத்து வைக்கல... எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கறேன்..

இப்படி இருக்கற சூழ்நிலையில சமீபத்துல நான் பார்த்த ஒரு வெட்கப்படுற சீன் ரொம்பவே ஆச்சர்யப்படுத்திடுச்சு.. கோவா படத்துல மெலன் மேரியின் வெட்கம். என்ன ஆச்சர்யம்னா... வெட்கப்படறதுன்னா என்னன்னு எப்படி சொல்லி புரிய வச்சிருப்பாங்கன்னு. ஆனா சும்மா சொல்லக்கூடாது பொண்ணு பிச்சி உதறிடுச்சு... வெட்கத்துல. அங்க ப்ரேம்ஜிக்கு பதிலா என்னைத் தான் பார்த்தேன்.. ஹிஹி. அவ்ளோ அழகா வெட்கப்பட்டது... அதுவும் தலையாட்டிக்கிட்டே.. சீரான பல்வரிசை தெரிய... அடடா... சரி... தொடச்சுக்கிட்டேன்.. நான் பார்த்தத நீங்களும் பாருங்க.. உங்களுக்கும் வெட்கம் வரும்... வர்ட்டா....

Monday, March 22, 2010

மௌனராகங்கள்...!

போன வாரம் ஐ.பி.எல் பிரச்சனையால நீயா நானா பார்க்க முடியாமல் போச்சு. அதைப் பார்க்கணும்னு நண்பன் ஆசைப்பட்டான். கொஞ்சம் பொறு… ரெண்டு நாள்ல எப்படியும் நெட்ல வந்துடும்னு சொல்லி.. ஐ.பி.எல்லும் பார்த்தாச்சு.அடுத்து செவ்வாய்..உகாதி விடுமுறை. என்ன பண்றதுனு தெரியாம ரெட்ல உலாவிக்கிட்டு இருந்தபோது நீயா நானா பார்க்கலாம்னு தோணுச்சு. சரின்னு நெட்ல் தேடி கண்டுபுடிச்சு பார்க்க ஆரம்பிச்சோம். பசங்கல பொண்ணுங்களும் பொண்ணுங்களை பசங்களும் புரிந்து கொள்ளும் முயற்சின்னு குறிப்பிட்டாங்க.

ஒவ்வொருத்தர் பேசும் போது சுவாரஸ்யமா இருந்துச்சு. அடுத்தவங்க கதை கேட்கறதுன்னா நமக்கு என்ன சுவாரஸ்யத்துக்கு குறைச்சல்..? இப்படி தான் பலரும் தான் வாழ்க்கைல நடந்தத வச்சு பொண்ணுங்க இப்படி தான், பசங்க இப்படித்தானு ஏகத்தும் பேசினாங்க. கேட்கற வரைக்கும் சந்தோஷம்.

Coming to the point…! இந்த விஷயத்தை பத்தி யோசிச்சா தேவையில்லாம ஆணா இருந்தாலும் சரி.. பெண்ணா இருந்தாலும் சரி… அநாவசியமா மூளைய குழப்பிக்குவோம். ஏகத்துக்கும் குழம்பினப்புறம் தெரிஞ்ச விஷயம் இது. இன்னார் இந்த சமயத்தில் இப்படித் தான் இருப்பார்கள் என்று சொல்ல முடிந்துவிட்டால் வாழ்க்கையில எந்த சுவாரஸ்யமுமே இருக்காதே. நூறு சதவிகிதம் ஒருத்தரைப் பத்தி கணிக்க முடிந்துவிட்டால் அவரை விட்டு விலகிவிட வேண்டும். அப்புறம் அவருடனான வாழ்க்கை ஆபத்தானது..உண்மையிலேயே. சீக்கிரமே போரடித்துவிடும்.

இதே தான் ஆண்பெண் புரிதலுக்கும். முழுமையாக புரிஞ்சுக்கிட்டோம்னு யாரும் சொல்ல முடியாது. ஆனா வாழ்நாள் முழுக்க அந்த புரிதலைத் தேடிப் போற பயணம் சுவாரஸ்யமானது. அதுலேயும் பெண்கள் இப்படித் தான்னு பொதுவா பொத்தம்பொதுவா சொல்ல முடியாது. அந்த நிகழ்ச்சியிலேயே ஒரு ஆணோட கேள்விக்கு பல பதில்கள் வந்தது.. இப்படியா இருக்கலாம்.. அப்படியா இருக்கலாம்னு.. சந்தோஷம். ஆக. இது தான்னு ஒரு பதில் எந்த குழப்பமான புரிதல் சம்பந்தப்பட்ட கேள்விக்கும் கிடையாது.

என்னைப் பொறுத்த வரை ஒரு ஆணா.. பெண்ணின் மனநிலையை அறிந்து கொள்ள முயற்சிப்பது சுவாரஸ்யமான விஷயமே. எந்த வகைப் பெண்ணா இருந்தாலும்… என் அம்மாவுக்கு என்ன பிடிக்கும்னு முழுமையா அறிய முடியவிட்டாலும் ஓரளவுக்குத் தான் கணிக்க முடியுது. இத்தனை வருஷம் குடும்பம் நடத்தின என் அப்பாக்கே தெரியும்னு சொல்ல முடியாது. பேசுவது ஒன்றாயிருந்தாலும் குறிப்பிடுவது வேறொன்றா இருக்கும். அந்த குறிப்பை நாம புரிஞ்சுக்கணும். இப்படித் தான் வாழ்க்கையே…

அடுத்ததா பெண்ணுக்கு என்ன புடிக்கும். ஒரு பெண்ணை கவரணும்னா.. என்னென்ன பண்ணனும்னு இன்னும் சரியா யாருக்குமே தெரியாது.. இப்படிப்பட்ட காலக்கட்டதுல ஏன் நான் இதைப்பத்தியெல்லாம் பேசிக்கிட்டு இருக்கேன்..

இன்னிக்கு பார்த்த படம்… கே.டி.வியில்.. மௌனராகம்..

உண்மையிலேயே ஃபீல் அண்ட் ஃபீல் ஒன்லி படம். படத்தில் வர்ற கார்த்திக் கேரக்டராகட்டும், மோகன் கேரக்டராகட்டும்.. ரேவதியாகட்டும் அழகாக செதுக்கி இருப்பார் மணிரத்னம். இளையராஜாவின் ஒத்துழைப்போடு அந்த உணர்வு படம் முழுக்க நம்மை ஆக்ரமிச்சிருக்கும். படத்தில் ரேவதியின் கதாபாத்திரம் அந்த குழப்பமான பெண்ணின் மனநிலை அவ்ளோ அழகா பதிவு செய்யப்பட்டிருக்கும். படம் வந்து நாளானாலும் இன்றைக்கும் இளம்பெண்களின் விருப்பப்படமாக அது இருக்கும். குறிப்பாக கார்த்திக்கின் துறுதுறுப்பும் மோகனின் பொறுமையான குணமும்… ‘வாவ்…சான்ஸ்லெஸ்னு..’ பொண்ணுங்க சொல்லக் கேள்வி.. படத்தோட ஒன்றி பாத்தப்புறம் (எத்தனையாவது முறைன்னு தெரியல)… சட்டென்று மனதுல பட்ட விஷயம் இது… சரியா தப்பான்னு நீங்க தான் சொல்லணும்.

