Tuesday, April 27, 2010

உன்னை தற்கொலை செய்யவா?! - பகுதி 2


புது டெல்லி. இன்னமும் விடியாத காலைப்பொழுது. குளிருக்கு இதமாய் ஸ்வெட்டர் போட்டுக் கொண்டு சாலையோரமாய் நடக்கும் மக்கள். எங்கும் அமைதியாக இருக்க சைரன் வைத்திருந்த வாகனங்கள் வெளிச்சதைக் கக்கியபடி சர் சர்ரென்று அந்த கட்டத்தின் முன்வாசலில் நின்றன. செக்யூரிட்டி கதவை திறந்துவிட அவர்கள் அடித்த சல்யூட்டை வாங்கிக் கொண்டே பைஜாமா குர்தாக்களில் இருந்த கேபினட் அமைச்சர்கள் இறங்கினர். வந்திறங்கிய இடம் நம்பர் 7, ரேஸ் கோர்ஸ் சாலை, டெல்லி. பிரதம மந்திரி இல்லம்.
அதிகாலையிலேயே தொலைப்பேசியில் தகவல் வந்ததை அடுத்து அனைவரும் ஏன் எதற்கென்று புரியாமல் வந்திருந்தனர். மெல்லியதாக கொட்டாவி விட்டபடி வேளாண்மை அமைச்சரும் ஜவுளித்துறை அமைச்சரும் பேசிக்கொண்டே உள்ளே நுழைந்தனர்.
“என்னய்யா.. காலங்கார்த்தால தூங்கக் கூட விடாம.. அப்படி என்ன தலை போற அவசரம்னு கூப்பிட்டு இருக்காங்க..” இது ஜவுளி.
“தெரியலேப்பா.. எவனாவது யாரையாவது சுட்டிருப்பான். அதுக்காக ஆலோசனைங்கற பேர்ல எல்லோரையும் கூப்பிட்டு இருப்பாங்க.. அவசரத்துல வீட்ல கூட சொல்லாம வந்துட்டேன்…” வேளாண்மை முணுமுணுக்க அனைவரும் வந்தவுடன் வீட்டின் கதவு சாத்தப்பட்டது. நீண்டு போடப்பட்டிருந்த மேஜையில் நடுநாயகமாய் உட்கார்ந்திருந்தார் இந்திய நாட்டின் பிரதம மந்திரி. வழக்கமாக மந்தகாசப்புன்னகையுடன் குழப்பம் நிறைந்திருந்த மந்திரிகளின் முகத்தைப்பார்த்துக் கொண்டே பேச்சை ஹிந்தியில் ஆரம்பித்தார்.
“அனைவருக்கும் வணக்கம். ஒரு முக்கிய விஷயமாக பேசுவதற்காக உங்க எல்லோரையும் கூப்பிட்டிருக்கோம். நாட்டின் பாதுகாப்பிற்கு ஒரு சின்ன பிரச்சனை ஏற்படலாம் என்று தெரிகிறது. இது எல்லாவற்றையும் பற்றி சொல்வதற்கு முன்னால இந்த கூட்டத்திற்கு சம்பந்தப்பட்ட தேசிய விஞ்ஞானக்குழு ஆலோசகர் திரு. சுந்தரராமனை அறிமுகப்படுத்துகிறேன். மேலும் விவரங்களை அவர் விவரிப்பார்.”
மூலையில் உட்கார்ந்திருந்த சுந்தரராமன் தொண்டையை கனைத்துக் கொண்டே எழுந்தார்.
“எல்லோருக்கும் காலை வணக்கம். நான் சுந்தரராமன். தேசிய விஞ்ஞானக்குழு ஆலோசகர். இஸ்ரோ இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்திராயன் – I ஐ நிலவுக்கு அனுப்பியது உங்கள் எல்லோருக்கும் தெரியும். சில தொழில்நுட்பப்பிரச்சனைகளால் எதிர்பார்த்திருந்த காலத்தைவிட முன்னதாகவே தொடர்பு அறுந்துவிட்டது.. இப்போ ஏற்பட்டிருக்கும் சில சூழ்நிலைகளால் நாம ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அடுத்த மிஷனை முன்னதாகவே அனுப்ப வேண்டிய கட்டாயம். அதைப் பற்றி தெரிவிக்கத் தான் இந்த கூட்டம்..”
