Sunday, April 18, 2010

உன்னை தற்கொலை செய்யவா?! - பகுதி 1

வழக்கம் போல மு.கு: நீண்ட நாள் கழித்து எழுதுகிறேன். எழுதவே வரவில்லை. அதனால் கதையோட்டப்பிழைகளை பொறுத்தருளவும். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தவறாக பயன்படுத்தப்பட்ட வார்த்தை தான் தலைப்பாகியுள்ளது. தலைப்பை வைத்துவிட்டு கதையை தேடிக்கொண்டிருக்கிறேன்.


செப்டம்பர் மாத பெங்களூர் காலை. இரவு முழுவதும் பெய்த மழைக்கு சாட்சியாக சாலையெல்லாம் கழுவிவிட்டது போலிருந்தது. சாலையெங்கும் லாரி தடங்கள். மழை இன்னும் சரியாக விட்டபாடில்லை. சாறலாய் தூறிக் கொண்டிருந்தது. இதமானதொரு தென்றற்காற்று முகத்தை வருடி சொர்க்கம் இன்னும் இருக்கிறது என கங்கணம் கட்டியது. ஆசுவாசமாய் நடந்து செல்லும் வயதானவர்களும் தொப்பையைக் குறைக்க வேகவேகமாய் நடைபயிலும் இளம்வயது மென்பொருள் வல்லுநர்களும் சாலையெங்கும் நிறைந்திருக்க, மரங்களும் செடிகளும் நிறைந்த பச்சைப்பசேல் என்று கண்ணுக்கு குளிர்ச்சி காட்டிய அந்த பூங்கா வெளியே தன் பல்ஸர் பைக்கை நிறுத்திவிட்டு அவன் நுழைந்த போது காலை சரியாக மணி ஆறைத் தாண்டியிருந்தது.
அவன். மாதவன். இளநிலை பட்டதாரி. லட்சத்திற்கும் மேல் பணியாளர்களைக் கொண்ட அந்த மாபெரும் மென்பொருள் நிறுவனத்தில் என்னவோ செய்து குப்பை கொட்டுபவன். வயது இருபத்தியேழு. உயரம் ஐந்தடி பத்தங்குலம். சிறுவயதிலிருந்த உடற்பயிற்சி முறுக்கேறியிருந்த உடம்பு. களையான முகவெட்டு. யாருக்கும் அடங்க மாட்டேன் என்று அடம்பிடிக்கும் தலைமுடி அழகாய் சுருள் சுருளாய் அழகைக்கூட்டியது. வலது கண்ணோரத்தில் சின்னதாய் முகத்தில் வெட்டு பொருத்தமாயிருந்தது. ட்ராக் சூட்டில் இயற்கை காற்றில் முகம் மலர இருந்த அவன் பூங்கா உள்ளே நுழைந்தவுடன் வழக்கம் போல் நடை பயில ஆரம்பித்துவிட்டான். முடிக்க இன்னும் அரை மணிநேரமாவது ஆகும். அதுவரை….
அதே நேரத்தில் பூங்காவிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தள்ளியிருந்த அடுக்கு மாடி குடியிருப்பு. நகரத்தின் பரபரப்பான பகுதியிலிருந்து சற்றே ஒதுங்கியிருந்தது. குடியிருப்பின் அருகாமையிலேயே பெரிய ஏரி அழகுக்கு அழகு சேர்த்தது. ஏறக்குறைய நூறு வீடுகளுக்கும் மேலிருக்கும் அந்த குடியிருப்பில். பால் பாக்கெட் வாங்கவும் காய்கறி வாங்கவும் ஆண்களும் பெண்களும் நடமாட ஆரம்பித்திருந்தனர். வானம் இருட்டை தொலைத்து நீலத்தை அப்பத் தொடங்கியிருந்தது. பத்து மாடிகளைக் கொண்ட அந்த குடியிருப்பின் மூன்றாவது