Tuesday, April 27, 2010

உன்னை தற்கொலை செய்யவா?! - பகுதி 2


புது டெல்லி. இன்னமும் விடியாத காலைப்பொழுது. குளிருக்கு இதமாய் ஸ்வெட்டர் போட்டுக் கொண்டு சாலையோரமாய் நடக்கும் மக்கள். எங்கும் அமைதியாக இருக்க சைரன் வைத்திருந்த வாகனங்கள் வெளிச்சதைக் கக்கியபடி சர் சர்ரென்று அந்த கட்டத்தின் முன்வாசலில் நின்றன. செக்யூரிட்டி கதவை திறந்துவிட அவர்கள் அடித்த சல்யூட்டை வாங்கிக் கொண்டே பைஜாமா குர்தாக்களில் இருந்த கேபினட் அமைச்சர்கள் இறங்கினர். வந்திறங்கிய இடம் நம்பர் 7, ரேஸ் கோர்ஸ் சாலை, டெல்லி. பிரதம மந்திரி இல்லம்.
அதிகாலையிலேயே தொலைப்பேசியில் தகவல் வந்ததை அடுத்து அனைவரும் ஏன் எதற்கென்று புரியாமல் வந்திருந்தனர். மெல்லியதாக கொட்டாவி விட்டபடி வேளாண்மை அமைச்சரும் ஜவுளித்துறை அமைச்சரும் பேசிக்கொண்டே உள்ளே நுழைந்தனர்.
“என்னய்யா.. காலங்கார்த்தால தூங்கக் கூட விடாம.. அப்படி என்ன தலை போற அவசரம்னு கூப்பிட்டு இருக்காங்க..” இது ஜவுளி.
“தெரியலேப்பா.. எவனாவது யாரையாவது சுட்டிருப்பான். அதுக்காக ஆலோசனைங்கற பேர்ல எல்லோரையும் கூப்பிட்டு இருப்பாங்க.. அவசரத்துல வீட்ல கூட சொல்லாம வந்துட்டேன்…” வேளாண்மை முணுமுணுக்க அனைவரும் வந்தவுடன் வீட்டின் கதவு சாத்தப்பட்டது. நீண்டு போடப்பட்டிருந்த மேஜையில் நடுநாயகமாய் உட்கார்ந்திருந்தார் இந்திய நாட்டின் பிரதம மந்திரி. வழக்கமாக மந்தகாசப்புன்னகையுடன் குழப்பம் நிறைந்திருந்த மந்திரிகளின் முகத்தைப்பார்த்துக் கொண்டே பேச்சை ஹிந்தியில் ஆரம்பித்தார்.
“அனைவருக்கும் வணக்கம். ஒரு முக்கிய விஷயமாக பேசுவதற்காக உங்க எல்லோரையும் கூப்பிட்டிருக்கோம். நாட்டின் பாதுகாப்பிற்கு ஒரு சின்ன பிரச்சனை ஏற்படலாம் என்று தெரிகிறது. இது எல்லாவற்றையும் பற்றி சொல்வதற்கு முன்னால இந்த கூட்டத்திற்கு சம்பந்தப்பட்ட தேசிய விஞ்ஞானக்குழு ஆலோசகர் திரு. சுந்தரராமனை அறிமுகப்படுத்துகிறேன். மேலும் விவரங்களை அவர் விவரிப்பார்.”
மூலையில் உட்கார்ந்திருந்த சுந்தரராமன் தொண்டையை கனைத்துக் கொண்டே எழுந்தார்.
“எல்லோருக்கும் காலை வணக்கம். நான் சுந்தரராமன். தேசிய விஞ்ஞானக்குழு ஆலோசகர். இஸ்ரோ இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்திராயன் – I ஐ நிலவுக்கு அனுப்பியது உங்கள் எல்லோருக்கும் தெரியும். சில தொழில்நுட்பப்பிரச்சனைகளால் எதிர்பார்த்திருந்த காலத்தைவிட முன்னதாகவே தொடர்பு அறுந்துவிட்டது.. இப்போ ஏற்பட்டிருக்கும் சில சூழ்நிலைகளால் நாம ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அடுத்த மிஷனை முன்னதாகவே அனுப்ப வேண்டிய கட்டாயம். அதைப் பற்றி தெரிவிக்கத் தான் இந்த கூட்டம்..”
அமைச்சர்கள் கூட்டம் அமைதியாக இருந்தது. இப்போது தலையை திருப்பி பிரதம மந்திரியை பார்த்தனர். அவர் இப்போது ஆரம்பித்தார்.
“உண்மை தான். சிலர் நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் நமது விஞ்ஞானிகளுக்கு கிடைத்த சில அரிய தகவல்களைக் கொண்டு இந்த முடிவு எடுத்திருக்கிறோம். இன்னும் இரண்டு மாதத்தில் இந்தியாவின் புது விண்கலம் சந்திரோதயன் நிலவை நோக்கி கிளம்பும் “
இன்னும் ஒன்னும் புரியாமல் எல்லோரும் விழித்திருக்க தகவல் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் பேச ஆரம்பித்தார்.
“அப்போ இது புதுத் திட்டம். எப்போ நிதி ஒதுக்கப்பட்டது. எப்போ விண்ணில் செலுத்தும் எண்ணம்? இதைப் பற்றி ஏன் யாருக்கும் சொல்லவில்லை?”
“போன வருடம் தேசிய பாதுகாப்பு குழுவில் எடுக்கப்பட்ட முடிவு. பொதுவில் விவாதிக்க முடியாத சில விஷயங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு ஜனாதிபதியிடமும் ஒப்புதல் வாங்கியாகிவிட்டது. நாட்டில் எல்லா இடத்திலேயும் ஓட்டை. இப்போ இங்கே பேசும் அத்தனை விஷயங்களும் இன்னும் பத்து நிமிஷத்தில் வெளியே இருக்கும் பத்திரிக்கையாளர்களிடம் போய்விடும். அந்த லட்சணத்தில் முக்கிய பாதுகாப்பு விஷயங்களுக்காக பரிட்சை செய்ய விரும்பவில்லை. இப்போ கூட பொதுவில் மக்களுக்கு அறிவிக்க வேண்டிய கட்டாயம் வந்துள்ளதால் தான் இந்த கூட்டமே.”
“ஏதோ பாதுகாப்பு பிரச்சனைனு சொன்னீங்க. என்ன அது?”
“நமக்கு வேண்டாத சிலர் தீவிரவாதிகளால் நம் விண் ஆராய்ச்சிக்கு முட்டுக்கட்டை போடப்போறதா தகவல். அவங்க யார்.. எங்கிருந்து வர்றாங்கன்னு இன்வெஸ்டிகேஷன் நடக்குது. உள்துறை அமைச்சரின் நேரடி மேற்பார்வையில். மேற்கொண்டு விவரங்களை இப்போ பேச முடியாது. அதே சமயம் நாம் எதிர்பார்த்ததுக்கு முன்னாடியே கிடைச்ச சில தகவல்கள். அதனால நிலவுக்கு விண்கலம் அனுப்பலாம்னு ஆராய்ச்சித் துறை சிக்னல் கொடுத்திருக்காங்க. இந்த தகவல்கள் போதுமா.. இல்லை இன்னும் ஏதாச்சும்..?”
எல்லோரும் மௌனித்திருக்க
“சரி.. இன்னும் சற்று நேரத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். வழக்கம் போல எதிர்கட்சியின் பிரச்சாரத்துக்கு பிரதம மந்திரி அலுவலகம் பதில் சொல்லும். நீங்கள் யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம். இத்துடன் கூட்டத்தை முடிச்சுக்கலாம்”
சொல்லிய பிரதமர் எழ இன்னமும் தூக்கம் கலையாமல் கொட்டாவி விட்டபடி ‘இந்த விஷயத்துக்காகவா தூக்கத்திலிருந்து எழுப்பி வரசொன்னாங்க’ன்னு முணுமுணுத்துக் கொண்டே அமைச்சர்கள் கிளம்பி சென்றனர். அடுத்ததாய் பிரதமர் சில முக்கிய பிரமுகர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். முடிவில் அவர் முகத்தில் தெளிவு பிறந்தது.
“சபாஷ்.. சுந்தரராமன், நீங்க சொல்ற மாதிரி மட்டும் நடந்துடுச்சுன்னா.. உலக அளவில இந்தியா முன்னணி நாடா வந்துடும். ஆனா இந்த பாதுகாப்பு விஷயம் மட்டும் உறுத்துது. அதைப் பத்தி சரியா தகவல் தெரிஞ்சதும் மேற்கொண்டி விவாதிக்கலாம். முப்படைத் தளபதிகளும் அப்போது நம்முடன் இருப்பார்கள்..”
புன்னகைத்துக் கொண்டே சுந்தரராமன் எழுந்தார்.
இரண்டு மணிநேரம் கழித்து அறிவிப்பு வெளியானவுடன் தலைநகரமே அமளிதுமளிப்பட்டது. எல்லா செய்திகளிலும் இதைப் பற்றியே பேச்சு.
பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் கொடுத்திருந்த பேட்டியில்,