பெண்களுக்கு… குறிப்பா இன்றைய இளம்பெண்களுக்கு கார்த்திக் மாதிரி காதலனும் மோகன் மாதிரி கணவனும் தான் எதிர்பார்க்கிறார்கள்.. சரியா தப்பான்னு நீங்க தான் சொல்லணும்.. கல்யாணத்துக்கு முன்னாடியோ காதலிக்கும் போதோ துறுதுறுவென்று சத்யா படத்தில் வரும் ‘வளையோசை’ பாடலில் கமல் செய்யும் குறும்புத்தனங்களை எதிர்ப்பார்க்கும் இளம்பெண்கள் கல்யாணத்துக்கு பின் கணவன் மோகன் மாதிரி அன்பாகவும் தன்னை புரிஞ்சு தனக்காக விட்டுக்கொடுக்கும் நல்லவனாகவும் எதிர்பார்க்கிறார்களா??? ஒருவரே இருபாத்திரங்கள் ஏற்பது சாத்தியமா…??

உலகம் முடியும் வரை இந்தக்கேள்விக்கு விடை கிடைக்குமென்று எனக்குத் தோன்றவில்லை.

எனிஹௌ… நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த அங்காடி தெரு வரப்போகிறது.. கூடிய சீக்கிரமே பார்த்திடுவேன். ‘நெசமா தான் சொல்றியா’ அஞ்சலியை ட்ரெயிலரில் பார்த்த போதே முடிவு செய்துவிட்டேன்..ஹிஹி

Tuesday, March 9, 2010

முகமறியா முகங்கள்

(மு.கு: இந்தக்கதையை எப்போதோ ஏதோ ஒரு கதைப்போட்டிக்காக எழுதியது. போட்டிக்கு அனுப்புவதென்றால் கொஞ்சம் சீரியஸா... தெரியாத புரியாத விஷயமா இருக்கணும்னு ஒரு வரைமுறைக்கு உட்பட்டு எழுதினேன். வழக்கம் போல பரிசு ஏதும் கிடைக்கல..ஹிஹி.. படிச்சுட்டு கொல்லுங்...அவ்வ்வ்...சொல்லுங்க)


இன்றைய நாள் ஏனோ விசேஷமாய் தோன்றியது. மனதுக்குள் சின்ன குறுகுறுப்பு, கொஞ்சம் படபடப்பு. வாழ்வின் முக்கியமான நபரை சந்திக்கப் போகிறேன். அவர் ஆணா பெண்ணா. தெரியாது. ஆனால் இது வாழ்க்கையின் மிக முக்கியமான சந்திப்பு என்பது மட்டும் புரிந்தது.

இணையத்தில் உலவ ஆரம்பித்திருந்த புதிது அது. இணையத்தின் வழி உலக விஷயங்கள் அனைத்தும் தெரிந்து கொள்ளலாம் என்று கேள்விப்பட்டதிலிருந்து மனம் அதை ஒரு திரையாகவும் அதில் படங்கள் ஓடுவது போலவும் கற்பனை செய்து பார்த்தது. ஒருவழியாக நண்பன் ஒருவன் மூலம் இணையம் என்பது படங்கள் மட்டுமல்ல தளங்களும் கொண்டது என்று கொஞ்சம் கொஞ்சமாக புரிபட ஆரம்பித்தது. கல்லூரியில் படிக்கையில் அப்பா ஆசையாக கணினி வாங்கி கொடுத்த போது உலகத்தையே வென்றது போன்றதொரு உணர்வு. ஏனையோருக்கும் அப்படி தான் இருந்திருக்கும். அவ்வளவு பெருமிதம். இணைய இணைப்பு கொடுத்து அதில் உலாவ ஆரம்பித்த பிறகு மற்ற வேலைகள் மறந்தே போயின. காலை எழுந்ததும் இணையம். பின்பு மாலை கல்லூரி முடிந்தபின்பும் இணையம். வாழ்க்கை நண்பர்களுடன் அளவளாவுவது குறைந்து இணையத்தோடு உலாவது ஆனது. சரியாக சொல்ல வேண்டுமானால் இணைய அடிமை.

இப்படித் தான் ஒரு நாள் அரட்டை தளங்களுள் நுழைந்து உலாவிக் கொண்டிருந்த போது அந்த பெயர் கண்ணில் பட்டது. Inpersuit. வித்தியாசமாய் தெரியவே தனிச்செய்தி அனுப்பினேன்.

“வணக்கம். எதைத் தேடி தங்கள் பயணம்?”

பதில் உடனே வந்தது.

“வணக்கம். எதைத் தேடலாமென்று தான்…”

வழக்கமாக சரியான முறையில் பதில் வராது. தெளிவான பதில் வரவே உரையாடல் தொடர்ந்தது.

“எதைத் தேடலாமென்று தேடிக் கொண்டிருக்கிறீர்கள்..? அப்படி ஏதேனும் தொலைத்து விட்டீர்களா என்ன?”

“தொலைத்தால் மட்டும் தான் தேடுவார்களா? தொலைப்பதற்கும் ஏதாவது வேண்டுமல்லவா? அதனால் தொலைப்பதற்காக தேடிக் கொண்டிருக்கிறேன்…”

சுத்தம்.. என்ன எதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் என்று புரியவில்லை. ஆனாலும் ஏதோ ஒன்று மட்டும் பேசச் சொல்லி வற்புறுத்துகிறது. மேலும் தொடர்ந்தேன்.

“தொலைக்கப் போகிறோம் என்று தெரிந்தபின்னும் எதற்காக தொலைந்து போய் தேடுகிறீர்கள்? தொலையாமலே தொலைக்காததை வைத்து நிம்மதியா இருக்கலாமே… தொலைந்துவிடும் என்று தெரிந்தும் தேடுவது அறியாமையல்லவா?”

“ஆம்.. ஆனாலும் தேட வேண்டுவது கட்டாயமாகுதே…!”

அடச்சே. இந்நேரம் பார்த்தா மின்சாரம் போய்த் தொலைய வேண்டும். சிறிது நேரம் மனதில் அந்த உரையாடல் அப்படியே இருந்தாலும் அடுத்தடுத்து வேற விஷயங்களில் கவனம் திரும்பியது. ஒரிரு மணிநேரத்திலேயே அந்த விஷயம் சுத்தமாய் மறந்துவிட்டிருந்தது.

கல்லூரிப் படிப்பெல்லாம் முடித்துவிட்டு வேலை கிடைத்து நகரத்திற்கு வந்து நண்பர்களுடன் தங்க ஆரம்பித்தாயிற்று. ஒரு காலத்தில் பிரமிப்பாய் தெரிந்த இணையம் பற்றி இப்போது கரைத்து குடித்திருந்தேன். இணையம் பற்றித் தெரியவில்லை என்று யார் சொன்னாலும் அவனை புழுவிற்கு சமானமாய் பார்க்கவும் ஆரம்பித்தாயிற்று. காலை எழுந்தவுடன் பல் கூட துலக்காமல் இணையத்தில் மேய வேண்டியது. ஏனோ இணையத்திற்கே ஆயுட்கால அடிமை போல.

மென்பொருள் தொழில் வேறு. தினமும் பதினாறிலிருந்து இருபது மணிநேரம் வேலை பார்க்க வேண்டியது. பணத்தை கத்தையாக கொடுத்தாலும் மனத்தை சக்கையாய் பிழிந்தனர். பல நாள் தலை பாரமாய் இருக்கும். ஏதோ இருண்டதொரு குகைக்குள் அடைப்பட்டுக் கொண்டு வெளிவர முடியாததை போல் மூச்சு முட்டும். ஆனாலும் வெளியில் பகட்டாய் உடை உடுத்தி பார்ப்போரிடம் சிரித்து சந்தோஷமாய் இருப்பது போல் நடித்து… ஆம். மிகச் சரியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். நல்லவன் போல். வல்லவன் போல்.