அமைச்சர்கள் கூட்டம் அமைதியாக இருந்தது. இப்போது தலையை திருப்பி பிரதம மந்திரியை பார்த்தனர். அவர் இப்போது ஆரம்பித்தார்.
“உண்மை தான். சிலர் நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் நமது விஞ்ஞானிகளுக்கு கிடைத்த சில அரிய தகவல்களைக் கொண்டு இந்த முடிவு எடுத்திருக்கிறோம். இன்னும் இரண்டு மாதத்தில் இந்தியாவின் புது விண்கலம் சந்திரோதயன் நிலவை நோக்கி கிளம்பும் “
இன்னும் ஒன்னும் புரியாமல் எல்லோரும் விழித்திருக்க தகவல் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் பேச ஆரம்பித்தார்.
“அப்போ இது புதுத் திட்டம். எப்போ நிதி ஒதுக்கப்பட்டது. எப்போ விண்ணில் செலுத்தும் எண்ணம்? இதைப் பற்றி ஏன் யாருக்கும் சொல்லவில்லை?”
“போன வருடம் தேசிய பாதுகாப்பு குழுவில் எடுக்கப்பட்ட முடிவு. பொதுவில் விவாதிக்க முடியாத சில விஷயங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு ஜனாதிபதியிடமும் ஒப்புதல் வாங்கியாகிவிட்டது. நாட்டில் எல்லா இடத்திலேயும் ஓட்டை. இப்போ இங்கே பேசும் அத்தனை விஷயங்களும் இன்னும் பத்து நிமிஷத்தில் வெளியே இருக்கும் பத்திரிக்கையாளர்களிடம் போய்விடும். அந்த லட்சணத்தில் முக்கிய பாதுகாப்பு விஷயங்களுக்காக பரிட்சை செய்ய விரும்பவில்லை. இப்போ கூட பொதுவில் மக்களுக்கு அறிவிக்க வேண்டிய கட்டாயம் வந்துள்ளதால் தான் இந்த கூட்டமே.”
“ஏதோ பாதுகாப்பு பிரச்சனைனு சொன்னீங்க. என்ன அது?”
“நமக்கு வேண்டாத சிலர் தீவிரவாதிகளால் நம் விண் ஆராய்ச்சிக்கு முட்டுக்கட்டை போடப்போறதா தகவல். அவங்க யார்.. எங்கிருந்து வர்றாங்கன்னு இன்வெஸ்டிகேஷன் நடக்குது. உள்துறை அமைச்சரின் நேரடி மேற்பார்வையில். மேற்கொண்டு விவரங்களை இப்போ பேச முடியாது. அதே சமயம் நாம் எதிர்பார்த்ததுக்கு முன்னாடியே கிடைச்ச சில தகவல்கள். அதனால நிலவுக்கு விண்கலம் அனுப்பலாம்னு ஆராய்ச்சித் துறை சிக்னல் கொடுத்திருக்காங்க. இந்த தகவல்கள் போதுமா.. இல்லை இன்னும் ஏதாச்சும்..?”
எல்லோரும் மௌனித்திருக்க
“சரி.. இன்னும் சற்று நேரத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். வழக்கம் போல எதிர்கட்சியின் பிரச்சாரத்துக்கு பிரதம மந்திரி அலுவலகம் பதில் சொல்லும். நீங்கள் யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம். இத்துடன் கூட்டத்தை முடிச்சுக்கலாம்”
சொல்லிய பிரதமர் எழ இன்னமும் தூக்கம் கலையாமல் கொட்டாவி விட்டபடி ‘இந்த விஷயத்துக்காகவா தூக்கத்திலிருந்து எழுப்பி வரசொன்னாங்க’ன்னு முணுமுணுத்துக் கொண்டே அமைச்சர்கள் கிளம்பி சென்றனர். அடுத்ததாய் பிரதமர் சில முக்கிய பிரமுகர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். முடிவில் அவர் முகத்தில் தெளிவு பிறந்தது.