“நாடே வறுமையில இருக்கு. கிட்டத்தட்ட 37 சதவித மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்காங்க. இதுல சந்திரனுக்கு விண்கலம் அனுப்பணும்னு இப்போ என்ன அவசரம். அதற்கு செலவிடப்படும் பணத்துல நாட்டு மக்களுக்கு பல நலத்திட்டங்கள செய்யலாம். கேட்க ஆளில்லாம ஆளும்கட்சி நாட்டின் கஜானாவை காலிப்பண்ணிக்கொண்டிருக்கிறது.”
இதைப்பற்றி பல செய்தி தொலைக்காட்சிகளிலும் விருந்தினர்கள் வரவழைக்கப்பட்டு விவாதங்கள் நடத்தப்பட்டது. நாட்டின் சராசரி குடிமக்களோ எதைப்பற்றியும் யோசிக்காமல் அடுத்த நாள் நடக்கும் ஐ.பி.எல் இறுதியில் சென்னை ஜெயிக்குமா தோற்குமா என கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர்.
அதே நாள்..
ஹைதராபாத் மாநகரத்தை எல்லையை தாண்டி சில பத்து கி.மீக்கு அப்பால் பெங்களூர் நெடுஞ்சாலையில் போனால் வலப்பக்கம் அந்த சாலை பிரியும். அதில் பயணித்து பதினைந்து கி.மீ சென்றால் “கெத்திரெட்டிப்பள்ளி” என்று தெலுகிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட பலகை உங்களை வரவேற்கும். எண்ணி ஊரில் இருநூறு வீடு இருந்தால் அதிகம். முக்கால்வாசி மக்கள் நெசவுத் தொழில் தான். அதனால் ஊரில் எங்கும் சாயமாக இருக்கும். ஆங்காங்கே தென்படும் டிஷ் ஆண்டெனாக்கள் நகரத்தோடு எந்தவிதத்திலும் தாங்கள் சளைத்தவரில்லை என பறைசாற்றியது.
சூரியன் மங்கும் மஞ்சள் வெளிச்சத்தில் ஊரே ஜொலிக்க அந்த கிராமத்தைக் கடந்த அம்பாசிடர் கார் பழங்கால கட்டிடமாய் இருந்த அந்த ரைஸ்மில்லின் முன் நின்றது. சரியான பராமரிப்பு இல்லாமல் ஆங்காங்கே காரை பெயர்ந்து இருந்தது.
காரிலிருந்து ஒரு ஐம்பது வயதுக்கும் மேல் மதிக்கத்தக்க அந்த மனிதர் இறங்கினார். பாதி நரைத்தும் நரைக்காமலும் இருந்த தலைமுடி, கண்ணில் வயதுக்கேற்ற கண்ணாடி, முழுக்கை சட்டை. நெற்றியில் எப்போதும் நிரந்தரமாய் கோடுகள். அவர்  இந்திய தேசிய விஞ்ஞானக்குழுத் தலைவர் நாராயணரெட்டி.
மில்லுக்குள் நுழைந்ததும் கவனமாய் கதவை சாத்தினார். அரவை இயந்திரங்களைத் தாண்டி… சுவரோரமாய் உமி குமிக்கும் இடத்துக்கு அருகில் சென்றார். கீழிருந்த பலகையை நகர்த்தி மெல்லியதாய் தெரிந்த கைப்பிடியைத் திருக கீழே படிக்கட்டுகள் தெரிந்தன. பொறுமையாய் அதனுள் இறங்கியதும் அந்த இடத்திற்கும் அதற்கும் சம்பந்தமில்லாத மாதிரி நவீன மயமாய் இருந்தது. வெளிச்ச ஒளிக்கற்றைகள் அறையெங்கும் பரவ நவீன ரக தடுப்புச்சுவர். நிற்க வேண்டிய இடத்தில் நின்றதும் கண்ணுக்குத் தெரியாத குறைந்த அழுத்த மின்காந்த அலைகள் அவருள் பரவி அவரின் அடையாளங்களையும் ரத்த அழுத்தத்தையும் சரிபார்த்து அவர் இன்னார் தான் என உறுதி செய்தவுடன் அந்தக் கதவு திறந்தது.
உள்ளே ஆங்காங்கே மேஜைகளும் அதன் மேல் வைக்கப்பட்டிருந்த பலவிதமான கருவிகளும் கம்ப்யூட்டர் சமாச்சாரங்களும் ஏதோ தீவிர சோதனை நடைபெறுவதற்கான அறிகுறிகளைக் காட்டியது. அந்த இடம் இந்திய அரசாங்கத்தால் ரகசியமானவர் பெயரில் சில ஆண்டுகளுக்கு முன் கையகப்படுத்தப்பட்டது. அந்த கிராமத்தில் இருக்கும் மக்கள் அரசாங்க உளவாளிகளும் பாதுகாப்பு வீரர்களும். பாதுகாப்பு வீரர்கள் ஆடு மேய்க்கும் இடையர் வேடத்தில் அந்நிய நபர்களின் நடமாட்டத்தை கவனித்து வருகிறார்கள். கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன் யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி அந்த கிராமம் உருவாக்கப்பட்டது. அதைப்பற்றிய குறிப்புகளும் அரசாங்க பதிவேட்டில் ஏற்றப்பட்டது. ஏதோ ஒரு முக்கிய சோதனைக்காக கிட்டத்தட்ட பத்து கி.மீ சதுரத்தில் உள்ள அனைத்து நடவடிக்கைகளும் காமிரா மூலம் கவனிக்கப்பட்டு வருகிறது யாருக்கும் தெரியாமல். ஊர் உலகிற்கு அது ஒரு வழக்கமான இந்திய கிராமம். அவ்வளவு தான்.
அவர் உள்ளே நுழைந்ததும் அவருக்காகவே காத்திருந்த மாதிரி மூவரும் நிமிர்ந்தனர். சோதனைக்கான கோட்டில் இருந்தவர்களில் நடுத்தர வயதுடைய நபர் தான் அந்த சோதனைக்கு சொந்தக்காரர். ராஜசேகரன். நாற்பதுகளில் இருக்கும் அவர் வேதியியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்ற கையோடு அரசாங்க வேலையில் சேர்ந்தார். அவரின் மூளையில் உருவான திட்டத்திற்கான சோதனை தான் அது. அவருக்கு உதவியாளர்களாக மிருதுளாவும் ப்ரணவும். மிருதுளா. இளம் வயது. அறிவியலில் ஆர்வம் அதிகம். ஐஐஎஸ்ஸியில் மேற்படிப்பை முடித்தவுடன் ராஜசேகரனால் கண்டுபிடிக்கப்பட்டவள். பேருக்கேற்ற மாதிரி மிருதுவான உருவம். கூர்மையான நாசி. சிரித்தால் தெரியும் தெற்றுப்பல். அலையலையாய் சுருண்டிருக்கும் நெடிய கூந்தல். கண்ணில் ஆர்வம் கொப்பளிக்க ரெட்டியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் பக்கத்தில் ப்ரணவ். அவள் காதலன். ஆறடி உயரம். சற்றே மாநிறம். சற்றே சுருட்டையாய் முடி. கச்சிதமாய் நறுக்கப்பட்ட மீசை. இரண்டு நாள் தாடி. காது மடல் வரை விடப்பட்ட கிருதா. அவளுடன் ஒன்றாய் படித்தவன். அவளுடன் சேர்ந்து ஆராய்ச்சி செய்ய ராஜசேகரனிடம் போராடி சேர்ந்தவன். சேர்ந்த நாள் முதல் கண்ணும் கருத்துமாய் வேலையில் ஈடுபட்டு நல்ல பேர் எடுத்தவன். கிடைக்கும் ஓய்வு நேரத்தில் மட்டும் மிருதுளாவுடன் காதல் புரிந்தான். அவனும் ரெட்டியையே பார்க்க அவர் வாயைத் திறந்தார். ஆங்கிலத்தில்..
“நண்பர்களே.. நாம் நினைத்தது நடந்துவிட்டது. இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுவிட்டார்கள். இன்னும் இரு மாதத்தில் சந்திரோதயன் புறப்பட போகுது. நமது சோதனையில் வெற்றியில் தான் இந்தத் திட்டமே உருவானது. கூடிய சீக்கிரமே நாம் இதைக் கொண்டாடக்கூடிய நாள் வரும். உங்க சோதனைகள் எல்லாம் எப்படி போய்க்கிட்டு இருக்கு?”
சந்தோஷத்தில் முகம் மலர்ந்திருந்த ராஜசேகர் ஆரம்பித்தார்.
“ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயம். சோதனைகள் எல்லாம் இதுவரை வெற்றிகரமாகத் தான் போய்க்கிட்டு இருக்கு. இதுவரை சக்ஸஸ் ரேட் நூறு சதவிகிதம். இன்னும் சில டெஸ்ட் தான் இருக்கு. அதையும் முடிச்சுட்டா போதும். ஜெயம் தான்…”
“கேட்கவே ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. எங்கே நமது ஆராய்ச்சியின் பலன்?”
ராஜசேகரன் காட்டிய திசையில் ஆர்வமாய் பார்த்தார். அங்கே பல சாதனைகள் புரிய போகும் அந்த இயந்திரம் ஏதும் அறியாத குழந்தை போல் அமைதியாய் அந்த மேஜையின் மேல் வீற்றிருந்தது.