தொடர்ச்சியாக பல இரவு வேலை பார்த்ததில் மனத்தின் அழுத்தம் அதிகமாகி மருத்துவரை பார்க்க நேரிட்டது. ‘கவலைப்பட ஒன்றுமில்லை’யென்றும் வழக்கமாக மென்பொருள் வல்லுநர்களுக்கு நேரிடுவது தான்’ என்றும் மிகச் சாதாரணமாய் சொல்லிவிட்டார். இந்த நரகத்திலிருந்து விடுதலை கிடைக்குமா? விடுதலை என்பதற்கு வேலையே இல்லை. இது நானாய் தேடிக் கொண்ட நரகம். பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இருந்து தான் ஆக வேண்டும்.

ஒருவாரம் போல விடுப்பு எடுத்து ஊருக்கு வந்தேன். காற்றை புதிதாய் உணர்ந்தேன். ஏ.சியின் குளுமை இல்லை. ஆனால் மனதிலும் வெறுமை இல்லை. அம்மாவின் சாப்பாடு. ஒரு வாரம் வயிறார சாப்பிட முடிந்தது. ஒரு நாள் மாலை வேளையில் பொழுது போகாமல் இணையத்தில் (இது என்றும் விடாத கருப்பு) உலாவும் போது அதே பெயர். அப்போது தான் ஞாபகம் வந்தது. கடந்த மூன்று வருடங்களாய் எந்த அரட்டைத் தளத்தினுள்ளும் நுழைந்ததில்லை. ஆர்வம் உந்த செய்தி அனுப்பினேன்.

“நலமா?”

“நலம். நீண்ட நாட்களாகிவிட்டது நாம் உரையாடி”

“ஒரு முறை தானே உரையாடி இருக்கிறோம். அன்று மின்சாரம் தடைபட்டுவிட்டது.”

“நினைத்தேன்..”

“சரி.. உங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாமா?”

“என்னைப் பற்றி என்றால்..?”

“உங்கள் ஊர்..பேர்..முடிந்தால் சொல்லுங்கள். இல்லையேல் வேண்டாம்”

“தெரிந்து என்ன செய்ய போகிறீர்கள்”

“ஒன்றும் செய்யப் போவதில்லை. சும்மா தெரிந்து கொள்ளத் தான்”

“ஒன்றும் செய்யாததற்காக எதற்கு ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும்.”

இந்த நபர் அவரே தான். ஆனால் ஆணா பெண்ணா. கண்டுபிடிக்க வேண்டுமே.

“அனைத்தும் தெரிந்து கொள்வது நல்லது தானே. கற்றாரை கற்றார் காமுறுவர்”

“கற்றபின் நிற்க அதற்குத் தக என்றும் சொல்லியிருக்கிறார்களே. தெரிந்து கொள்ள வேண்டியது யாருக்கேனும் பயனாய் இருக்க வேண்டும். ஒன்றும் செய்யாமலிருப்பதற்காக தெரிந்து கொள்ளுதல் நேரம் கொல்லுதல் தானே?”

அடச்சே… என்ன இப்படி மாட்டிக்கிட்டு முழிக்கிறேன். ஆனாலும் ஏதோ ஒரு உந்து சக்தி பதிலனுப்பியது.

“உங்களைப் பற்றித் தெரிந்தால் இணையத்தோழமை என்று கதை எழுதுவேன்.”

“தோழமை என்றால்..”

“நட்பு”

“நாம் நண்பர்களா? என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? எதுவும் தெரியாமல் தோழமை என்றால்”

ம்ம்….. திரும்ப திரும்ப மாட்டிக் கொள்கிறேனே.

“அதற்குத் தான். உங்களைப் பற்றி சொல்லுங்கள் என்றேன்.”

பேச்சு இப்படியாகத் தொடர்ந்தது. மெல்ல மெல்ல என்னையுமறியாமல் அதில் லயிக்கலானேன்.

பெயர் வித்யா என்றும் நான் பணிபுரியும் அதே ஊரில் தான் வசிப்பதாவும் சொன்னாள். அடுத்தடுத்த நாட்களில் எங்கள் உரையாடல்கள் தொடர்ந்தது. பல்வேறு சம்பவங்களைப் பற்றி. நாகரிகமான முறையில் தெளிவான நடையில் சுருக்கமாக. மனதில் இருந்த குழப்பங்களுக்கு அவள் தத்துவங்கள் மிகவும் தேவைப்பட்டது.

மனிதர்கள் உரையாடுவதே தெரிந்ததை திரும்ப தெரிந்து கொள்ளத் தான் என்றாள். ஏனோ சில காரணங்களால் எதைத் தேடிக் கொண்டிருக்கிறாள் என்பதை மட்டும் சொல்லவே இல்லை. நாட்கள் ஆக ஆக எங்கள் உரையாடல்கள் தீவிரமடைந்தன. பணியில் சேர்ந்த பின்பு அந்த மாற்றத்தை நன்கு உணர்ந்தேன். என் குறை சொல்லி புலம்பகூட நல்ல நட்பு என்னருகில் இல்லாததே காரணம் என்று புரிந்தது.

எதனாலோ அவளுடம் உரையாடும் போது மட்டும் நான் நானாய் இருக்கிறேன். ‘என்ன வாழ்க்கை இது’ என்ற எண்ணம் போய் ‘இது வாழ்க்கை’ ஆனது. சில நேரங்களில் யோசித்துப் பார்க்கையில் என் தனிமை தவிர அவளிடம் உரையாடும் போது மட்டும் தான் நான் நானாய் இருந்திருக்கிறேன் என்று தோன்றியது. நான் என்ற நானே கூட பொய்யான ஒரு முகமூடியாய் தோன்றிற்று. விரும்பியோ விரும்பாமலோ இது தான் சரி என்று இந்த சமுதாயம் தீர்மானித்ததை ஏற்றுக் கொண்டு விதவிதமான முகமூடிகள் அணிந்து கொண்டு வெளியில் நடமாடுகிறேன். உள்ளுக்குள் மட்டும் எது நானென்று பெருங்குழப்பம். குழப்பம் மட்டுமே வாழ்வின் மிச்ச சொச்சமோ. இதற்கெல்லாம் தீர்வாக அவள் உரையாடல். எதையும் எடுத்தெறிந்தாய் போல் பேச்சு. மறைக்காமல் தெளிவாய் தன் பலம் பலவீனம் அணிந்த தோரணை.

அமைதியாய் போய்க் கொண்டிருந்த உரையாடல்களில் சிகரம் வைத்தாற் போல ஒரு நாள் ‘நாம் சந்தித்தாலென்ன?’ என்றாள்.

இதுவரை ஒரே ஊரில் இருந்தாலும் என் மனம் அவளை சந்திக்க முற்பட்டதில்லை. ஏனோ தெரியவில்லை. சந்திப்பதற்கான தேவையும் ஏற்பட்டதில்லை. இப்போது அவளே கூப்பிடுகிறாள். போய் தான் பார்க்கலாமே.

இன்று தான் அவளை சந்திக்கப் போகிறேன். நீண்ட நாள் தோழமையை சந்திக்கப் போகிறோமென்று. பதட்டம்..படபடப்பு… இன்னதென்று என்று பிரிக்க முடியாத பலவகை உணர்ச்சிகள். ஒருவாறாய் கட்டுப் படுத்திக் கொண்டு குறிப்பிட்ட இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். நடையில் துள்ளலா தள்ளாட்டமா? தெரியவில்லை. பரவசத்துடன் கோவிலில் குடியிருக்கும் அம்மனை தரிசிக்கப் போகும் பக்தனைப் போல. அந்த இடத்தின் வாசலை அடையும் போது அவள் சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது.