“சபாஷ்.. சுந்தரராமன், நீங்க சொல்ற மாதிரி மட்டும் நடந்துடுச்சுன்னா.. உலக அளவில இந்தியா முன்னணி நாடா வந்துடும். ஆனா இந்த பாதுகாப்பு விஷயம் மட்டும் உறுத்துது. அதைப் பத்தி சரியா தகவல் தெரிஞ்சதும் மேற்கொண்டி விவாதிக்கலாம். முப்படைத் தளபதிகளும் அப்போது நம்முடன் இருப்பார்கள்..”
புன்னகைத்துக் கொண்டே சுந்தரராமன் எழுந்தார்.
இரண்டு மணிநேரம் கழித்து அறிவிப்பு வெளியானவுடன் தலைநகரமே அமளிதுமளிப்பட்டது. எல்லா செய்திகளிலும் இதைப் பற்றியே பேச்சு.
பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் கொடுத்திருந்த பேட்டியில்,
“நாடே வறுமையில இருக்கு. கிட்டத்தட்ட 37 சதவித மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்காங்க. இதுல சந்திரனுக்கு விண்கலம் அனுப்பணும்னு இப்போ என்ன அவசரம். அதற்கு செலவிடப்படும் பணத்துல நாட்டு மக்களுக்கு பல நலத்திட்டங்கள செய்யலாம். கேட்க ஆளில்லாம ஆளும்கட்சி நாட்டின் கஜானாவை காலிப்பண்ணிக்கொண்டிருக்கிறது.”
இதைப்பற்றி பல செய்தி தொலைக்காட்சிகளிலும் விருந்தினர்கள் வரவழைக்கப்பட்டு விவாதங்கள் நடத்தப்பட்டது. நாட்டின் சராசரி குடிமக்களோ எதைப்பற்றியும் யோசிக்காமல் அடுத்த நாள் நடக்கும் ஐ.பி.எல் இறுதியில் சென்னை ஜெயிக்குமா தோற்குமா என கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர்.
அதே நாள்..
ஹைதராபாத் மாநகரத்தை எல்லையை தாண்டி சில பத்து கி.மீக்கு அப்பால் பெங்களூர் நெடுஞ்சாலையில் போனால் வலப்பக்கம் அந்த சாலை பிரியும். அதில் பயணித்து பதினைந்து கி.மீ சென்றால் “கெத்திரெட்டிப்பள்ளி” என்று தெலுகிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட பலகை உங்களை வரவேற்கும். எண்ணி ஊரில் இருநூறு வீடு இருந்தால் அதிகம். முக்கால்வாசி மக்கள் நெசவுத் தொழில் தான். அதனால் ஊரில் எங்கும் சாயமாக இருக்கும். ஆங்காங்கே தென்படும் டிஷ் ஆண்டெனாக்கள் நகரத்தோடு எந்தவிதத்திலும் தாங்கள் சளைத்தவரில்லை என பறைசாற்றியது.
சூரியன் மங்கும் மஞ்சள் வெளிச்சத்தில் ஊரே ஜொலிக்க அந்த கிராமத்தைக் கடந்த அம்பாசிடர் கார் பழங்கால கட்டிடமாய் இருந்த அந்த ரைஸ்மில்லின் முன் நின்றது. சரியான பராமரிப்பு இல்லாமல் ஆங்காங்கே காரை பெயர்ந்து இருந்தது.
காரிலிருந்து ஒரு ஐம்பது வயதுக்கும் மேல் மதிக்கத்தக்க அந்த மனிதர் இறங்கினார். பாதி நரைத்தும் நரைக்காமலும் இருந்த தலைமுடி, கண்ணில் வயதுக்கேற்ற கண்ணாடி, முழுக்கை சட்டை. நெற்றியில் எப்போதும் நிரந்தரமாய் கோடுகள். அவர்  இந்திய தேசிய விஞ்ஞானக்குழுத் தலைவர் நாராயணரெட்டி.