Friday, April 23, 2010

வினை விதைத்தவன்...

மு.கு: சத்தியமா இதில் வரும் சம்பவங்கள் உண்மையே. மேலும் இதற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

கல்யாணம் ஆகாம இருந்தாலும் தான் இருக்கோம். எங்க பாத்தாலும் கல்யாணத்தை பத்தி மட்டும் பேசறதே காதுல விழறது. அடிக்கடி மாப்ளே கல்யாணம் நிச்சயமாயிடுச்சுடா.. மச்சான். குழந்தை பொறந்திருக்குடான்னு வரிசையா போன் வரும். நமக்கு தான் ஒன்னும் நடக்கல. அடுத்தவனுக்காவது நல்லது நடக்கட்டுமேன்னு போய் நல்லபடியா இருங்கன்னு வாழ்த்திட்டு வர்றது வழக்கம்.

இப்படி தான் அலுவலகத்துல சும்மா மொக்கை போட்டுட்டு இருந்த நேரம் பயலுவ ஒரு விஷயத்தை சொன்னாங்க. எங்க ஜீனியர் பையன் ஒருத்தன் கிட்டத்தட்ட ரெண்டு மூணு நாளா ஆள காணல. எங்கடா ஆளக்காணோமேன்னு விசாரிச்சா. பயபுள்ள பொண்ணு பார்க்க ஊருக்கு போயிருக்கான்னு சொன்னாங்க. அட்றா..அட்றா.. வந்தவுடனே ட்ரீட்டுக்கு ஆட்டைய போட்டுட வேண்டியது தான்னு கங்கணம் கட்டிக்கிட்டு காத்திருந்தோம்.

போன வாரம் ஊருக்கு போன பய முந்தாநேத்து தான் வந்தான். அன்னிக்கு அதிசயமா வேலை கொஞ்சம் அதிகமா இருந்ததால் பாத்து பேச முடியல. சரி.. அப்புறமா பேசிக்கலாம்னு பாத்தா ஆள் அஞ்சு மணிக்கெல்லாம் எஸ்ஸாயிட்டான். முகம் வேற சரியில்லை. சரி.. ஊருக்கு போய்ட்டு வந்த களைப்பு நாளைக்கு பாத்துக்கலாம்னு விட்டுட்டேன். ஆறு மணிவாக்கில் எல்லோரும் டீத்தண்ணீ குடிக்க காஃபிட்டேரியா போன போது 'என்னடா ஆச்சி.. ஆள் மூஞ்சியே சரியில்ல.. பொண்ணு புடிக்கலேன்னு சொல்லிடுச்சா என்ன' னு ஆரம்பிச்சேன்.

அப்போ பசங்க சொன்ன கதைய கேட்டு கொஞ்சம் அசந்துட்டேன். சரித்திரத்தை பன்னிரண்டு வருஷம் புரட்டிப்பார்த்தா அந்த புள்ளையாண்டான் ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்திருக்கான். இப்ப போல அப்பவும் வாலு. எவனையும் விடறதில்லை. பசங்க படத்துல வர்ற வில்லன் கேரக்டர் போல. சும்மா இல்லாம ஒரு நாள் கூட படிக்கற பையன் குடுமிய புடிச்சு இழுத்து வம்பிழுத்திருக்கான். அந்த பையன் அழ பெரிய கலாட்டாவாயிடுச்சு. அதுக்கப்புறம் அந்தப்பையனும் இவனும் பேசிக்கறதில்லை. வீட்டிலே இவனுக்கு செம அடி.. திட்டு. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா எப்படியோ படிச்சி ஒருவழியா கரை சேர்ந்து எங்க கம்பெனியில சேர்ந்துட்டான். இப்போ அப்படியே நேர் மாறா இருப்பான். அவ்ளோ சாது.

அப்படியாப்பட்டவன் பொண்ணு பாக்க வாடான்னு வீட்ல கூப்பிட்டது ஆச ஆசையா போயிருக்கான். போனது சனிக்கிழமை காலை. அன்னிக்கு பொண்ணு பார்க்க கூடாது அடுத்த நாள் தான் பாக்கணும்னு சொல்லிட்டாங்க. அப்போனு பார்த்து பையன் ஜாதகத்தை பார்க்கலாம்னு ஒரு ஜோசியக்காரன்கிட்ட குடுத்திருக்காங்க. அந்த நல்லவன் ஜாதகத்தைப் பார்த்துட்டு இப்போ பொண்ணு பார்த்தா அமையாது. பையனுக்கும் நல்லதில்ல. இன்னும் நாலு மாசம் கழிச்சு தான் பொண்ணு பாக்கணும். அதனால கொஞ்சம் தள்ளிப் போடுங்கன்னு சொல்லிட்டாப்ல..

பயந்து போன இவன் அப்பா அம்மா பொண்ணு வீட்டு சொல்லி அனுப்பிட்டாங்க. 'இப்போதைக்கு நேரம் சரியில்ல. நாலு மாசம் கழிச்சு பாத்துக்கலாம். அதுக்குள்ள உங்களுக்கு வரன் அமைஞ்சா பாத்துக்குங்கன்னு'. அதான் பையன் மூட் அவுட். அவ்ளோ தூரம் போய் பொண்ண கண்ணுலேயே காட்டலேன்னு..

நண்பன் முடிக்க...

'ஓ. அதான் காரணமா.. ஆமா இதுக்கும் அந்த பன்னிரண்டு வருஷ ப்ளாஷ்பேக்குக்கும் என்ன சம்பந்தம்?'

'இருக்கே... அன்னிக்கு இவன் குடுமிய புடிச்சு வம்பிழுத்த அந்த பையன் தான் இப்போ இவனுக்கு ஜோசியம் பாத்த ஜோசியக்காரர்.. பயபுள்ள சரியான நேரம் பார்த்து கால வாரிவிட்டுட்டான்... ஹாஹா..'

அடங்கொப்புறானே.....

நீதி: வினை விதைத்தவன்... எப்போதும் யார்கிட்டேயும் தேவையில்லாம வம்பிழுக்க வேணாம். விதியும் வினையும் எப்போ வேணும்னாலும் சுத்தி சுத்தி அடிக்கும்.

Sunday, April 18, 2010

உன்னை தற்கொலை செய்யவா?! - பகுதி 1

வழக்கம் போல மு.கு: நீண்ட நாள் கழித்து எழுதுகிறேன். எழுதவே வரவில்லை. அதனால் கதையோட்டப்பிழைகளை பொறுத்தருளவும். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தவறாக பயன்படுத்தப்பட்ட வார்த்தை தான் தலைப்பாகியுள்ளது. தலைப்பை வைத்துவிட்டு கதையை தேடிக்கொண்டிருக்கிறேன்.