‘இளநீல வண்ண சுடிதார் அணிந்திருப்பேன். அந்தக் கடையின் முன் நின்றிருப்பேன். குதிரை வால் கொண்டை.’ அவள் அலைபேசி எண்ணைத் தரவில்லை.

மனத்தினில் ஆயிரம் கற்பனைகள். எப்படியிருப்பாள் என்று. பெரிதாய் இறுமாந்து நின்றிருந்த அந்த வணிக வளாகத்தின் முன் நிற்கையில் ஏனோ சின்னதாய் தோன்றினேன். மெலிதாய் சீட்டி அடித்தப்படி படிகளில் ஏறுகையில் கால் தடுக்கி தடுமாறினேன். உண்மையிலேயே தடுமாற்றமோ?

பார்த்து வைத்திருந்த பல ஒத்திகைகள் கண்முன்னே வந்துப் போயின. முதலில் என்ன பேச ஆரம்பிக்கலாம்? என்ன பேசலாம்? எங்கு போய் சாப்பிடலாம்? என்ன மாதிரி உடை அணிந்தால் பார்க்க நன்றாய் இருக்கும். எவ்வளவு கற்பனைகள் மனதினில்.

ஆயிரம் கைகள் சேர்ந்து அறைந்தார் போல் ஒரு வலி. முகமூடி தொலைத்து தொடர்பு கொண்டவளைப் பார்க்க விதவிதமான முகமூடிகளை தேர்வு செய்கிறேன். இன்றோ பகட்டான உடை அணிந்து அவளைப் பார்க்க. உலகே என்னைச் சுற்றி நின்று கைக்கொட்டி சிரிப்பதாய் கூச்சமாயிருந்தது. குழப்பங்களிலிருந்து விடுபட்டு விட்டதாய் குழம்பிக் கொண்டிருக்கிறேன். எங்கேயோ தொலைந்து போன மனிதத்துள் நானும் ஒருவனாக…

நிமிர்ந்து பார்த்தேன். தூரத்தில் அவள் அடையாளம் சொன்ன கடை. கலங்கிய கண்களில் பிம்பமாய் பலர். எல்லோரும் நீல வண்ண ஆடை அணிந்தது போல் தோன்றியது. தெளிந்துவிட்டேனா குழம்புகிறேனா. தெரியவில்லை. எது தொலைத்தேன்? எதைத் தேடுகிறேன்? இன்னும் புரியவில்லை. தன்னிச்சையாக என் கால்கள் திரும்பி படியில் இறங்க ஆரம்பித்தது.

Friday, February 26, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்



ஆரம்பமே அழகாய் கேரளாவின் நீர்நிலையில் வெள்ளை வண்ண எழுத்துக்கள். Young Super Star சிலம்பரசன் என்று ஆரம்பம். ஏ.ஆர்.ரஹ்மான் பேர் வரும் போது ஆராவாரமான கைத்தட்டல். படம் சர்ச்சில் ஆரம்பிக்கிறது. த்ரிஷாவின் கல்யாணம். மன்னிக்க ஜெஸ்ஸியின் கல்யாணம். சிம்பு.. அவ்வ்வ்.. கார்த்திக் இருக்கிறான். அவன் பார்வையில் படம்.

“உலகத்தில இத்தனை பொண்ணுங்க இருக்க நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்?”
இதே வசனம் நாலு முறை படத்தில் வருது. வேறு ஆட்கள். ஏன் ஜெஸ்ஸியே ஒரு முறை கேட்கிறாள். ப்ளாஷ்பேக்கில் படம் செல்ல ஜெஸ்ஸி வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் குடும்ப வாரிசு கார்த்திக். பார்த்தவுடனே பத்திக்கிச்சு ஜெஸ்ஸியின் மேல் காதல். எதிர்பாராமல் சட்டென காதலை சொல்ல ஜெஸ்ஸி முறைக்கிறாள். அவள் பாட்டியின் வீட்டுக்கு கேரளா செல்ல அங்கும் தொடரும் கார்த்திக். கஷ்டப்பட்டு அவளை கண்டுபிடிக்க அவனை தன்னை மறக்க சொல்ல நண்பர்களாய் இருக்கலாம் என்கிறான். இப்படியாக பல நிகழ்வுகள் ஒவ்வொரு முறையும் அவன் காதலை அவள் மறுக்க.. முக்கிய விஷயம் கார்த்திக்கை விட ஜெஸ்ஸி ஒரு வயது பெரியவள். கிறிஸ்தவ குடும்பத்தைத் சேர்ந்ததால் தன் தந்தை ஒரு ஹிந்துவிற்கு கல்யாணம் செய்து கொடுக்க மாட்டார் என்று மனம் குழம்பும் ஜெஸ்ஸி.. ஒரு பக்கம் கார்த்திக்கை பிடிச்சிருக்கு ஆனால் காதலில்லைன்னு.. குழம்ப.. படம் இப்படியே செல்ல.. ஒரு பிரச்சனையில் ஜெஸ்ஸியின் அண்ணனை கார்த்திக் அடிக்க அவசர அவசரமாய் ஜெஸ்ஸிக்கு கல்யாணம் நிச்சயிக்கிறார்கள். மனம் கேட்காமல் அவள் திருமணத்திற்கு கார்த்திக் செல்ல அங்கே… படத்தின் இடைவேளை…
அதன்பின் அழகாய் கோர்க்கப்பட்ட நிகழ்வுகள், சோகம், சில சந்தோஷம் என பொறுமையாய் படம் நகர்ந்து இறுதியில் என் பார்வையில் சிறப்பான முடிவு..

படத்தில் மிகப்பெரிய பலம் ஏ.ஆர்.ஆர். உறுத்தாத பாடல்கள் படத்தின் சரியான இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிண்ணனி இசை கேட்கத் தேவையில்லை. அவ்வளவு அழகாய் கையாளப்பட்டிருக்கிறது. அதிலேயும் காதலை மறுத்து ஜெஸ்ஸி செல்ல முகத்தில் சோகம் அப்பி கார்த்திக் இருக்க எதிர்பாராதவிதமாய் சோகவயலின் இல்லாமல் பேஸ்கிதாரில் வெஸ்டர்ன்.. பின்னிட்டாரு.. ப்ரண்டாஸ் இருக்கலாம்னு கார்த்திக் சொல்லும் இடத்தில் முஸ்தபா பி.ஜிஎம். சூப்பரோ சூப்பர்.

நடிப்பு: இதுவரை பார்த்திராத சிலம்பரசன். அடக்கி வாசித்திருக்கிறார். அவ்வளவு அழகாய் இருக்கிறார். காதலை சொல்லும் இடத்திலும் குறும்பு கொப்பளிக்கும் இடத்திலும் அட்டகாசம். நன்றாக வேலை வாங்கியிருக்கிறார் கௌதம் மேனன். பாத்திரமறிந்து நடித்திருக்கிறார் சிம்பு. சிம்புவை பார்க்காமல் கார்த்திகை பார்ப்பது மிகப் பெரிய ப்ளச். ஜெஸ்ஸியாய் த்ரிஷா.. இவ்வளவு அழகா த்ரிஷாவை பார்த்தில்லை. கண்களுக்கு நிறைவாய் பாந்தமாய் ஜொலிக்கிறார். அழகோ அழகு. நடிப்பிலும் குறையில்லாமல் பாத்திரமறிந்து நடித்திருக்கிறார். குறிப்பாய் சொல்ல வேண்டிய நபர், கணேஷ். இவர் படத்தின் தயாரிப்பாளராம். சீரியஸான முகத்தில் பேசினாலும் அவரின் டயலாக் டெலிவரி கிச்சுகிச்சு மூட்டுகிறது. காமெடிக்கான விஷயத்தை அவர் வரும் காட்சிகள் நிறைவு செய்கிறது. இரண்டு காட்சியில் வந்தாலும் கலக்கும் கே.எஸ்.ரவிக்குமார். 