மில்லுக்குள் நுழைந்ததும் கவனமாய் கதவை சாத்தினார். அரவை இயந்திரங்களைத் தாண்டி… சுவரோரமாய் உமி குமிக்கும் இடத்துக்கு அருகில் சென்றார். கீழிருந்த பலகையை நகர்த்தி மெல்லியதாய் தெரிந்த கைப்பிடியைத் திருக கீழே படிக்கட்டுகள் தெரிந்தன. பொறுமையாய் அதனுள் இறங்கியதும் அந்த இடத்திற்கும் அதற்கும் சம்பந்தமில்லாத மாதிரி நவீன மயமாய் இருந்தது. வெளிச்ச ஒளிக்கற்றைகள் அறையெங்கும் பரவ நவீன ரக தடுப்புச்சுவர். நிற்க வேண்டிய இடத்தில் நின்றதும் கண்ணுக்குத் தெரியாத குறைந்த அழுத்த மின்காந்த அலைகள் அவருள் பரவி அவரின் அடையாளங்களையும் ரத்த அழுத்தத்தையும் சரிபார்த்து அவர் இன்னார் தான் என உறுதி செய்தவுடன் அந்தக் கதவு திறந்தது.
உள்ளே ஆங்காங்கே மேஜைகளும் அதன் மேல் வைக்கப்பட்டிருந்த பலவிதமான கருவிகளும் கம்ப்யூட்டர் சமாச்சாரங்களும் ஏதோ தீவிர சோதனை நடைபெறுவதற்கான அறிகுறிகளைக் காட்டியது. அந்த இடம் இந்திய அரசாங்கத்தால் ரகசியமானவர் பெயரில் சில ஆண்டுகளுக்கு முன் கையகப்படுத்தப்பட்டது. அந்த கிராமத்தில் இருக்கும் மக்கள் அரசாங்க உளவாளிகளும் பாதுகாப்பு வீரர்களும். பாதுகாப்பு வீரர்கள் ஆடு மேய்க்கும் இடையர் வேடத்தில் அந்நிய நபர்களின் நடமாட்டத்தை கவனித்து வருகிறார்கள். கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன் யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி அந்த கிராமம் உருவாக்கப்பட்டது. அதைப்பற்றிய குறிப்புகளும் அரசாங்க பதிவேட்டில் ஏற்றப்பட்டது. ஏதோ ஒரு முக்கிய சோதனைக்காக கிட்டத்தட்ட பத்து கி.மீ சதுரத்தில் உள்ள அனைத்து நடவடிக்கைகளும் காமிரா மூலம் கவனிக்கப்பட்டு வருகிறது யாருக்கும் தெரியாமல். ஊர் உலகிற்கு அது ஒரு வழக்கமான இந்திய கிராமம். அவ்வளவு தான்.
அவர் உள்ளே நுழைந்ததும் அவருக்காகவே காத்திருந்த மாதிரி மூவரும் நிமிர்ந்தனர். சோதனைக்கான கோட்டில் இருந்தவர்களில் நடுத்தர வயதுடைய நபர் தான் அந்த சோதனைக்கு சொந்தக்காரர். ராஜசேகரன். நாற்பதுகளில் இருக்கும் அவர் வேதியியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்ற கையோடு அரசாங்க வேலையில் சேர்ந்தார். அவரின் மூளையில் உருவான திட்டத்திற்கான சோதனை தான் அது. அவருக்கு உதவியாளர்களாக மிருதுளாவும் ப்ரணவும். மிருதுளா. இளம் வயது. அறிவியலில் ஆர்வம் அதிகம். ஐஐஎஸ்ஸியில் மேற்படிப்பை முடித்தவுடன் ராஜசேகரனால் கண்டுபிடிக்கப்பட்டவள். பேருக்கேற்ற மாதிரி மிருதுவான உருவம். கூர்மையான