செப்டம்பர் மாத பெங்களூர் காலை. இரவு முழுவதும் பெய்த மழைக்கு சாட்சியாக சாலையெல்லாம் கழுவிவிட்டது போலிருந்தது. சாலையெங்கும் லாரி தடங்கள். மழை இன்னும் சரியாக விட்டபாடில்லை. சாறலாய் தூறிக் கொண்டிருந்தது. இதமானதொரு தென்றற்காற்று முகத்தை வருடி சொர்க்கம் இன்னும் இருக்கிறது என கங்கணம் கட்டியது. ஆசுவாசமாய் நடந்து செல்லும் வயதானவர்களும் தொப்பையைக் குறைக்க வேகவேகமாய் நடைபயிலும் இளம்வயது மென்பொருள் வல்லுநர்களும் சாலையெங்கும் நிறைந்திருக்க, மரங்களும் செடிகளும் நிறைந்த பச்சைப்பசேல் என்று கண்ணுக்கு குளிர்ச்சி காட்டிய அந்த பூங்கா வெளியே தன் பல்ஸர் பைக்கை நிறுத்திவிட்டு அவன் நுழைந்த போது காலை சரியாக மணி ஆறைத் தாண்டியிருந்தது.
அவன். மாதவன். இளநிலை பட்டதாரி. லட்சத்திற்கும் மேல் பணியாளர்களைக் கொண்ட அந்த மாபெரும் மென்பொருள் நிறுவனத்தில் என்னவோ செய்து குப்பை கொட்டுபவன். வயது இருபத்தியேழு. உயரம் ஐந்தடி பத்தங்குலம். சிறுவயதிலிருந்த உடற்பயிற்சி முறுக்கேறியிருந்த உடம்பு. களையான முகவெட்டு. யாருக்கும் அடங்க மாட்டேன் என்று அடம்பிடிக்கும் தலைமுடி அழகாய் சுருள் சுருளாய் அழகைக்கூட்டியது. வலது கண்ணோரத்தில் சின்னதாய் முகத்தில் வெட்டு பொருத்தமாயிருந்தது. ட்ராக் சூட்டில் இயற்கை காற்றில் முகம் மலர இருந்த அவன் பூங்கா உள்ளே நுழைந்தவுடன் வழக்கம் போல் நடை பயில ஆரம்பித்துவிட்டான். முடிக்க இன்னும் அரை மணிநேரமாவது ஆகும். அதுவரை….
அதே நேரத்தில் பூங்காவிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தள்ளியிருந்த அடுக்கு மாடி குடியிருப்பு. நகரத்தின் பரபரப்பான பகுதியிலிருந்து சற்றே ஒதுங்கியிருந்தது. குடியிருப்பின் அருகாமையிலேயே பெரிய ஏரி அழகுக்கு அழகு சேர்த்தது. ஏறக்குறைய நூறு வீடுகளுக்கும் மேலிருக்கும் அந்த குடியிருப்பில். பால் பாக்கெட் வாங்கவும் காய்கறி வாங்கவும் ஆண்களும் பெண்களும் நடமாட ஆரம்பித்திருந்தனர். வானம் இருட்டை தொலைத்து நீலத்தை அப்பத் தொடங்கியிருந்தது. பத்து மாடிகளைக் கொண்ட அந்த குடியிருப்பின் மூன்றாவது மாடியில் மூந்நூற்றிரண்டாம் இலக்க வீட்டின் உள்ளே சென்றால் விசாலமான அறை. வலது ஓரத்தில் தொலைக்காட்சிப் பெட்டி. இன்னும் சற்று உள்ளே சென்றால் வலப்பக்கம், இடப்பக்கம் என இரண்டு படுக்கை அறைகள். அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பி செல்லும் அந்தப் பெண்ணைக் கடந்து இடது படுக்கை அறைக்குள் சென்றால் முகத்தில் புன்னகையுடன் அவள் தூங்கிக் கொண்டிருந்த தோரணை அவள் கனவுலகில் சஞ்சாரம் செய்கிறாள் என பட்டவர்த்தனமாக காட்டியது. ‘போய்ட்டு வரேன் டீஈஈஈஈஈ..’ என தோழி கத்தியதில் கூட தூக்கம் கலையாமல் கனவு கண்டு கொண்டிருந்தாள். கடுப்பான தோழி வீட்டை வெளியே பூட்டிவிட்டு செல்ல அவள் கனவில் மாதவன். அவள் சரண்யா. ரம்மியமான தோற்றம். கடல் போல அலை அலையாய் தவழும் கருங்கூந்தல். லட்சணமான கலைபொருந்திய முகம். கனவில் மாதவன் செய்த சில்மிஷங்கள் அவள் முகத்தில் அப்பட்டமாய் வெட்கப்புன்னகையாய் தெரிந்தது. வயது இருப்பத்தியைந்து. எல்லோருக்கும் அடைக்கலம் தரும் பெங்களூர் அவளுக்கும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை தந்திருந்தது. இன்னும் கலையாத தூக்கத்துடன் காலைத் குறுக்காக போட்டு நைட்டியுடன் அவள் படுத்திருந்த தோரணை… அவ்வ்.. இதுக்கு மேல விவரம் வேண்டாம்.
‘என் இதயம் உடைத்தாய் நொறுங்கவே…’ செல்போன் செல்லமாய் சிணுங்கியது. அதற்கு  குறையாமல் சிணுங்கியபடி செல்போன் எடுத்த சரண்யா உற்சாகமானாள்.
“ஹாய் டா.. குர்மார்னிங்… என்ன நடுராத்திரியிலே போன் பண்ணிருக்க..?”
“என்னது.. நடுராத்தியா… சுத்தம் போ.. மணி இப்போ ஆறரையாகறது. இந்த லட்சணத்துல இருந்தா கல்யாணம் பண்ணி குடித்தனம் நடத்துன மாதிரி தான்.. தூக்கம் கூட கலையல போல…”
“ம்ம்.. இன்னும் முழிக்கவே இல்லே.. ச்சே.. செம கனவு… கெடுத்துட்ட…கனவுல…நீ..”
“கனவுல….நான்..?”
“ச்சீ.. வேண்டாம். சுத்த மோசம்பா நீ.”
“கனவை நீ கண்டுட்டு என்னைய திட்டுற. நல்ல கதையால இருக்கு.”
“ஆமாம்.. அப்படித் தான்.. என்ன பண்ணுவ..”
“இப்போவே அலுத்துக்கற.. உன்னைய தான் எங்கம்மா பையன இந்த பொண்ணு நல்லா வச்சு காப்பாத்தும்னு மலை போல நம்பறாங்க..”
“நான் என்ன பண்ண.. எனக்கென்ன வேற ஆளா கிடைக்காது. என் மகனுக்கு நீ தான் ஏத்த பொண்ணுன்னு உங்கம்மா கெஞ்சுனாங்க.. போனா போதுன்னு ஒத்துக்கிட்டேன்”
“அட..அட.. பொண்ணுக்கு உங்க பையன புடிச்சிருக்குனு உங்கப்பா எங்க வீட்டுக்கு நாலஞ்சு தடவ நடையா நடந்தது மறந்துடுச்சா… என்ன?”
“சரி..சரி.. இன்னும் எந்திரிக்க கூட இல்ல.. அதுக்குள்ள எதுக்கு சண்டை. வழக்கமா ஆபிஸ் போனதும் தானே கூப்பிடுவே.. கேட்டா இத தான் இப்போதைக்கு வேலைன்னு சொல்லுவ.. இன்னிக்கு என்ன ஸ்பெஷலா?”
“ம்ம்.. அத மறந்துட்டு பேசிட்டு இருக்கேன் பாரு. இன்னிக்கு என்ன நாள்…?”
“என்ன நாள்.. உன் பொறந்தநாளா? இல்லியே இன்னும் ரெண்டு மாசமிருக்கே… என்னப்பா.. டென்ஷன் பண்ணாம சொல்லு… ஏற்கனவே தூக்கம் கலைஞ்சு போச்சுன்னு இருக்கேன்.. யோசிக்கற நிலைமையிலேயே இல்ல…”
“ம்ம்.. என்னைவிட தூக்கம் முக்கியமாடுச்சா…?”
“நிஜத்தைவிட நீ கனவுல தான் செம ரொமாண்டிக்கா இருக்க… சரி.. சரி.. கோபப்படாதே.. இன்னிக்கு என்ன நாள்… கொஞ்சமா இருக்கற மூளைய யூஸ் பண்ண வைக்காம சொல்லேன்..”
“இன்னிக்கு நாம் பாத்துக்கிட்டு ஐம்பதாவது நாள்.. ஹேப்பி பிஃப்டியத் டே…”
“ஹா.. எல்லா நாளையும் கணக்கு வச்சுப்பியாப்பா.. ஐம்பது நாளாச்சா.. நேத்து தான் வந்து என்ன பொண்ணு பாத்த மாதிரி இருக்கு..”
“ஆமா.. அதே ஜாலி மூட்ல இன்னிக்கு லீவ் போட்டுடு. நான் நிஜத்துலேயும் எவ்ளோ ரொமாண்டிக்கான ஆள்னு காட்டறேன். ஆமா உன் கூட இரண்டு லூசுங்க தங்கியிருக்குமே.. அதெல்லாம் ஆபிஸுக்கு போயாச்சா…?”
“ஏய்.. என் ப்ரண்டுங்கள லூசுங்காத. பிச்சுப்புடுவேன். காமினி ஒரு வாரம் லீவ். ஊருக்கு போயிருக்கா. தனுஜா காலையிலேயே ஆபிஸுக்கு போயிட்டா. பை த வே நெனச்ச நேரத்துக்கெல்லாம் லீவ் போட இது உங்க ஆபிஸ் மாதிரி இல்லே.. ஒரு வாரத்துக்கு முன்னாடியே சொல்லியாகணும் சார். ஸோ.. இன்னிக்கு ப்ளான் கேன்ஸல் பண்ணிடுங்க”
“ஆஹா.. கனவு அது இதுன்னு சொல்லி கிளப்பிவிட்டுட்டு இப்போ என்ன வாபஸ் வாங்கற. அதெல்லாம் முடியாது. இன்னிக்கு நீ லீவ் போட்டேயாகணும். நிறைய ப்ளான்ஸ் வச்சிருக்கேன். ப்ளீஸ்பா எல்லாத்தையும் கெடுத்துடாத…”
“செம ரொமாண்டிக் மூட்ல தான் ஐயா இருக்கார் போல. சரி போ.. வழக்கம் போல வயித்துவலின்னு சொல்லி சமாளிச்சுக்கறேன். இப்போ இருக்கற மேனேஜர் சரியான சிடுமூஞ்சி. தானும் வாழாது அடுத்தவனையும் வாழவிடாது. டைவர்ஸ் கேஸ்.. சரி..விடு. எப்படியோ சமாளிச்சுக்கறேன். எத்தனை மணிக்கு வரே..?”
“இப்போ மணி ஆறு நாப்பது. ஒன்பது மணிக்கு வழக்கமா நீ ஏறுற பஸ்ஸ்டாப் பக்கத்துல நிக்கறேன். வந்துடு..”
“சரிப்பா.. வந்துடறேன். ஆனாலும் ரொம்ப தான் படுத்தற.. இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கறேன்.. அப்புறம் உங்கம்மாகிட்ட சமைக்கறது எப்படினு ட்ரெயினிங் எடுக்கறல்ல… பை”
“ஏய்…ஏய்ய்…”
மாதவன் குரலை உயர்த்தியதும் கொஞ்சலுடன் செல்போனை அணைத்துவிட்டு கொஞ்ச நேரம் தூங்கப்போனாள் சரண்யா. மறுமுனையில் முகத்தில் வழக்கமான மந்தகாசப் புன்னகையுடன் போனை வைத்த மாதவன் ‘என்றென்றும் புன்னகை’யை சீட்டியடித்தபடி தன் பல்ஸரை விரட்டினான்.
எட்டரை மணிக்கெல்லாம் குளித்து முடித்து கிளம்பிய மாதவன் கூட்டமாய் ஊர்ந்து கொண்டிருந்த பெங்களூர் போக்குவரத்து ஜோதியில் கலந்து மெதுமெதுவாய் முன்னேறினான். வண்டியோட்ட எரிச்சலாய் வந்தாலும் ஒரு நாள் முழுக்க சரண்யாவுடன் செலவிடபோவதை நினைத்து மனம் குதூகலித்துக் கொண்டிருந்தது. ஒருவாறாய் போராடி சரண்யாவிடம் சொன்னபடி பேருந்து நிறுத்தத்திற்கு வந்து நின்றான். மணி சரியா ஒன்பதை காட்டியது.
‘வந்துவிடுவாள். எப்போதும் அவள் பத்து நிமிஷம் லேட்.. ம்ம்’ காத்திருக்கலானான். பத்து நிமிஷம் நரகமாய் கழிந்தது. செல்போனை எடுத்து சரண்யாவின் நம்பருக்கு கால் பண்ணினான். அவனுக்காகவே ப்ரத்யேகமாக சரண்யா வைத்திருந்த காலர் ட்யூன் ஒலித்தது. ‘கண்ணுக்குள் கண்ணை வைத்து இல்லை இல்லை..என்றாயே..’ பொறுமையாய் கேட்டு முடிக்கும் வரை போன் எடுக்கப்படவில்லை. மறுமுறை மறுமுறை என்று மூன்று முறையானதும் வெறுத்துப் போனது. இறுதியாக முயற்சித்த போது ‘தாங்கள் தொடர்பு கொண்ட எண் தற்சமயம் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது’ என கன்னட நங்கை காதில் ஓதினாள்.
‘அவள் வீட்டுக்கே போக வேண்டியது தான்’ என முடிவு செய்தவனாய் வண்டியை கிளப்பி கோபத்தை ஆக்ஸிலேட்டரில் காட்டினான். சரண்யாவின் அபார்ட்மெண்ட்டை அடைந்தது வண்டியை நிறுத்திவிட்டு உள்நுழைந்த போது மக்கள் கூட்டமாய் நின்றிருந்தனர். ஆவல் உந்த உள்ளே நுழைந்து பார்த்தவன் அதிர்ந்தான். போட்டிருந்த நைட்டியுடன் குப்புற விழுந்து சுடசுட இரத்தம் கொப்பளிக்க சற்று முன் தான் சரண்யா இறந்திருந்தாள். பக்கத்தில் சுக்கு நூறாய் தெறித்தப்படி அவள் செல்போனும் அவளுடன் உயிரைவிட்டிருந்தது.