கேமரா: மனோஜ் கையாண்டிருக்கிறார். கேரளா காட்சிகளும், மால்டா மற்றும் நியூயார்க் காட்சிகளும் அழகழகாய் படமாக்கியிருக்கிறார். உறுத்தாத வண்ணங்கள் காதலுக்கே உரிய நீலம் படம் முழுக்க அழகாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. சபாஷ். திரையில் சிம்புவும் த்ரிஷாவும் அவ்வளவு அழகாய் தெரிகிறார்கள். Made for each other மாதிரி.
அப்புறமாய் ஆர்ட்.. பாடல்கள். நிறைவாய் செய்திருக்கிறார்கள். படத்தின் ஒலிப்பதிவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். காதைப்பொத்திக் கொள்ளும்படி நாராசமாய் சத்தங்கள் இல்லாததற்கு.

எழுத்தும் இயக்கமும்: கௌதம் வாசுதேவ் மேனன். வாரணம் ஆயிரம் மாதிரி இப்படமும் வர்ணனையாக வருவது தான். ஆயினும் சிக்கல் இல்லாமல் பொறுமையாய் சம்பவங்கள் கையாளப்பட்டிருக்கிறது. காதல் பிறப்பதை சொல்வதிலும் அடுத்தடுத்த சிக்கலை சொல்வதிலும் அவசரமே இல்லாமல் பொறுமையாய் சொல்லும் திரைக்கதை. அதனால் சில இடங்களில் நம் பொறுமை சோதிப்பது போல் தோன்றினாலும் தோன்றலாம். ஆனால் ஆரம்பத்திலிருந்தே படத்தில் ஒன்றிவிட்டதால் எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. தேவைக்கேற்ப தான் விஷயங்கள் இருக்கிறது. ஒவ்வொரு பாத்திர குணாதிசயங்களும் விரிவடைய நம்முன்னே எல்லாம் நடப்பது போல் அழகாய் இருக்கிறது. கார்த்திக்கின் தீவிர காதலும் ஜெஸ்ஸியின் காதலுக்கும் பெற்றோருக்கும் இடையியேயான மனக்குழப்பமும் தெளிவாய் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திரைக்கதையில் ஆங்காங்கே தன்னைத் தானே கேலி செய்திருப்பது அழகான உத்தி. குறிப்பாக, சிம்பு உதவி இயக்குநராய் சேர “கௌதம்” பேரை சொல்ல.. ‘இந்த மூணு மணிநேரத்தில இரண்டு மணி நேரம் இங்கிலீஷ்லேயே படம் இருக்குமேப்பா’, ‘அவர் ஒரு படமே ரெண்டு வருஷம் எடுப்பாரே..’.. கிச்சுகிச்சு. மேலும் அவரின் பழைய படமும் வசனத்தில் வருகிறது..”அவனவன் பொண்ணத் தேடி அமெரிக்காவுக்கே போறான். நான் கேரளாவுக்கு போக மாட்டேனா என்ன?”
நம்மை படத்தில் கட்டிப் போடும் இன்னொரு விஷயம் வசனம். சுருக்கமான அழகான வசனங்கள்…

முதலில் சொன்ன..
“எவ்வளவோ பொண்ணுங்க இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்?”

அப்புறம் கார்த்திக்-ஜெஸ்ஸி இடையேயான வசனம்..
“நீ அழகா இருக்கே. நிறைய பசங்க உன்னை சுத்தி வந்திருப்பாங்களே.. சுமாரான ஃபிகருங்களுக்கே தலைகீழா நிக்கறாங்க.. உன்னை..”
“ஒருவேளை அவங்க உன் கண்ணால என்னைப் பாக்கலியோ என்னவோ”… முடிஞ்சே போச்சு…. கௌதம் டச்… 

வழக்கமாய் நாயகன் பேசும் வசனம்..இங்கே ஜெஸ்ஸி வாயிலிருந்து..

“நீ எங்க போனாலும் உன்னைத் தேடி வருவேன்..”
இறுதியாய் உண்மைக்கும் சினிமாக்கும் உள்ள வித்தியாசம் சினிமாவிலேயே காண்பித்திருப்பது சிறப்பு. ஆனால் இது எத்தனை பேருக்குப் புரியும் என்று தெரியவில்லை.

முக்கியமான ஒரு விஷயம்.. உடைகள். த்ரிஷா தேவதை மாதிரி தெரிகிறார். ஆர்ப்பாட்டமில்லாத உடையமைப்புகள். குறிப்பாய் கார்த்திக் முதலில் பார்க்கும் போது வரும் நீல நிற புடவையாகட்டும், கேரளாவில் பட்டுடையில் இரவில் கார்த்திக்குடன் பேசும் போதாகட்டும்… அமெரிக்காவில் கல்யாணக் காட்சியில் வரும் பட்டுப்புடவையாகட்டும். உண்மையிலேயே விண்ணிலிருந்து வந்திறங்கிய தேவதை மாதிரி… அவ்ளோ அழகு.

இறுதியாக… ஆரம்பம் முதலே படத்தில் மூழ்கிவிட்டேன். இறுதிவரை அவ்வளவு ரசிச்சுப் பார்த்தேன். விண்ணைத் தேடி ஒரு தேவதை இந்த மதிக்காக கண்டிப்பாய் வருவாள் என்ற நம்பிக்கை உள்ளது… 

என்னவள்… விண்ணைத் தேடி வருவாளா??

உருகும்…!!
மதி

Thursday, February 25, 2010

பிறந்தநாள் வாழ்த்துகள் சகோதரா...!!!

இதோ... இன்னும் சற்று நேரத்துல 12 மணியாகப் போகுது. என் இனிய சகோதரன் பாலக்குமாரின் பிறந்தநாள்.. ம்ம்.. 26 வயதாகப்போகுது. இப்போவே சொல்லிக்கறேன்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சகோதரனே...!!!!

நானும் பாலாவும்... எங்க உறவை எப்படி சொல்றதுன்னே தெரியல. இரு வருடம் தான் வித்தியாசம் என்றாலும் சின்ன வயசிலிருந்தே அந்த அளவுக்கு சேர்ந்து விளையாடியதில்லை. இன்னமும் பசுமையாய் நினைவிருக்கும் சம்பவம். அப்போ நிறைய போட்டி பொறாமை. அப்படி ஒருமுறை திருவாரூரில் குடியிருந்த சமயம் சின்னதாய் சண்டையிட்டு படுத்திருந்த என்மேல் ஏறிவிட்டான். சண்டைப்போட்டுக் கொண்டே அவனைத் தள்ளிவிட சரியாய் கதவின் விளிம்பில் அவன் தலை மோதி ரத்தம் கொட்ட.. வீட்டில் ஒரே அமளி. அவசர அவசரமாய் டாக்டர் வீட்டுக்கு கொண்டு செல்ல எனக்கு அழுகை அழுகையாய் வந்தது. அதற்கப்புறம் நினைவில் இருக்கும் படி சொல்லிக்கொள்ள பெரிதாய் எந்த சம்பவமும் நினைவில் இல்லை. நான் என் நண்பர் பட்டாளங்களுடன் சுற்றுவேன். அவன் தன் நண்பர்களுடன்.