மாடியில் மூந்நூற்றிரண்டாம் இலக்க வீட்டின் உள்ளே சென்றால் விசாலமான அறை. வலது ஓரத்தில் தொலைக்காட்சிப் பெட்டி. இன்னும் சற்று உள்ளே சென்றால் வலப்பக்கம், இடப்பக்கம் என இரண்டு படுக்கை அறைகள். அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பி செல்லும் அந்தப் பெண்ணைக் கடந்து இடது படுக்கை அறைக்குள் சென்றால் முகத்தில் புன்னகையுடன் அவள் தூங்கிக் கொண்டிருந்த தோரணை அவள் கனவுலகில் சஞ்சாரம் செய்கிறாள் என பட்டவர்த்தனமாக காட்டியது. ‘போய்ட்டு வரேன் டீஈஈஈஈஈ..’ என தோழி கத்தியதில் கூட தூக்கம் கலையாமல் கனவு கண்டு கொண்டிருந்தாள். கடுப்பான தோழி வீட்டை வெளியே பூட்டிவிட்டு செல்ல அவள் கனவில் மாதவன். அவள் சரண்யா. ரம்மியமான தோற்றம். கடல் போல அலை அலையாய் தவழும் கருங்கூந்தல். லட்சணமான கலைபொருந்திய முகம். கனவில் மாதவன் செய்த சில்மிஷங்கள் அவள் முகத்தில் அப்பட்டமாய் வெட்கப்புன்னகையாய் தெரிந்தது. வயது இருப்பத்தியைந்து. எல்லோருக்கும் அடைக்கலம் தரும் பெங்களூர் அவளுக்கும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை தந்திருந்தது. இன்னும் கலையாத தூக்கத்துடன் காலைத் குறுக்காக போட்டு நைட்டியுடன் அவள் படுத்திருந்த தோரணை… அவ்வ்.. இதுக்கு மேல விவரம் வேண்டாம்.
‘என் இதயம் உடைத்தாய் நொறுங்கவே…’ செல்போன் செல்லமாய் சிணுங்கியது. அதற்கு  குறையாமல் சிணுங்கியபடி செல்போன் எடுத்த சரண்யா உற்சாகமானாள்.
“ஹாய் டா.. குர்மார்னிங்… என்ன நடுராத்திரியிலே போன் பண்ணிருக்க..?”
“என்னது.. நடுராத்தியா… சுத்தம் போ.. மணி இப்போ ஆறரையாகறது. இந்த லட்சணத்துல இருந்தா கல்யாணம் பண்ணி குடித்தனம் நடத்துன மாதிரி தான்.. தூக்கம் கூட கலையல போல…”
“ம்ம்.. இன்னும் முழிக்கவே இல்லே.. ச்சே.. செம கனவு… கெடுத்துட்ட…கனவுல…நீ..”
“கனவுல….நான்..?”
“ச்சீ.. வேண்டாம். சுத்த மோசம்பா நீ.”
“கனவை நீ கண்டுட்டு என்னைய திட்டுற. நல்ல கதையால இருக்கு.”
“ஆமாம்.. அப்படித் தான்.. என்ன பண்ணுவ..”
“இப்போவே அலுத்துக்கற.. உன்னைய தான் எங்கம்மா பையன இந்த பொண்ணு நல்லா வச்சு காப்பாத்தும்னு மலை போல நம்பறாங்க..”
“நான் என்ன பண்ண.. எனக்கென்ன வேற ஆளா கிடைக்காது. என் மகனுக்கு நீ தான் ஏத்த பொண்ணுன்னு உங்கம்மா கெஞ்சுனாங்க.. போனா போதுன்னு ஒத்துக்கிட்டேன்”
“அட..அட.. பொண்ணுக்கு உங்க பையன புடிச்சிருக்குனு உங்கப்பா எங்க வீட்டுக்கு நாலஞ்சு தடவ நடையா நடந்தது மறந்துடுச்சா… என்ன?”