Wednesday, April 14, 2010

பேச நல்ல டைம்..

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

ரொம்ப நாளா ப்ளாக் பக்கமே வரல.. அதான். வாழ்த்து தெரிவிக்க வந்துட்டேன். சில விளம்பரங்கள் ரொம்ப அழகா இருக்கும். எப்படி தான் யோசிச்சாங்கன்னு தெரியாது. அவ்ளோ அழகா எடுத்திருப்பாங்க. அதே மாதிரி அதுல நடிச்சிருக்கறவங்களும் அப்படி நடிச்சிருப்பாங்க. செம க்யூட்டா.. அதுல எனக்கு ரொம்ப புடிச்சது த்ரீ ரோஸஸ் விளம்பரம். திவ்யா பரமேஸ்வரனோட அழகான புன்னகையில் விளம்பரம் ஜொலிக்கும்.. அந்த நெருக்கமும் அவ்ளோ அழகா இருக்கும். பேச நல்ல டைம்...

நீங்களும் பாருங்க..




இதே மாதிரி இன்னொரு க்யூட்டான விளம்பரம் மாதவன் -வித்யாபாலன் நடித்த ஏர்டெல் விளம்பரம்.


Friday, March 26, 2010

வெட்கம்ன்னா.....

ஏன் எழுத ஆரம்பிச்சேன்னு தெரியல.. ஆனா அது நடந்துச்சு.. கிட்டத்தட்ட நாலஞ்சு வருஷமிருக்கும் எழுதணும்னு தோணி.. ஏகத்துக்கும் ப்ளாக்கும் கதைகளும் படிச்ச விளைவு. திடீர்னு போன வருஷம் இனி எழுதறத நிறுத்தினேன். அப்புறம் இப்போ ப்ளாக் ஆரம்பிச்சதுக்கு அப்புறம் பழைய டச் விட்டுப் போச்சு. அதான் மொக்கையா முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன்..

அதாகப்பட்டது இப்போ எத பத்தி எழுதப்போறேன்னா... வெட்கம். அந்தக் காலத்திலேர்ந்து ஒரு நாலு மேட்டர பத்தி சொல்லுவாங்க. குறிப்பா பொண்ணுங்களுக்கு.. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு. மத்தத பத்தி இப்போ கவலையில்ல. ஆனா அந்த மூணாவது மேட்டர்.. நாணம்.. வேற பேரு தான் வெட்கம். என்னமோ அத பொண்ணுங்களுக்கு மட்டும் சொந்தம்ங்கற மாதிரி பேசறாங்க... ஆனா வெட்கப்பட்ட பல ஆண்களைப் பார்த்திருக்கேன்.. மச்சான்.. மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிடுச்சுன்னு வழிவாங்கல்ல.. அது வ்ழிசல் இல்லீங்க.. வெட்கம். அதே மாதிரி கடலை.. ஜொள்ளு..இப்படி பல பேர்ல பொண்ணுங்ககிட்ட பேசும் போது அவங்க கண்ணு மின்னுமே..அது ஜொள்ளு இல்லே வெட்கம். வாயில வழிஞ்சா தான் ஜொள்ளு..

மேட்டருக்கு வருவோம். சினிமால நிறைய தமிழ் பொண்ணுங்க வெட்கப்பட்டு பார்த்திருக்கேன். ஆனா நேரில என் அதிர்ஷடமோ என்னமோ தெரியல.. இதுவரை ஒரே ஒரு பொண்ணு தான் வெட்கப்பட்டு பாத்திருக்கேன்....ஹ்ம்ம்... சரி..விடுங்க. மத்தபடி சரியாவே ஞாபகம் இல்லே... அதுவும் பெங்களூருக்கு வந்தப்புறம் வெட்கமா என்ன?னு கேக்கற அளவுக்கு எல்லோரும் இருக்காங்க.. ஆண்கள் வெட்கப்படுற அளவு கூட பெண்கள் வெட்கப்படுற மாதிரி தெரியல..