கல்லூரியில் சேர்ந்த பிறகு தான் எங்கள் உறவு பலப்பட ஆரம்பித்தது. முதலில் அவனுக்கு மொபைல் வாங்கித் தந்ததிலிருந்து. அப்போது முதல் முறையாக பெங்களூருக்கு வந்திருந்தான். நான் வேலைக்குச் சேர்ந்து கொஞ்ச நாள் ஆகியிருந்தது. தம்பி வருகிறான் என்றதும் தலைகால் புரியவில்லை. அண்ணனா நல்ல புள்ளையா மொபைல் அதுவும் கலர் டிஸ்ப்ளே வைத்தது, வாங்கித் தந்தேன். அப்போது ஆரம்பித்தது எங்கள் நட்பு..ஹிஹி. பல காரியங்களை என் மூலம் சாதிக்க ஆரம்பித்தான். படிக்கும் போதே யுனிகார்ன் வாங்கியதிலிருந்து வேலைக்கு சேர்ந்தபிறகும் லேப்டாப் வாங்கியது வரை. அவ்ளோ நல்ல அண்ணனா என்னைக் காட்டிக் கொள்ள வைத்தான். பிறகு ரெண்டு பேரும் சேர்ந்து கூத்தடிக்க ஆரம்பித்தோம். எனக்குத் தேவையானதை அவனும் அவனுக்குத் தேவையானதை நானும் வாங்கித் தர ஆரம்பித்தோம்.



என் பணத்தில எனக்காக விலையுயர்ந்த பொருள் வாங்கினா என்ன சுயநலக்காரன்னு ஊர் திட்டும். அதே பொருளை தம்பிக்கு வாங்கித் தந்தா என்ன ஒரு ஒற்றுமையான அண்ணன் தம்பின்னு பாராட்டும்.

எவ்ளோ சிம்பிள் லாஜிக்.. நீங்களும் கடைபிடிச்சுப் பாருங்க.
 மறுபடியும்...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பாலக்குமாரா...!!!

Wednesday, February 24, 2010

மதிய உலா


முன்குறிப்பு: நான் செம மொக்கையான ஆளுங்க. (தீராத விளையாட்டுப் பிள்ளையில் புரட்சித் தளபதி சொல்ற மாதிரி கற்பனை பண்ணிக்கோங்க..ஹிஹி) அப்படி தான் நிறைய பேருக்குத் தெரியும். கதையாவும் கட்டுரையாவும் இல்லாமல் ஒருவிதமான நடையில் செய்த முதல் முயற்சி. எதிர்பாராமல் இதில் உள்ள கரு பல விவாதங்களுக்கு வழிவிட்டது. மிகப்பெரிய சந்தோஷமே வயதுவித்தியாசமில்லாமல் பல விமர்சனங்களை தந்தது. (நல்லாருக்கு.. என்ன கண்றாவிடா..இது..) இப்படி பல. முக்கியமான விஷயம்... இதைப்படித்து பலர் என் வயது 45க்கும் மேல் என்று நினைத்தது தான்.. :(. மேலும் என்னுடன் வேலைப்பார்க்கும் நண்பனின் தாய் இதைப்படித்து எனக்கு போன் செய்து..இந்தகால பசங்கல்லாம் வெட்டியா ஊர் சுத்தறவங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன்.. ஆனா நீ இப்படியெல்லாம் கூட எழுதுவியானு பாராட்டிட்டாங்க.. இன்னமும் அவங்கள பாதிச்ச விஷயம் என்னன்னு தேடிக்கிட்டு இருக்கேன். எனக்குத் தெரியல.. உங்களுக்காவது தெரியுதான்னு சொல்லுங்க...

ஏனோ சுரீரென்று கோபம் தலைக்கேறியது. ஞாயிற்றுக்கிழமை காலை உணவருந்தி உடல்நிலை சற்று சரியில்லாதது போல தோன்றியதால்(?!) விஜய் டி.வியில் தமிழாக்கப்பட்ட ஆங்கிலப்படம் பார்த்துக் கொண்டே தூங்கியவன் மேல் திடீரென்று ஏதோ சுமை உடல் மீது இறங்குவதாய் தோன்றியது. தலை பாரமாய் இருந்த போது கண்ணை பாதி விழித்துப் பார்க்கையில் நண்பன் ஒரு மார்க்கமாய் என்மீது சாய்ந்து உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான். உடலுக்குள் ஏதேதோ மாற்றங்கள். எங்கே வலிக்கிறது என்றே தெரியவில்லை. அவன் உட்கார்ந்த போது முதுகில் ஏதோ கடமுடவென்று சத்தம். அடிவயிற்றில் கடுமையான வலி. ‘என்னாயிற்று எனக்கு? மறுபடியும் ஏதேனும் பிரச்சனையா? உடம்பு தான் சரியில்லை என்று தெரியுமே, அப்புறம் ஏன் இப்படி மடார்னு உட்கார்ந்தான். கொஞ்சம் கூட விவஸ்தையே கிடையாதா?’

மறுபடி தூங்க முயற்சி. முடியவில்லை. எழுந்து போய் மடமடவென்று தண்ணீர் குடித்ததும் சற்று வயிற்றுவலி குறைந்தாற்போல் தோன்றிற்று. உடலில் ஏதேதோ உணர்வுகள். வலிக்கிறதா? இல்லை எங்கோ ஏதோ குடைவது போலுள்ளதே.. என்ன தான் ஆயிற்று எனக்கு? இன்னும் நண்பன் மேல் கோவம் தீரவில்லை. அறைக்குள் சென்று படுக்க முயற்சிக்கையில்.. ம்ஹும். வலியுடன் சேர்ந்து கோவமும் தலைக்கேறியிருந்ததால் தூக்கம் சுத்தமாக வரவில்லை.

வேகவேகமாக எழுந்து முகம் கழுவி பேண்ட் போட்டு கிளம்பியாயிற்று. எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தும் யாரிடமும் பேசவில்லை. மொபைல் போன் கூட எடுத்துக் கொள்ளவில்லை. பர்ஸை மட்டும் எடுத்து செருப்பை மாட்டி கொண்டி வெளிநடப்பு செய்தாகியது. ‘எங்கே போவது? தெரியவில்லை. எங்கேயாவது போகணும். வீட்டுக்கு வெளியில் வந்தால் வெயில் சுரீரென்று உறைந்தது. இதில் இந்த வெயிலில் போய் தான் ஆக வேண்டுமா? எவ்வளவு தூரம் தான் நடப்பது?’

‘எங்கேயாவது போகணும், நடந்து போகணும், இங்கிருந்து போகணும்.அவ்வளவு தான்’ மனம் பலவாறு அசைபோட ஊற்றாய் கோபம் கொப்பளிக்க கால் பயணப்பட ஆரம்பித்தாயிற்று. மெதுவாக, மிக மெதுவாக. அப்படி ஒன்றும் எங்கேயும் போய் வெட்டி முறிக்கிற காரியம் ஏதுமில்லை. தளர்ந்த நடையுடன் மாருதிநகர் மெயின் ரோட்டில் நடைபயணம் ஆரம்பமாகியது. மணி மதியம் இரண்டரை. வழியில் ஜூஸ் கடை. ‘குடிப்போமா? மதியம் தான் இன்னும் சாப்பிடலையே! சரி. ஜூஸ் குடிக்கவாவது பணம் இருக்கிறதா?’ துலாவிப்பார்த்ததில் சட்டைப்பையில் நாற்பது ரூபாய் இருந்தது. பர்ஸில் சுத்தமாய் பணமில்லை. கடையில் நுழைகையில் மனம் கதறியது ‘அவசியமாய் இப்போது குடித்து தான் ஆகணுமா?’. மனம் மாறியது. ‘பணம் இல்லை. போய் ஏ.டி.எம் மில் பணம் எடுத்து வந்தால் என்ன?’ நல்ல யோசனை. அதே வழியில் நடக்க ஆரம்பித்தாயிற்று. ‘முதலில் ஏ.டி.எம் போய் பணமெடுத்து வந்து பெட்ரோல் பங்க் எதிரில் இருக்கும் பூங்காவில் போய் உட்கார்ந்திருக்கலாம்’.