“சரி..சரி.. இன்னும் எந்திரிக்க கூட இல்ல.. அதுக்குள்ள எதுக்கு சண்டை. வழக்கமா ஆபிஸ் போனதும் தானே கூப்பிடுவே.. கேட்டா இத தான் இப்போதைக்கு வேலைன்னு சொல்லுவ.. இன்னிக்கு என்ன ஸ்பெஷலா?”
“ம்ம்.. அத மறந்துட்டு பேசிட்டு இருக்கேன் பாரு. இன்னிக்கு என்ன நாள்…?”
“என்ன நாள்.. உன் பொறந்தநாளா? இல்லியே இன்னும் ரெண்டு மாசமிருக்கே… என்னப்பா.. டென்ஷன் பண்ணாம சொல்லு… ஏற்கனவே தூக்கம் கலைஞ்சு போச்சுன்னு இருக்கேன்.. யோசிக்கற நிலைமையிலேயே இல்ல…”
“ம்ம்.. என்னைவிட தூக்கம் முக்கியமாடுச்சா…?”
“நிஜத்தைவிட நீ கனவுல தான் செம ரொமாண்டிக்கா இருக்க… சரி.. சரி.. கோபப்படாதே.. இன்னிக்கு என்ன நாள்… கொஞ்சமா இருக்கற மூளைய யூஸ் பண்ண வைக்காம சொல்லேன்..”
“இன்னிக்கு நாம் பாத்துக்கிட்டு ஐம்பதாவது நாள்.. ஹேப்பி பிஃப்டியத் டே…”
“ஹா.. எல்லா நாளையும் கணக்கு வச்சுப்பியாப்பா.. ஐம்பது நாளாச்சா.. நேத்து தான் வந்து என்ன பொண்ணு பாத்த மாதிரி இருக்கு..”
“ஆமா.. அதே ஜாலி மூட்ல இன்னிக்கு லீவ் போட்டுடு. நான் நிஜத்துலேயும் எவ்ளோ ரொமாண்டிக்கான ஆள்னு காட்டறேன். ஆமா உன் கூட இரண்டு லூசுங்க தங்கியிருக்குமே.. அதெல்லாம் ஆபிஸுக்கு போயாச்சா…?”
“ஏய்.. என் ப்ரண்டுங்கள லூசுங்காத. பிச்சுப்புடுவேன். காமினி ஒரு வாரம் லீவ். ஊருக்கு போயிருக்கா. தனுஜா காலையிலேயே ஆபிஸுக்கு போயிட்டா. பை த வே நெனச்ச நேரத்துக்கெல்லாம் லீவ் போட இது உங்க ஆபிஸ் மாதிரி இல்லே.. ஒரு வாரத்துக்கு முன்னாடியே சொல்லியாகணும் சார். ஸோ.. இன்னிக்கு ப்ளான் கேன்ஸல் பண்ணிடுங்க”
“ஆஹா.. கனவு அது இதுன்னு சொல்லி கிளப்பிவிட்டுட்டு இப்போ என்ன வாபஸ் வாங்கற. அதெல்லாம் முடியாது. இன்னிக்கு நீ லீவ் போட்டேயாகணும். நிறைய ப்ளான்ஸ் வச்சிருக்கேன். ப்ளீஸ்பா எல்லாத்தையும் கெடுத்துடாத…”
“செம ரொமாண்டிக் மூட்ல தான் ஐயா இருக்கார் போல. சரி போ.. வழக்கம் போல வயித்துவலின்னு சொல்லி சமாளிச்சுக்கறேன். இப்போ இருக்கற மேனேஜர் சரியான சிடுமூஞ்சி. தானும் வாழாது அடுத்தவனையும் வாழவிடாது. டைவர்ஸ் கேஸ்.. சரி..விடு. எப்படியோ சமாளிச்சுக்கறேன். எத்தனை மணிக்கு வரே..?”
“இப்போ மணி ஆறு நாப்பது. ஒன்பது மணிக்கு வழக்கமா நீ ஏறுற பஸ்ஸ்டாப் பக்கத்துல நிக்கறேன். வந்துடு..”
“சரிப்பா.. வந்துடறேன். ஆனாலும் ரொம்ப தான் படுத்தற.. இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கறேன்.. அப்புறம் உங்கம்மாகிட்ட சமைக்கறது எப்படினு ட்ரெயினிங் எடுக்கறல்ல… பை”
“ஏய்…ஏய்ய்…”