வெட்கப்படுறதும் வெட்கப்படுறதைப்பாக்கறதும் ஒரு சுகம். மனசுக்குள் பட்டாம்பூச்சி பறக்கறது கண்ணுல தெரியும்.. கால் பூமியில இல்லாம ஆகாயத்துல அடியெடுத்து வைக்கும்... அப்போ இருக்கும் பாருங்க ஒரு லவ் ஃபீல்... ச்சே.. இது எதுவும் இன்னும் எனக்கு குடுத்து வைக்கல... எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கறேன்..

இப்படி இருக்கற சூழ்நிலையில சமீபத்துல நான் பார்த்த ஒரு வெட்கப்படுற சீன் ரொம்பவே ஆச்சர்யப்படுத்திடுச்சு.. கோவா படத்துல மெலன் மேரியின் வெட்கம். என்ன ஆச்சர்யம்னா... வெட்கப்படறதுன்னா என்னன்னு எப்படி சொல்லி புரிய வச்சிருப்பாங்கன்னு. ஆனா சும்மா சொல்லக்கூடாது பொண்ணு பிச்சி உதறிடுச்சு... வெட்கத்துல. அங்க ப்ரேம்ஜிக்கு பதிலா என்னைத் தான் பார்த்தேன்.. ஹிஹி. அவ்ளோ அழகா வெட்கப்பட்டது... அதுவும் தலையாட்டிக்கிட்டே.. சீரான பல்வரிசை தெரிய... அடடா... சரி... தொடச்சுக்கிட்டேன்.. நான் பார்த்தத நீங்களும் பாருங்க.. உங்களுக்கும் வெட்கம் வரும்... வர்ட்டா....

Monday, March 22, 2010

மௌனராகங்கள்...!

போன வாரம் ஐ.பி.எல் பிரச்சனையால நீயா நானா பார்க்க முடியாமல் போச்சு. அதைப் பார்க்கணும்னு நண்பன் ஆசைப்பட்டான். கொஞ்சம் பொறு… ரெண்டு நாள்ல எப்படியும் நெட்ல வந்துடும்னு சொல்லி.. ஐ.பி.எல்லும் பார்த்தாச்சு.அடுத்து செவ்வாய்..உகாதி விடுமுறை. என்ன பண்றதுனு தெரியாம ரெட்ல உலாவிக்கிட்டு இருந்தபோது நீயா நானா பார்க்கலாம்னு தோணுச்சு. சரின்னு நெட்ல் தேடி கண்டுபுடிச்சு பார்க்க ஆரம்பிச்சோம். பசங்கல பொண்ணுங்களும் பொண்ணுங்களை பசங்களும் புரிந்து கொள்ளும் முயற்சின்னு குறிப்பிட்டாங்க.

ஒவ்வொருத்தர் பேசும் போது சுவாரஸ்யமா இருந்துச்சு. அடுத்தவங்க கதை கேட்கறதுன்னா நமக்கு என்ன சுவாரஸ்யத்துக்கு குறைச்சல்..? இப்படி தான் பலரும் தான் வாழ்க்கைல நடந்தத வச்சு பொண்ணுங்க இப்படி தான், பசங்க இப்படித்தானு ஏகத்தும் பேசினாங்க. கேட்கற வரைக்கும் சந்தோஷம்.

Coming to the point…! இந்த விஷயத்தை பத்தி யோசிச்சா தேவையில்லாம ஆணா இருந்தாலும் சரி.. பெண்ணா இருந்தாலும் சரி… அநாவசியமா மூளைய குழப்பிக்குவோம். ஏகத்துக்கும் குழம்பினப்புறம் தெரிஞ்ச விஷயம் இது. இன்னார் இந்த சமயத்தில் இப்படித் தான் இருப்பார்கள் என்று சொல்ல முடிந்துவிட்டால் வாழ்க்கையில எந்த சுவாரஸ்யமுமே இருக்காதே. நூறு சதவிகிதம் ஒருத்தரைப் பத்தி கணிக்க முடிந்துவிட்டால் அவரை விட்டு விலகிவிட வேண்டும். அப்புறம் அவருடனான வாழ்க்கை ஆபத்தானது..உண்மையிலேயே. சீக்கிரமே போரடித்துவிடும்.

இதே தான் ஆண்பெண் புரிதலுக்கும். முழுமையாக புரிஞ்சுக்கிட்டோம்னு யாரும் சொல்ல முடியாது. ஆனா வாழ்நாள் முழுக்க அந்த புரிதலைத் தேடிப் போற பயணம் சுவாரஸ்யமானது. அதுலேயும் பெண்கள் இப்படித் தான்னு பொதுவா பொத்தம்பொதுவா சொல்ல முடியாது. அந்த நிகழ்ச்சியிலேயே ஒரு ஆணோட கேள்விக்கு பல பதில்கள் வந்தது.. இப்படியா இருக்கலாம்.. அப்படியா இருக்கலாம்னு.. சந்தோஷம். ஆக. இது தான்னு ஒரு பதில் எந்த குழப்பமான புரிதல் சம்பந்தப்பட்ட கேள்விக்கும் கிடையாது.

என்னைப் பொறுத்த வரை ஒரு ஆணா.. பெண்ணின் மனநிலையை அறிந்து கொள்ள முயற்சிப்பது சுவாரஸ்யமான விஷயமே. எந்த வகைப் பெண்ணா இருந்தாலும்… என் அம்மாவுக்கு என்ன பிடிக்கும்னு முழுமையா அறிய முடியவிட்டாலும் ஓரளவுக்குத் தான் கணிக்க முடியுது. இத்தனை வருஷம் குடும்பம் நடத்தின என் அப்பாக்கே தெரியும்னு சொல்ல முடியாது. பேசுவது ஒன்றாயிருந்தாலும் குறிப்பிடுவது வேறொன்றா இருக்கும். அந்த குறிப்பை நாம புரிஞ்சுக்கணும். இப்படித் தான் வாழ்க்கையே…

அடுத்ததா பெண்ணுக்கு என்ன புடிக்கும். ஒரு பெண்ணை கவரணும்னா.. என்னென்ன பண்ணனும்னு இன்னும் சரியா யாருக்குமே தெரியாது.. இப்படிப்பட்ட காலக்கட்டதுல ஏன் நான் இதைப்பத்தியெல்லாம் பேசிக்கிட்டு இருக்கேன்..

இன்னிக்கு பார்த்த படம்… கே.டி.வியில்.. மௌனராகம்..

உண்மையிலேயே ஃபீல் அண்ட் ஃபீல் ஒன்லி படம். படத்தில் வர்ற கார்த்திக் கேரக்டராகட்டும், மோகன் கேரக்டராகட்டும்.. ரேவதியாகட்டும் அழகாக செதுக்கி இருப்பார் மணிரத்னம். இளையராஜாவின் ஒத்துழைப்போடு அந்த உணர்வு படம் முழுக்க நம்மை ஆக்ரமிச்சிருக்கும். படத்தில் ரேவதியின் கதாபாத்திரம் அந்த குழப்பமான பெண்ணின் மனநிலை அவ்ளோ அழகா பதிவு செய்யப்பட்டிருக்கும். படம் வந்து நாளானாலும் இன்றைக்கும் இளம்பெண்களின் விருப்பப்படமாக அது இருக்கும். குறிப்பாக கார்த்திக்கின் துறுதுறுப்பும் மோகனின் பொறுமையான குணமும்… ‘வாவ்…சான்ஸ்லெஸ்னு..’ பொண்ணுங்க சொல்லக் கேள்வி.. படத்தோட ஒன்றி பாத்தப்புறம் (எத்தனையாவது முறைன்னு தெரியல)… சட்டென்று மனதுல பட்ட விஷயம் இது… சரியா தப்பான்னு நீங்க தான் சொல்லணும்.

பெண்களுக்கு… குறிப்பா இன்றைய இளம்பெண்களுக்கு கார்த்திக் மாதிரி காதலனும் மோகன் மாதிரி கணவனும் தான் எதிர்பார்க்கிறார்கள்.. சரியா தப்பான்னு நீங்க தான் சொல்லணும்.. கல்யாணத்துக்கு முன்னாடியோ காதலிக்கும் போதோ துறுதுறுவென்று சத்யா படத்தில் வரும் ‘வளையோசை’ பாடலில் கமல் செய்யும் குறும்புத்தனங்களை எதிர்ப்பார்க்கும் இளம்பெண்கள் கல்யாணத்துக்கு பின் கணவன் மோகன் மாதிரி அன்பாகவும் தன்னை புரிஞ்சு தனக்காக விட்டுக்கொடுக்கும் நல்லவனாகவும் எதிர்பார்க்கிறார்களா??? ஒருவரே இருபாத்திரங்கள் ஏற்பது சாத்தியமா…??