அங்கிருந்த முக்கிய சர்க்கிள் தாண்டி வலப்பக்கம் திரும்பி நடக்க ‘அட, மனுசன் திரும்புவதற்குள் ஏன் தான் வண்டியை இடிக்கற மாதிரி ஓட்டுறாங்களோ?’ உரசினாற் போல் சென்ற மெட்டடார் வேனை திட்டியது மனது. அதற்குள்.. அட இது என்ன, இப்போ தான் குளித்து முடித்து பளிச்சென்று புன்னகையுடன் வருகிற பெண். மொபைலில் யாருடனோ சிரித்து பேசிக்கொண்டே என்னைக் கடந்தாள். ‘ஆஹா. என்ன பர்ப்ஃயூம் யூஸ் பண்ணுகிறாள். ரொம்ப நல்லாருக்கே’. தெரு முனைதாண்டி இடது பக்கம் திரும்பி நடை தொடர்ந்தது. ‘இது என்ன வீட்டின் முன் நின்று கும்மாளம் அடிக்கின்றனர். ஏதோ விசேஷமாயிருக்கும்’. வாசலில் தோரணம் கட்டியிருத்த வீட்டினை கடந்து பூங்கா பக்கம் கால்கள் திரும்பியது. ‘உள்ளே போய் உட்காராமல் இவன் ஏன் வெளியே உட்கார்ந்திருக்கிறான். இவனுக்கு என்ன சோகமோ?’. காதலில் தோல்வியுற்றவனாய் தெரியவில்லை. ‘ஒருவேளை என்னை மாதிரி காதலியே கிடைக்காதவனோ.. அப்போ இத்தனை சோகம் இருப்பதில் தப்பில்லை’. பூங்கா வாசலில் நாலு பெரியவர்கள் உட்கார்ந்திருந்தனர். வாசல் பூட்டியிருந்தது. கன்னடம் படிக்கத் தெரியாது. ஆனாலும் அங்கிருந்த தட்டியில் எழுதியிருந்ததை பார்க்கையில் நாலு மணிக்கு தான் திறக்கப்படும் என்று புரிந்தது. ‘சரி. போய் பணமாவது எடுத்து வரலாம்.’

எப்பவுமே பரபரப்பாக இருக்கும் சிக்னலையும் கடந்தாயிற்று. ‘ஆமாம் ஞாயிற்றுக்கிழமை அதுவும், மக்கள் கூட்டம் கூட்டமாய் எங்கே தான் போகிறார்கள்.’ ஆங்காங்கே தென்பட்ட ஜீன்ஸ் அணிந்த மகளிர் கூட்டத்தை பார்த்து மனம் அசைபோட்டது. ரெஸ்டாரண்ட் தாண்டியதும் ‘அட வழக்கம் போல் கொய்யா வியாபாரி இருக்கிறானே’. வயிறும் சற்று பசியால் துடிக்க ஆரம்பித்திருந்தது. அவனிடம் சென்று ஒரு கொய்யா (அநியாய விலை) வாங்கி நடக்க ஆரம்பிதாகிவிட்டது. ‘அடுத்து எங்கு செல்வது? நேராக ஏ.டி.எம் போகலாமா? இல்லை. வேறு எங்கேனும்’ வெட்டிய கொய்யா துண்டினை சுவைத்தபடி மறுபடி சிந்தனை. ‘எங்கியாவது போகலாம்’. வலப்புறம் திரும்பாமல் நேராக கால் நடந்தது.

எதிரில் ஒரு ஜோடி. நன்றாக இருந்தனர்.. உச்சி வெயில் மண்டையை பிளப்பதைக் கூட கவனியாமல்..சரி..சரி.. ‘இதென்ன இவர்கள் நண்பர்களா.. காதலர்களா.. இல்லை தம்பதியா?’. பையன் நல்ல உயரம். கருப்பாய் இருந்தான். பெண் மாநிறமாயிருந்தாலும் ஏக லட்சணமாய் இருந்தாள். அவனுடன் பேசுகையில் கண்ணில் வெட்கம் முகத்தில் ததும்பி வழிந்தது. ‘காதலுக்கும் கலருக்கும் சம்பந்தமே இல்லை தான். அப்போ எனக்கு மட்டும் என்ன பிரச்சினை’ பேசிக்கொண்டே அவர்கள் கடக்கையில் தமிழர் என்று புரிந்தது. ‘இந்நேரம் எங்கே போகிறார்கள். சாப்பிட இருக்கலாம்’. மற்றுமொரு கொய்யா துண்டை வாய்க்கு கை கொண்டு போனது. ‘இதென்ன கொய்யா பழமாவும் இல்லாமல் காயாகவும் இல்லாமல்’. சுற்றி நடக்கும் மக்கள் வேகமாக மிக வேகமாய் இயங்குவதாய் தோன்றிற்று. ‘எனக்கென்ன வேலை. கோபப்பட்டு வீட்டை விட்டு வந்தவன் தானே’ பொறுமையாய் கொய்யாவின் ஒவ்வொரு விதையாய் நாவில் துழாவி பற்களுக்கிடையில் கொடுத்து கடிப்பதில் சுகமாய் இருந்தது. கால்கள் நடந்தாலும் கண்கள் பாதையைப் பார்த்தாலும் மனம் கொய்யாவின் விதைகளில் இருந்தது. ‘அட.. கொய்யாவின் விதை இப்படியா சுவைக்கும். இதுவரை தனியே பிரித்து கடித்ததில்லையே.’ பொறுமையாக அந்தத் துண்டு கொய்யாவை முடித்திருக்கையில் நின்றிருந்த ஒரு பேருந்து அருகே வந்திருந்தேன்.

பக்கத்தில் ஒரு மைதானம். கூட்டமாய் விளையாடிக் கொண்டிருந்தனர். பேருந்தினுள் பார்த்தேன். அது தான் கிளம்பும் இடம் போலும். கிளம்பும் நேரமாகாததால் யாருமில்லை. நடத்துனர் மட்டும் தனியே உட்கார்ந்திருந்தார். பலத்த சிந்தனை போலும். சரி. திரும்பலாம் என்று எண்ணிய மனம் கால்களுக்கு கட்டளையிட்டது. சோர்வைடைய ஆரம்பித்திருந்த கால் திரும்ப எத்தனிக்க கண்கள் வழி நோக்கி அருகில் வாகனம் வந்து கொண்டிருப்பதை தெரிவிக்க கால்களை துரிதப்படுத்த மூளை கட்டளையிட சாலையை கடந்தாயிற்று. ‘வந்த வழி வேண்டாம். வேறு வழி போகலாம்.’ அடுத்த தெருவின் வழியாக பயணம். இதற்குள் கொய்யா முழுவதுமாய் முடிந்திருந்தது. இடப்பக்கத்தில் குப்பைக்கூளம் குவிந்திருந்தது. துர்நாற்றம். பக்கதிலேயே பத்தடி தூரத்தில் குடிசைகள். ‘இதிலேயும் மக்கள் வாழ்கிறார்களே. எனக்கு நிற்கவே முடியவில்லை. வயிற்றை புரட்டுகிறது. அட ஆமாம். வயிறு வலித்ததே. என்னாயிற்று?’. வயிற்று வலி சுத்தமாய் நின்றிருந்தது. ‘ஆமாம். முதுகும் இடுப்பும் வலிப்பது போலிருந்ததே’. கெண்டைக்காலில் நரம்பு இழுத்தது. காலில் குடைச்சலாய் இருந்தது. ‘ஓ..சரி. நமக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது. மேலும் போவோம்.’