நாசி. சிரித்தால் தெரியும் தெற்றுப்பல். அலையலையாய் சுருண்டிருக்கும் நெடிய கூந்தல். கண்ணில் ஆர்வம் கொப்பளிக்க ரெட்டியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் பக்கத்தில் ப்ரணவ். அவள் காதலன். ஆறடி உயரம். சற்றே மாநிறம். சற்றே சுருட்டையாய் முடி. கச்சிதமாய் நறுக்கப்பட்ட மீசை. இரண்டு நாள் தாடி. காது மடல் வரை விடப்பட்ட கிருதா. அவளுடன் ஒன்றாய் படித்தவன். அவளுடன் சேர்ந்து ஆராய்ச்சி செய்ய ராஜசேகரனிடம் போராடி சேர்ந்தவன். சேர்ந்த நாள் முதல் கண்ணும் கருத்துமாய் வேலையில் ஈடுபட்டு நல்ல பேர் எடுத்தவன். கிடைக்கும் ஓய்வு நேரத்தில் மட்டும் மிருதுளாவுடன் காதல் புரிந்தான். அவனும் ரெட்டியையே பார்க்க அவர் வாயைத் திறந்தார். ஆங்கிலத்தில்..
“நண்பர்களே.. நாம் நினைத்தது நடந்துவிட்டது. இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுவிட்டார்கள். இன்னும் இரு மாதத்தில் சந்திரோதயன் புறப்பட போகுது. நமது சோதனையில் வெற்றியில் தான் இந்தத் திட்டமே உருவானது. கூடிய சீக்கிரமே நாம் இதைக் கொண்டாடக்கூடிய நாள் வரும். உங்க சோதனைகள் எல்லாம் எப்படி போய்க்கிட்டு இருக்கு?”
சந்தோஷத்தில் முகம் மலர்ந்திருந்த ராஜசேகர் ஆரம்பித்தார்.
“ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயம். சோதனைகள் எல்லாம் இதுவரை வெற்றிகரமாகத் தான் போய்க்கிட்டு இருக்கு. இதுவரை சக்ஸஸ் ரேட் நூறு சதவிகிதம். இன்னும் சில டெஸ்ட் தான் இருக்கு. அதையும் முடிச்சுட்டா போதும். ஜெயம் தான்…”
“கேட்கவே ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. எங்கே நமது ஆராய்ச்சியின் பலன்?”
ராஜசேகரன் காட்டிய திசையில் ஆர்வமாய் பார்த்தார். அங்கே பல சாதனைகள் புரிய போகும் அந்த இயந்திரம் ஏதும் அறியாத குழந்தை போல் அமைதியாய் அந்த மேஜையின் மேல் வீற்றிருந்தது.

3 comments:

பிரதீப் said...

நிஜமாகவே சொல்லுறேன்... இது நீ எழுதின கதை மாதிரியே இல்லை... :) ஹி ஹி ... அவ்வளவு பரபரப்பாக போகுது... பெங்களூரு, டில்லி, ஹைதராபாத்... இப்படி பல ஊரு அதில் பல பேரு அவங்க செய்யும் ஆராய்ச்சி ஒரு கொலை... அடேயப்பா... தேறிவிட்டாய் மதி தேறிவிட்டாய்.

பிரதீப் said...

சொல்ல மறந்துவிட்டேன்... கதையை விட அதுக்கு நீ போட்ட தலைப்பு படம் இருக்குது பாரு... அது டக்கர் ... ராம் கோபால் வர்மா பட போஸ்டர் மாதிரி இருக்கு

மதி said...

ரொம்ப நன்றிண்ணா... எல்லாம் உங்ககிட்டேர்ந்து கத்துக்கிட்டது தான்....


Blogger Templates by Isnaini Dot Com. Powered by Blogger and Supported by ArchiThings.Com - Modern Architecture Design