உலகம் முடியும் வரை இந்தக்கேள்விக்கு விடை கிடைக்குமென்று எனக்குத் தோன்றவில்லை.

எனிஹௌ… நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த அங்காடி தெரு வரப்போகிறது.. கூடிய சீக்கிரமே பார்த்திடுவேன். ‘நெசமா தான் சொல்றியா’ அஞ்சலியை ட்ரெயிலரில் பார்த்த போதே முடிவு செய்துவிட்டேன்..ஹிஹி

Tuesday, March 9, 2010

முகமறியா முகங்கள்

(மு.கு: இந்தக்கதையை எப்போதோ ஏதோ ஒரு கதைப்போட்டிக்காக எழுதியது. போட்டிக்கு அனுப்புவதென்றால் கொஞ்சம் சீரியஸா... தெரியாத புரியாத விஷயமா இருக்கணும்னு ஒரு வரைமுறைக்கு உட்பட்டு எழுதினேன். வழக்கம் போல பரிசு ஏதும் கிடைக்கல..ஹிஹி.. படிச்சுட்டு கொல்லுங்...அவ்வ்வ்...சொல்லுங்க)


இன்றைய நாள் ஏனோ விசேஷமாய் தோன்றியது. மனதுக்குள் சின்ன குறுகுறுப்பு, கொஞ்சம் படபடப்பு. வாழ்வின் முக்கியமான நபரை சந்திக்கப் போகிறேன். அவர் ஆணா பெண்ணா. தெரியாது. ஆனால் இது வாழ்க்கையின் மிக முக்கியமான சந்திப்பு என்பது மட்டும் புரிந்தது.

இணையத்தில் உலவ ஆரம்பித்திருந்த புதிது அது. இணையத்தின் வழி உலக விஷயங்கள் அனைத்தும் தெரிந்து கொள்ளலாம் என்று கேள்விப்பட்டதிலிருந்து மனம் அதை ஒரு திரையாகவும் அதில் படங்கள் ஓடுவது போலவும் கற்பனை செய்து பார்த்தது. ஒருவழியாக நண்பன் ஒருவன் மூலம் இணையம் என்பது படங்கள் மட்டுமல்ல தளங்களும் கொண்டது என்று கொஞ்சம் கொஞ்சமாக புரிபட ஆரம்பித்தது. கல்லூரியில் படிக்கையில் அப்பா ஆசையாக கணினி வாங்கி கொடுத்த போது உலகத்தையே வென்றது போன்றதொரு உணர்வு. ஏனையோருக்கும் அப்படி தான் இருந்திருக்கும். அவ்வளவு பெருமிதம். இணைய இணைப்பு கொடுத்து அதில் உலாவ ஆரம்பித்த பிறகு மற்ற வேலைகள் மறந்தே போயின. காலை எழுந்ததும் இணையம். பின்பு மாலை கல்லூரி முடிந்தபின்பும் இணையம். வாழ்க்கை நண்பர்களுடன் அளவளாவுவது குறைந்து இணையத்தோடு உலாவது ஆனது. சரியாக சொல்ல வேண்டுமானால் இணைய அடிமை.

இப்படித் தான் ஒரு நாள் அரட்டை தளங்களுள் நுழைந்து உலாவிக் கொண்டிருந்த போது அந்த பெயர் கண்ணில் பட்டது. Inpersuit. வித்தியாசமாய் தெரியவே தனிச்செய்தி அனுப்பினேன்.

“வணக்கம். எதைத் தேடி தங்கள் பயணம்?”

பதில் உடனே வந்தது.

“வணக்கம். எதைத் தேடலாமென்று தான்…”

வழக்கமாக சரியான முறையில் பதில் வராது. தெளிவான பதில் வரவே உரையாடல் தொடர்ந்தது.

“எதைத் தேடலாமென்று தேடிக் கொண்டிருக்கிறீர்கள்..? அப்படி ஏதேனும் தொலைத்து விட்டீர்களா என்ன?”

“தொலைத்தால் மட்டும் தான் தேடுவார்களா? தொலைப்பதற்கும் ஏதாவது வேண்டுமல்லவா? அதனால் தொலைப்பதற்காக தேடிக் கொண்டிருக்கிறேன்…”

சுத்தம்.. என்ன எதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் என்று புரியவில்லை. ஆனாலும் ஏதோ ஒன்று மட்டும் பேசச் சொல்லி வற்புறுத்துகிறது. மேலும் தொடர்ந்தேன்.

“தொலைக்கப் போகிறோம் என்று தெரிந்தபின்னும் எதற்காக தொலைந்து போய் தேடுகிறீர்கள்? தொலையாமலே தொலைக்காததை வைத்து நிம்மதியா இருக்கலாமே… தொலைந்துவிடும் என்று தெரிந்தும் தேடுவது அறியாமையல்லவா?”

“ஆம்.. ஆனாலும் தேட வேண்டுவது கட்டாயமாகுதே…!”

அடச்சே. இந்நேரம் பார்த்தா மின்சாரம் போய்த் தொலைய வேண்டும். சிறிது நேரம் மனதில் அந்த உரையாடல் அப்படியே இருந்தாலும் அடுத்தடுத்து வேற விஷயங்களில் கவனம் திரும்பியது. ஒரிரு மணிநேரத்திலேயே அந்த விஷயம் சுத்தமாய் மறந்துவிட்டிருந்தது.

கல்லூரிப் படிப்பெல்லாம் முடித்துவிட்டு வேலை கிடைத்து நகரத்திற்கு வந்து நண்பர்களுடன் தங்க ஆரம்பித்தாயிற்று. ஒரு காலத்தில் பிரமிப்பாய் தெரிந்த இணையம் பற்றி இப்போது கரைத்து குடித்திருந்தேன். இணையம் பற்றித் தெரியவில்லை என்று யார் சொன்னாலும் அவனை புழுவிற்கு சமானமாய் பார்க்கவும் ஆரம்பித்தாயிற்று. காலை எழுந்தவுடன் பல் கூட துலக்காமல் இணையத்தில் மேய வேண்டியது. ஏனோ இணையத்திற்கே ஆயுட்கால அடிமை போல.

மென்பொருள் தொழில் வேறு. தினமும் பதினாறிலிருந்து இருபது மணிநேரம் வேலை பார்க்க வேண்டியது. பணத்தை கத்தையாக கொடுத்தாலும் மனத்தை சக்கையாய் பிழிந்தனர். பல நாள் தலை பாரமாய் இருக்கும். ஏதோ இருண்டதொரு குகைக்குள் அடைப்பட்டுக் கொண்டு வெளிவர முடியாததை போல் மூச்சு முட்டும். ஆனாலும் வெளியில் பகட்டாய் உடை உடுத்தி பார்ப்போரிடம் சிரித்து சந்தோஷமாய் இருப்பது போல் நடித்து… ஆம். மிகச் சரியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். நல்லவன் போல். வல்லவன் போல்.

தொடர்ச்சியாக பல இரவு வேலை பார்த்ததில் மனத்தின் அழுத்தம் அதிகமாகி மருத்துவரை பார்க்க நேரிட்டது. ‘கவலைப்பட ஒன்றுமில்லை’யென்றும் வழக்கமாக மென்பொருள் வல்லுநர்களுக்கு நேரிடுவது தான்’ என்றும் மிகச் சாதாரணமாய் சொல்லிவிட்டார். இந்த நரகத்திலிருந்து விடுதலை கிடைக்குமா? விடுதலை என்பதற்கு வேலையே இல்லை. இது நானாய் தேடிக் கொண்ட நரகம். பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இருந்து தான் ஆக வேண்டும்.

ஒருவாரம் போல விடுப்பு எடுத்து ஊருக்கு வந்தேன். காற்றை புதிதாய் உணர்ந்தேன். ஏ.சியின் குளுமை இல்லை. ஆனால் மனதிலும் வெறுமை இல்லை. அம்மாவின் சாப்பாடு. ஒரு வாரம் வயிறார சாப்பிட முடிந்தது. ஒரு நாள் மாலை வேளையில் பொழுது போகாமல் இணையத்தில் (இது என்றும் விடாத கருப்பு) உலாவும் போது அதே பெயர். அப்போது தான் ஞாபகம் வந்தது. கடந்த மூன்று வருடங்களாய் எந்த அரட்டைத் தளத்தினுள்ளும் நுழைந்ததில்லை. ஆர்வம் உந்த செய்தி அனுப்பினேன்.

“நலமா?”