சின்ன தெரு அது. தெருவையே அடைத்து கார்கள் நின்றிருந்தது. ‘என்னமாய் வீடு கட்டுகிறார்கள். அழகழகாய், விதவிதமான வண்ணங்களில், வடிவமைப்பில். நாமும் கார் வாங்கணும். இப்போதைக்கு முடியுமா? இல்லை. வாங்கினால் சோற்றுக்கு லாட்டரி தான்.’

கால்கள் உடலைத் தாங்கி மெயின் ரோட்டை அடைந்திருந்தது. எதிரில் தனியார் வங்கி. அதனருகில் இளநீர் கடை. ‘அங்கே பார். ஒரு பெண் இளநீர் கொண்டு ரோட்டைக் கடக்கிறாள். கல்யாணமாயிற்று போலும். எவ்வளவு அழகாய் உயரமாய் லட்சணமாய் இருக்கிறாள். அவள் கட்டிருக்கும் புடவை பாந்தமாய் இருக்கிறதே’. மனமும் உடலும் அவளைக் கடந்தது. ‘எல்லாக் கடைகளிலும் இப்படி தானா? ஒரே கூட்டமாய் இருக்கிறது. அதிலும் எக்கச்சக்கமாய் பெண்கள். ஒன்று மட்டும் நிச்சயமாய் தெரிகிறது. பெண்கள் இருவராய் எங்கேயும் போவதில்லை. ஒன்று ஆண் துணையுடன் போகின்றனர். இல்லை மூன்று பெண்களாய் போகின்றனர்.’ மனம் வேகமாய் முடிவுக்கு வந்தது.

கடைகள் தாண்டி பழைய வீடு ஒன்று வந்தது. புதுப்பித்துக் கொண்டிருந்தனர். ‘ஞாயிற்றுக்கிழமை கூடவா வேலை செய்யணும். இவங்க இவ்ளோ கஷ்டப்படுறாங்க. நாம சொகுசா பிடிச்சா தான் வேலை செய்வோம். வருமானம் சரியில்ல. அது இதுன்னு சொல்லியே காலத்த ஓட்டுறோமே?’

வந்தாயிற்று ஏடிஎம். முன்னே இரண்டு பெண்கள். உள்ளே ஒருவன் பணம் எடுத்துக் கொண்டிருந்தான். பெண்கள் இருவரும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தனர். ஆண் வெளியே வர ஒரு பெண் உள்ளே சென்றாள். சற்று பருமனானாலும் ஸ்கர்ட் அணிந்திருந்தாள். பார்வையை திருப்பி ரோட்டில் வாகனங்களை பார்த்திருந்தேன். ‘நேரமாயிற்று இந்த பெண் வந்த மாதிரி தெரியவில்லையே.’ பார்வையை உள் நோக்க ஏடிஎம் ஸ்லிப் எடுத்து கிழித்து கீழே போட்டாள். பார்வை கீழே சென்றது. ‘இதென்ன இந்த பெண் கால்கள் இவ்வளவு வெள்ளை நிறமாய்.. அங்கே பார் அவள் தோலினூடே செல்லும் பச்சை நரம்பு கூட தெரிகிறதே. அடேய்..இப்படி பார்ப்பது தப்புடா’. மனக்குரங்கு நல்லபிள்ளையாய் கட்டளையிட சட்டென்று பார்வை வேறுபக்கம் திரும்பியது.

அவள் வெளியே வந்து நான் உள் சென்று சென்று பணம் எடுத்தாயிற்று. ‘அடுத்து என்ன பண்ணலாம். வீட்டை விட்டு வந்து முக்கால் மணிநேரத்திற்கும் மேலிருக்கும். வீட்டிற்கு போகலாமா? இல்லை பார்க்கில் போய் உட்காரலாமா?’

‘தேடிகிட்டு இருக்க போறாங்க. ஒன்னும் சொல்லாம வந்துட்டோம். வீட்டுக்குப் போகலாம்’. வழியில் அந்த இளநீர் கடையில் நின்று தண்ணியாய் வாங்கி இளநீரை குடித்தேன். அவ்வளவாய் சுவைக்கவில்லை. ‘வீட்டுக்குப் போகலாம். சீக்கிரம் போகணும். தேடிக்கிட்டு இருக்கப் போறாங்க. சாப்பாடு வேற ஆர்டர் பண்ணியிருந்தாங்க.’

கால்கள் துரிதகதியில் நடந்தது. மனம் கால்கள் மேலே இருந்தது. பத்தே நிமிடங்கள். இதோ வீட்டுக்கு மிக அருகில். மனம் அமைதியாய் எந்தவித சலனமுமில்லாமல். எப்படி? சற்றே தெளிவானது போல் தோன்றியது. ‘சீக்கிரம் போகணும். காத்துட்டு இருக்கப்போறாங்க. ஆமாம். நடக்க ஆரம்பித்து ஒரு மணிநேரத்துக்கு மேலிருக்கும். ஆனாலும் முதுகிலோ இடுப்பிலோ இப்போ வலியில்லையே. ஆனா அந்த டாக்டர் ரொம்ப நேரம் நடக்கக்கூடாது. நடந்தா பிரச்சனை அப்படி இப்படின்னு சொன்னார். நாமளும் இவ்ளோ நாளா நடக்காம இருந்துட்டோம். கால்ல கூட வலியில்லையே. இந்த டாக்டருங்களே இப்படித் தான். சரியாவே ஒன்னும் சொல்ல மாட்டேங்கறாங்க. காச மட்டும் வாங்கிக்கறாங்க ’

அபார்ட்மெண்ட் படிகளில் ஏறும் போது அதிக தூரம் நடக்கவே கூடாது என்று சொன்ன டாக்டர் மேல் கோபம் கோபமாய் வந்தது.

Monday, February 22, 2010

வணக்கம்

அன்புடையீர்....

என்னடா.. திடீர்னு ப்ளாக் பக்கம் வந்துட்டானேன்னு பாக்காதீங்க. ரொம்ப நாளா மனத்தினுள் வெறுமை. ஏன்னே புரியாத குழப்பம். எதற்குன்னு தெரியாத தயக்கம். ஒன்னு மட்டும் தெளிவா புரிஞ்சது. ஏதோ பித்துப் பிடித்தாற் போல் ஆகிவிட்டேனென்று. சர்தான்.. இதுவும் கடந்து போகட்டும்னு ஆரம்பிச்சது தான் இந்த ப்ளாக். இவண் மதி.

இதற்கென்று தனியான பெயர்க் காரணம்னு ஏதுமில்லை. எப்பவும் போல மனசுல சட்டென தோணின பேர் இது. எனது வழக்கமான பேரான "மொக்கை மதி"யிலிருந்து வேறுபட்டு இருக்கட்டுமேனு வச்சாச்சு. இதுல என்ன எழுதப் போறேன்.. வழக்கம் போல மொக்கையான கதையா, கவிதையா... என்னன்னு இன்னும் ஏதும் தெரியாது.. போற போக்கில மனசுல தோணினதெல்லாம் எழுதலாம்னு இருக்கேன். வழக்கம் போல எல்லோரும் படிப்பாங்கன்னு ஒரு சின்ன நம்பிக்கை தான்... தோ..பாருங்க... எங்க போனாலும் இந்த மொக்கைத் தனம் போக மாட்டேங்குது.. புரியுது.. புரியுது.. கட்டுப்படுத்திக்கறேன்..

சரி.. அப்பால சந்திப்போம்... வர்ட்டா...!!! :):):)


Blogger Templates by Isnaini Dot Com. Powered by Blogger and Supported by ArchiThings.Com - Modern Architecture Design