மாதவன் குரலை உயர்த்தியதும் கொஞ்சலுடன் செல்போனை அணைத்துவிட்டு கொஞ்ச நேரம் தூங்கப்போனாள் சரண்யா. மறுமுனையில் முகத்தில் வழக்கமான மந்தகாசப் புன்னகையுடன் போனை வைத்த மாதவன் ‘என்றென்றும் புன்னகை’யை சீட்டியடித்தபடி தன் பல்ஸரை விரட்டினான்.
எட்டரை மணிக்கெல்லாம் குளித்து முடித்து கிளம்பிய மாதவன் கூட்டமாய் ஊர்ந்து கொண்டிருந்த பெங்களூர் போக்குவரத்து ஜோதியில் கலந்து மெதுமெதுவாய் முன்னேறினான். வண்டியோட்ட எரிச்சலாய் வந்தாலும் ஒரு நாள் முழுக்க சரண்யாவுடன் செலவிடபோவதை நினைத்து மனம் குதூகலித்துக் கொண்டிருந்தது. ஒருவாறாய் போராடி சரண்யாவிடம் சொன்னபடி பேருந்து நிறுத்தத்திற்கு வந்து நின்றான். மணி சரியா ஒன்பதை காட்டியது.
‘வந்துவிடுவாள். எப்போதும் அவள் பத்து நிமிஷம் லேட்.. ம்ம்’ காத்திருக்கலானான். பத்து நிமிஷம் நரகமாய் கழிந்தது. செல்போனை எடுத்து சரண்யாவின் நம்பருக்கு கால் பண்ணினான். அவனுக்காகவே ப்ரத்யேகமாக சரண்யா வைத்திருந்த காலர் ட்யூன் ஒலித்தது. ‘கண்ணுக்குள் கண்ணை வைத்து இல்லை இல்லை..என்றாயே..’ பொறுமையாய் கேட்டு முடிக்கும் வரை போன் எடுக்கப்படவில்லை. மறுமுறை மறுமுறை என்று மூன்று முறையானதும் வெறுத்துப் போனது. இறுதியாக முயற்சித்த போது ‘தாங்கள் தொடர்பு கொண்ட எண் தற்சமயம் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது’ என கன்னட நங்கை காதில் ஓதினாள்.
‘அவள் வீட்டுக்கே போக வேண்டியது தான்’ என முடிவு செய்தவனாய் வண்டியை கிளப்பி கோபத்தை ஆக்ஸிலேட்டரில் காட்டினான். சரண்யாவின் அபார்ட்மெண்ட்டை அடைந்தது வண்டியை நிறுத்திவிட்டு உள்நுழைந்த போது மக்கள் கூட்டமாய் நின்றிருந்தனர். ஆவல் உந்த உள்ளே நுழைந்து பார்த்தவன் அதிர்ந்தான். போட்டிருந்த நைட்டியுடன் குப்புற விழுந்து சுடசுட இரத்தம் கொப்பளிக்க சற்று முன் தான் சரண்யா இறந்திருந்தாள். பக்கத்தில் சுக்கு நூறாய் தெறித்தப்படி அவள் செல்போனும் அவளுடன் உயிரைவிட்டிருந்தது.

2 comments:

Unknown said...

Chill nu start aagi.. sogama held up ayirukku.. :( Good style and narration.. keep going..!!Enna pa.. color color a ezhuthittu .. kadaisila konnuteenga..!?
Ama saranya mobile la.. muthalla..vera ring tone..kadaisiya vera ring tone adichuttu irukku :)

மதி said...

ஹாஹா.. மிக்க நன்றி.. முதல்ல அடிச்சது.. ரிங் டோன்... அடுத்தது காலர்ட்யூன்... ஹிஹி


Blogger Templates by Isnaini Dot Com. Powered by Blogger and Supported by ArchiThings.Com - Modern Architecture Design