“நலம். நீண்ட நாட்களாகிவிட்டது நாம் உரையாடி”

“ஒரு முறை தானே உரையாடி இருக்கிறோம். அன்று மின்சாரம் தடைபட்டுவிட்டது.”

“நினைத்தேன்..”

“சரி.. உங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாமா?”

“என்னைப் பற்றி என்றால்..?”

“உங்கள் ஊர்..பேர்..முடிந்தால் சொல்லுங்கள். இல்லையேல் வேண்டாம்”

“தெரிந்து என்ன செய்ய போகிறீர்கள்”

“ஒன்றும் செய்யப் போவதில்லை. சும்மா தெரிந்து கொள்ளத் தான்”

“ஒன்றும் செய்யாததற்காக எதற்கு ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும்.”

இந்த நபர் அவரே தான். ஆனால் ஆணா பெண்ணா. கண்டுபிடிக்க வேண்டுமே.

“அனைத்தும் தெரிந்து கொள்வது நல்லது தானே. கற்றாரை கற்றார் காமுறுவர்”

“கற்றபின் நிற்க அதற்குத் தக என்றும் சொல்லியிருக்கிறார்களே. தெரிந்து கொள்ள வேண்டியது யாருக்கேனும் பயனாய் இருக்க வேண்டும். ஒன்றும் செய்யாமலிருப்பதற்காக தெரிந்து கொள்ளுதல் நேரம் கொல்லுதல் தானே?”

அடச்சே… என்ன இப்படி மாட்டிக்கிட்டு முழிக்கிறேன். ஆனாலும் ஏதோ ஒரு உந்து சக்தி பதிலனுப்பியது.

“உங்களைப் பற்றித் தெரிந்தால் இணையத்தோழமை என்று கதை எழுதுவேன்.”

“தோழமை என்றால்..”

“நட்பு”

“நாம் நண்பர்களா? என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? எதுவும் தெரியாமல் தோழமை என்றால்”

ம்ம்….. திரும்ப திரும்ப மாட்டிக் கொள்கிறேனே.

“அதற்குத் தான். உங்களைப் பற்றி சொல்லுங்கள் என்றேன்.”

பேச்சு இப்படியாகத் தொடர்ந்தது. மெல்ல மெல்ல என்னையுமறியாமல் அதில் லயிக்கலானேன்.

பெயர் வித்யா என்றும் நான் பணிபுரியும் அதே ஊரில் தான் வசிப்பதாவும் சொன்னாள். அடுத்தடுத்த நாட்களில் எங்கள் உரையாடல்கள் தொடர்ந்தது. பல்வேறு சம்பவங்களைப் பற்றி. நாகரிகமான முறையில் தெளிவான நடையில் சுருக்கமாக. மனதில் இருந்த குழப்பங்களுக்கு அவள் தத்துவங்கள் மிகவும் தேவைப்பட்டது.

மனிதர்கள் உரையாடுவதே தெரிந்ததை திரும்ப தெரிந்து கொள்ளத் தான் என்றாள். ஏனோ சில காரணங்களால் எதைத் தேடிக் கொண்டிருக்கிறாள் என்பதை மட்டும் சொல்லவே இல்லை. நாட்கள் ஆக ஆக எங்கள் உரையாடல்கள் தீவிரமடைந்தன. பணியில் சேர்ந்த பின்பு அந்த மாற்றத்தை நன்கு உணர்ந்தேன். என் குறை சொல்லி புலம்பகூட நல்ல நட்பு என்னருகில் இல்லாததே காரணம் என்று புரிந்தது.

எதனாலோ அவளுடம் உரையாடும் போது மட்டும் நான் நானாய் இருக்கிறேன். ‘என்ன வாழ்க்கை இது’ என்ற எண்ணம் போய் ‘இது வாழ்க்கை’ ஆனது. சில நேரங்களில் யோசித்துப் பார்க்கையில் என் தனிமை தவிர அவளிடம் உரையாடும் போது மட்டும் தான் நான் நானாய் இருந்திருக்கிறேன் என்று தோன்றியது. நான் என்ற நானே கூட பொய்யான ஒரு முகமூடியாய் தோன்றிற்று. விரும்பியோ விரும்பாமலோ இது தான் சரி என்று இந்த சமுதாயம் தீர்மானித்ததை ஏற்றுக் கொண்டு விதவிதமான முகமூடிகள் அணிந்து கொண்டு வெளியில் நடமாடுகிறேன். உள்ளுக்குள் மட்டும் எது நானென்று பெருங்குழப்பம். குழப்பம் மட்டுமே வாழ்வின் மிச்ச சொச்சமோ. இதற்கெல்லாம் தீர்வாக அவள் உரையாடல். எதையும் எடுத்தெறிந்தாய் போல் பேச்சு. மறைக்காமல் தெளிவாய் தன் பலம் பலவீனம் அணிந்த தோரணை.

அமைதியாய் போய்க் கொண்டிருந்த உரையாடல்களில் சிகரம் வைத்தாற் போல ஒரு நாள் ‘நாம் சந்தித்தாலென்ன?’ என்றாள்.

இதுவரை ஒரே ஊரில் இருந்தாலும் என் மனம் அவளை சந்திக்க முற்பட்டதில்லை. ஏனோ தெரியவில்லை. சந்திப்பதற்கான தேவையும் ஏற்பட்டதில்லை. இப்போது அவளே கூப்பிடுகிறாள். போய் தான் பார்க்கலாமே.

இன்று தான் அவளை சந்திக்கப் போகிறேன். நீண்ட நாள் தோழமையை சந்திக்கப் போகிறோமென்று. பதட்டம்..படபடப்பு… இன்னதென்று என்று பிரிக்க முடியாத பலவகை உணர்ச்சிகள். ஒருவாறாய் கட்டுப் படுத்திக் கொண்டு குறிப்பிட்ட இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். நடையில் துள்ளலா தள்ளாட்டமா? தெரியவில்லை. பரவசத்துடன் கோவிலில் குடியிருக்கும் அம்மனை தரிசிக்கப் போகும் பக்தனைப் போல. அந்த இடத்தின் வாசலை அடையும் போது அவள் சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது.

‘இளநீல வண்ண சுடிதார் அணிந்திருப்பேன். அந்தக் கடையின் முன் நின்றிருப்பேன். குதிரை வால் கொண்டை.’ அவள் அலைபேசி எண்ணைத் தரவில்லை.

மனத்தினில் ஆயிரம் கற்பனைகள். எப்படியிருப்பாள் என்று. பெரிதாய் இறுமாந்து நின்றிருந்த அந்த வணிக வளாகத்தின் முன் நிற்கையில் ஏனோ சின்னதாய் தோன்றினேன். மெலிதாய் சீட்டி அடித்தப்படி படிகளில் ஏறுகையில் கால் தடுக்கி தடுமாறினேன். உண்மையிலேயே தடுமாற்றமோ?

பார்த்து வைத்திருந்த பல ஒத்திகைகள் கண்முன்னே வந்துப் போயின. முதலில் என்ன பேச ஆரம்பிக்கலாம்? என்ன பேசலாம்? எங்கு போய் சாப்பிடலாம்? என்ன மாதிரி உடை அணிந்தால் பார்க்க நன்றாய் இருக்கும். எவ்வளவு கற்பனைகள் மனதினில்.

ஆயிரம் கைகள் சேர்ந்து அறைந்தார் போல் ஒரு வலி. முகமூடி தொலைத்து தொடர்பு கொண்டவளைப் பார்க்க விதவிதமான முகமூடிகளை தேர்வு செய்கிறேன். இன்றோ பகட்டான உடை அணிந்து அவளைப் பார்க்க. உலகே என்னைச் சுற்றி நின்று கைக்கொட்டி சிரிப்பதாய் கூச்சமாயிருந்தது. குழப்பங்களிலிருந்து விடுபட்டு விட்டதாய் குழம்பிக் கொண்டிருக்கிறேன். எங்கேயோ தொலைந்து போன மனிதத்துள் நானும் ஒருவனாக…

நிமிர்ந்து பார்த்தேன். தூரத்தில் அவள் அடையாளம் சொன்ன கடை. கலங்கிய கண்களில் பிம்பமாய் பலர். எல்லோரும் நீல வண்ண ஆடை அணிந்தது போல் தோன்றியது. தெளிந்துவிட்டேனா குழம்புகிறேனா. தெரியவில்லை. எது தொலைத்தேன்? எதைத் தேடுகிறேன்? இன்னும் புரியவில்லை. தன்னிச்சையாக என் கால்கள் திரும்பி படியில் இறங்க ஆரம்பித்தது.


Blogger Templates by Isnaini Dot Com. Powered by Blogger and Supported by ArchiThings.Com - Modern Architecture Design